பருவம் 3 இயல் 8 | 4 ஆம் வகுப்பு தமிழ் - உறவுமுறைக் கடிதம் | 4th Tamil : Term 3 Chapter 8 : Uravu murai kaditham
8. உறவுமுறைக் கடிதம்
எண். 4, தில்லை
நகர்,
கடலூர்.
20.03.2020
அன்புள்ள இளவேனில்,
நான் நலம், நீயும் அப்படித்தானே? உன்னோடு சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஆசை, என்னவென்று
அறிந்தால் நீயும் மகிழ்ச்சி அடையவாய். என் பள்ளியில் "பாரம்பரிய விளையாட்டு விழா
நடைபெற்றது, உள்ளரங்கு விளையாட்டுகளும் வெளியரங்கு விளையாட்டுகளுமாய்க்
களைகட்டியது விழா. நாம் எத்தனை விளையாட்டில் வேண்டுமென்றாலும் பங்கு பெறலாம்.
நான் பாண்டிஆட்டம், கபடி முதலிய வெளிவிளையாட்டுகளிலும்
தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி முதலிய
உள்விளையாட்டுகளிலும் கலந்துகொண்டேன். உடலுக்கு மட்டுமன்று; அறிவுக்கும்
ஆற்றல் தரும் விளையாட்டுகள் நம் தமிழக விளையாட்டுகள், பாண்டி
ஆட்டம் ஒருமுக திறன், கூர்மைப் பண்பு, குதிதிறன்
ஆகியவற்றைத் தருகிறது.
“பலிஞ்சடுகுடு, சடுகுடு, சடுகுடு”
ஊசி ஊசி கம்மந்தட்டு, ஊட்டப் பிரிச்சிக் கட்டு,
காசுக்கு ரெண்டு தட்டு,
கருணைக் கிழங்குடா, தோலை உரியடா,
தொண்டையில வையடா..வையடா..வையடா
என்று பாடியபடி நாங்கள் ஆடிய கபடி, பார்வையாளரையும் மகிழ்ச்சிப்படுத்தியது.
'பாடலோடு ஆடல்" தெரியும். பாடலோடு விளையாட்டு எங்களுக்குப்
புதிய அனுபவமாக இருந்தது.
பிற்பகலில் நான் பல்லாங்குழி ஆடினேன். என் சிந்தனையைச்
சிதறாமல் வளர்க்கும் ஆற்றல்மிகு விளையாட்டு அது. இருப்பவரிடம் இருந்து இல்லாதவர்க்குக்
கொடுக்கும் நற்பண்பை உணர்த்துகிறது. தாயவிளையாட்டில் என் கண்கள் தாயத்தின் மீதே இருந்தன.
விழும் புள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏறுவதும் இறங்குவதுமாய்..... அப்பப்பா.....
என் ஆர்வத்தைத் தூண்டியது. ஏற்றத்திற்கான நல்ல வழிகளையும், இறக்கத்திற்கான தீய வழிகளையும்
தெரிந்து கொண்டேன். வாழ்வின் அவசியமான ஒழுக்கத்தை அறிந்துகொள்ளும் சரியான விளையாட்டு
அது.
"கல்லாட்டம்", ஐந்தாங்கல் போன்ற விளையாட்டுகள்
சீனா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலும்
விளையாடப்படுகின்றன. தூக்கிப்போட்டு விளையாடும்போது ''கவனச் சிதறல்'
வராமல் ஒருமுகப்படுத்தி வெற்றி பெறுதல் பயிற்சி ஆகிறது. அடுத்த கல்லில்
விரல்படாது எடுத்து ஆடுகையில், விரலின் பங்கோடு எண்ணமும் சரியாகப்
பங்காற்றுகிறது. கைகளுக்கு வலிமை சேர்க்கிறது.
'கரும்பு தின்னக் கூலியா?'
என்று சொல்வார்களே அதுபோல், எனக்கு விருப்பமான
விளையாட்டுகளை எல்லாம் ஆசை தீர விளையாடினேன். அந்த நாள் முழுவதும் சோலையில் சுற்றும்
தேனீபோல மகிழ்வுடன் விளையாடினேன். என்னோடு நீயில்லாதது மட்டும் சிறு வருத்தம் நீயும்
உன் பள்ளியில் கொண்டாடப் போகும் இதுபோன்ற விழாவில் கலந்துகொண்டு இன்புற வேண்டும். நம்
பாரம்பரிய விளையாட்டுகள் பெருமையின் அடையாளம் மட்டுமன்று நன்மையின் விளைநிலமும் ஆகும்.
இக்கடிதம் குறித்து உன் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
குறள்செல்வி
உறை மேல் முகவரி:
தி. இளவேனில்
எண். 2/10, கீழ
மாசி வீதி,
மதுரை.