ஒளவையார் | பருவம் 3 இயல் 6 | 3 ஆம் வகுப்பு தமிழ் - நல்வழி | 3rd Tamil : Term 3 Chapter 6 : Nalvalli
6. நல்வழி
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்அந் நாளும்அவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லைஎன மாட்டார் இசைந்து
- ஔவையார்
பாடல் பொருள்
ஆற்றில் நீர் வற்றியதால், அதன் வறண்ட மணல்பகுதி, வெப்பத்தால் சூடேறி நடப்பவரின் பாதங்களைச் சுடும். அத்தகைய நிலையிலும் அந்த ஆற்று மணலைத் தோண்டுகின்றபோது, சுரக்கின்ற ஊற்றானது, உலக மக்களுக்கு உணவாய் அமையும். அதுபோல, உயர்ந்த குடிப்பிறப்பில் தோன்றியவர்கள், வறுமைநிலையில் வாடினாலும், தம்மிடம் வந்து பொருள் தருக எனக் கேட்பவர்க்கு இல்லை எனக் கூறாது, தம்மால் முடிந்தவரை கொடுத்து உதவுவார்கள்.
ஆசிரியர் குறிப்பு
நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல நெறிகளைக் கூறுவது, நல்வழி. இந்நூலை இயற்றியவர், ஔவையார். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு மொத்தம் 41 வெண்பாக்கள் அமைந்துள்ளன.