ஔவையார் | பருவம் 1 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் : மூதுரை | 5th Tamil : Term 1 Chapter 2 : Kalvi
இயல் இரண்டு
கல்வி
கற்றல் நோக்கங்கள்
❖ கல்வியின் அவசியத்தை
உணர்வர்
❖ கற்றவர்களின் குணம்
மேம்பட்டு நிற்கும் என்பதை உணர்வர்
❖ பொறுமையால் எதனையும்
சாதிக்க முடியும் என்பதை உணர்வர்
❖ பெயர்ச்சொல்
வினைச்சொல் வேறுபாடு அறிவர்
❖ மொழித்திறன் பெறுவர்
செய்யுள்
மூதுரை
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
- ஒளவையார்
சொல்பொருள்
அடக்கம் - பணிவு
கடக்க – வெல்ல
மடைத்தலை - நீர் பாயும் வழி
அறிவிலர் - அறிவு இல்லாதவர்
கருதவும் - நினைக்கவும்
உறுமீன் - பெரிய மீன்
பாடல் பொருள்
மடையில் பாய்கின்ற நீரில் ஓடுகின்ற சிறுமீன்கள் ஓடிக்
கொண்டிருக்க, கொக்கானது
தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கும்.
அதுபோலத் தமக்குரிய காலம் வரும்வரை சிலர் அடங்கியிருப்பார்கள். அவர்களை
அறிவில்லாதவர் என எண்ணி வெல்ல நினைக்க வேண்டா.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலை இயற்றியவர் ஔவையார். இவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலிய பிற நீதிநூல்களையும் இயற்றியுள்ளார். முதுமையான அறிவுரைகளைக் கொண்டது, மூதுரை. இந்நூலுக்கு வாக்குண்டாம் என மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. இந்நூலில் நீதிக்கருத்துகள் எளிமையான நடையில் கூறப்பட்டுள்ளன.