இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam
வாழ்வியல்
இயல் எட்டு
திருக்குறள்
படைச்செருக்கு
1. கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.*
பொருள்: காட்டுமுயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக்
குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும். (பெரிய முயற்சியே பெருமை தரும்.)
அணி: பிறிதுமொழிதல் அணி
2. பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு.
பொருள்: பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்று கூறுவர்.
பகைவருக்கும் துன்பம் வரும்போது, உதவி செய்தலை அந்த
ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
நட்பு
3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு*
பொருள்: நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோலப் பண்புடையவர்
நட்பு பழகப் பழக இன்பம் தரும்.
அணி: உவமை அணி
4. நகுதல் பொருட்டுஅண்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.
பொருள்: நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு
மட்டும் உரியது அன்று; நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத்
திருத்துவதற்கும் உரியது.
நட்பு ஆராய்தல்
5. ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
பொருள்: மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பாராமல் ஒருவருடன் கொண்ட
நட்பு தாம் சாகும் அளவுக்குத் துன்பம் தரும்.
6. கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
பொருள்: நமக்கு வரும் துன்பத்தினாலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே
நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும்.
மானம்
7. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
பொருள்: செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும்.
8. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
பொருள்: மலையளவு பெருமை உடையவராக இருந்தாலும் குன்றிமணியளவு
தவறு செய்தால் அவரது பெருமை அழிந்துவிடும்.
பண்புடைமை
9. பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.*
பொருள்: பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இவ்வுலகம்
இன்னும் இயங்குகிறது; இல்லாவிட்டால் மண்ணுக்குள் புதைந்து அழிந்திருக்கும்.
10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந்து அற்று,
பொருள்: தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும்.
அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்.
அணி: உவமையணி