விலங்கியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் | 11th Zoology : Chapter 7 : Body Fluids and Circulation
அலகு - III
பாடம் - 7
உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்
பாடஉள்ளடக்கம்
7.1 உடல் திரவங்கள்
7.2 இரத்தக்குழாய்கள் - தமனிகள், சிரைகள் மற்றும் இரத்த நுண்நாளங்கள்
7.3 சுற்றோட்டப் பாதைகள்
7.4 மனிதச் சுற்றோட்ட மண்டலம்
7.5 இரட்டை சுற்றோட்டம்
7.6 இதயச்செயல்களை நெறிப்படுத்துதல்
7.7 சுற்றோட்ட மண்டலக் கோளாறுகள்
7.8 நோயைக் கண்டறிதலும் சிகிச்சை முறையும்
வீச்சுக் கொள்ளளவு சிரைத்தொகுப்பில் இருந்து திரும்பும் இரத்தத்தைச் சார்ந்தது.
கற்றலின் நோக்கம்:
• உடல் திரவங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்
• இரத்தச் செல்கள், பலவகை இரத்த வகைகள் மற்றும் இரத்தம் உறைதலுக்கான காரணிகளை அடையாளம் கண்டு விளக்குதல்.
• இரத்தக் குழாய்களை வேறுபடுத்தி அவற்றின் பண்புகளை அறிதல்.
• மனிதச் சுற்றோட்ட மண்டலத்தை அறிந்து கொள்ளுதல்.
• இதயச் சுழற்சியைப் புரிந்து கொண்டு அதை எலக்ட்ரோ கார்டியோ கிராமின் முகடுகளுடன் தொடர்புபடுத்துதல்.
• இரத்த ஓட்ட மண்டலத்தின் கோளாறுகளை (அசாதாரண நிலைகளை) கண்டறிதல்
விலங்குகள் குறிப்பாகப் பாலூட்டிகள் போன்ற பெரிய விலங்குகள் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்குகின்றன. விலங்குகள் இடப்பெயர்ச்சியைச் சார்ந்து உணவைப் பெறுகின்றன. இச்செயல் ஆற்றலைப் பயன்படுத்தி நடைபெறுகிறது. ஆற்றல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் நரம்பு மண்டலம் அனுப்பும் நரம்புத் தூண்டல்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. உயிருக்குத் தேவையான ஆக்ஸிஜன், மற்றும் உணவுப்பொருட்களை அனைத்து உயிருள்ள செல்களுக்கும் வழங்க வேண்டும். அங்கு நடைபெறும் வளர்சிதை மாற்றத்தின் விளைவாகத் தோற்றுவிக்கப்படும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கழிவுப் பொருள்கள் போன்றவை நீக்கப்பட வேண்டும். எனவே, செல்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பொருட்களைக் கடத்த நேர்த்தியான ஒரு கடத்தும் செயல்முறை தேவைப்படுகின்றது. வெவ்வேறு விலங்குகளில் வெவ்வேறு முறையில் இப்பொருள்கள் கடத்தப்படுகின்றன. சிறிய விலங்குகளான கடற்பஞ்சுகளிலும் குழியுடலிகளிலும் சுற்றோட்ட மண்டலம் கிடையாது. ஆனால் அவற்றைச் சூழ்ந்துள்ள நீர், உடற்குழிப் பகுதிகளுக்குள் சென்று வெளியேறும் வகையில் அவற்றின் உடலமைப்பு உள்ளது. இதனால் உட்சுழலும் நீரில், அவ்வுயிரினங்களின் செல்கள் தங்களிடம் உள்ள பொருட்களை எளிய விரவல் முறையில் பரிமாறிக்கொள்கின்றன. சிக்கலான உடலமைப்பைக் கொண்ட விலங்குகளில் பொருட்களைக் கடத்தச் சிறப்பு திரவமும், பெருமளவில் பொருட்களைப் பெரும் பாய்வு முறையில் (Bulk flow) விரைந்து கடத்த அவற்றின் உடலினுள் நன்கு கட்டமைக்கப்பட்ட சுற்றோட்ட மண்டலமும் உள்ளன. அதாவது சுவாசம், உணவூட்டம் மற்றும் கழிவு நீக்கம் போன்ற உடற்செயலியல் நிகழ்வுகளுக்குப் பெரும் பாய்வு முறை அடிப்படையாக அமைகிறது. எளிய விரவல் முறையை விட இம்முறையினால் பொருள்கள் தொலைவிலுள்ள உறுப்புகளுக்கும் விரைவாக எடுத்துச்செல்லப்படுகின்றன. மனிதனின் இரத்த ஓட்ட மண்டலத்தின் மூலம் ஒரு மில்லி லிட்டர் இரத்தமானது 60 வினாடிகளில் இதயத்திலிருந்து பாதம் வரை சென்று மீண்டும் இதயத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறது. இதே அளவு இரத்தம் விரவல் முறை மூலம் செல்ல 60 ஆண்டுகள் தேவைப்படலாம்.
சுற்றோட்ட மண்டலத்தின் மூலம் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு நுரையீரல் மற்றும் திசுக்களுக்கிடையே பரிமாறப்படுகிறது. ஊட்டப் பொருள்கள் செரிமான மண்டலத்திலிருந்து கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. திசுக்களிலிருந்து கழிவுப் பொருள் இரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாகச் சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்றப்படுகிறது. மேலும், இலக்கு உறுப்புகளுக்கு ஹார்மோன்களைக் கடத்தும் பணியையும் சுற்றோட்ட மண்டலம் செய்கின்றது. உடல் திரவங்களின் சமநிலை பேணுதல் மற்றும் உடல் வெப்பநிலை பராமரித்தல் (வெப்பப் பரிமாற்றம்) போன்றவற்றையும் சுற்றோட்ட மண்டலம் மேற்கொள்கின்றது.
இதயத்திற்கும் மூளைக்குமான இரத்த ஓட்டத்தை இரத்த சுற்றோட்ட மண்டலத்தின் சமநிலை ஒழுங்குபாடு (Homeostatic regulation) நிலை நிறுத்துகிறது. நரம்பு மண்டலத்திலிருந்து பெறப்படும் சமிக்ஞைகள், இரத்த அழுத்தத்தைத் திடீரெனக் குறைப்பதால், மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறைந்து மயக்கம் (Vasovagal syncope) ஏற்படுகிறது. இதயம், மற்றும் இரத்தக் குழாய்கள் ஒன்றிணைந்து செயலாற்றி இம்மாதிரியான சிக்கல்களை எவ்வாறு தடுக்கின்றன என்பதை இப்பாடத்தில் கற்கலாம்.