நோய்கண்டறிதலும் அதற்கான சிகிச்சை முறையும் (Diagnosis and Treatment)
ஆஞ்சியோகிராம் - (இதயக்குழல் வரைபடம் - Angiogram)
ஆஞ்சியோகிராம் சிறப்பு சாயத்தினை இதயத்தசை இரத்தக் குழலினுள் செலுத்தி அதனுள் இரத்தம் எவ்வாறு பாய்கிறது என்பதை X- கதிர் மூலம் ஆராய்ந்து கண்டறிதலே ஆஞ்சியோகிராம் ஆகும். இப்படத்தால் உடல் முழுவதும் உள்ள இரத்தக் குழாய்களின் இயல்புக்கு மாறான நிலையைக் கண்டறியலாம்.
குறிப்பு
சுருள் இரத்த நாளங்கள் (varicose veins): சிரை நாளங்கள் அதிகமாக விரிவடைவதால் தளர்ந்து (varicose veins) போகின்றன. இதனால் சிரைகளில் உள்ள வால்வுகள் இரத்தம் இதயத்தை நோக்கிச் செல்வதைத் தடுக்கின்றன. சிரைகள் மீள்தன்மையை இழந்து கூட்டமாகச் சுருட்டிக் கொள்கின்றன. இத்தகைய முடிச்சுகள் பொதுவாகக் கால்கள், மலக்குடல் மலவாய் பகுதிகள் (மூலநோய் haemorrhoids), உணவுக்குழல் மற்றும் விந்தக நாளங்கள் (spermatic cord) போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.
எம்போலிசம் (Embolism): எம்போலிசம் என்பது இரத்த நாளங்களில் தோன்றும் அடைப்பு ஆகும். உறைந்த இரத்தத் துணுக்கு, எலும்பு துணுக்கு, காற்றுக்குமிழ் போன்ற இயல்புக்கு மாறான பொருள்கள் இரத்த நாளங்களில் தோன்றும் அடைப்புக்குக் காரணங்களாகும். இந்த அடைப்பு நுரையீரல், இதயத்தமனி அல்லது கல்லீரலில் தங்கினால் இறப்பு ஏற்படும்.
குருதிநாளப் பையாக்கம் (Aneurysm)
மிகவும் பலவீனம் அடைந்துள்ள தமனி அல்லது சிரைகளின் சுவர்கள் விரிந்து ஒரு பலூன் போன்ற பையாகிறது. இதற்குக் குருதி நாளப்பையாக்கம் என்று பெயர். சிதையாத நிலையிலுள்ள போது இப்பை அருகிலுள்ள திசுக்களின் மேல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, அல்லது வெடிக்கும் போது திசுக்களில் அதிகப்படியான இரத்தப் போக்கை ஏற்படுத்துகிறது.
அதிரோஸ்கிலெரோசிஸினால் குறுகலடைந்த இதயத்தசைத் தமனிகளை விரித்து நீட்சியடையச் செய்தலே ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படுகிறது. இம்முறையில் ஆபத்து மிகவும் குறைவு. இதற்காக ஒரு சிறிய, நீண்ட, பலூன் கத்தீட்டர் (மெல்லிய கம்பி போன்ற அமைப்பு) அடைபட்ட தமனியுள் செலுத்தப்படுகிறது. கத்தீட்டருடன் இணைக்கப் பட்ட காற்று நீக்கப்பட்ட பலூனை அடைப்பு உள்ள அல்லது குறுகலாகிய இதயத்தைசைத் தமனியினுள் செலுத்தி பலூனை விரிவடையச் செய்யும்போது தமனிச்சுவரும் சேர்ந்து விரிகிறது. இதன் பிறகு பலூனும் கத்தீட்டரும் அகற்றப்படுகின்றன. ஸ்டென்ட் எனப்படும் உலோகத்தாலான சிறிய சுருள் கம்பி போன்ற அமைப்பு இரத்தக் குழாயினுள் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் வைக்கப்படுகிறது. இந்தச் சுருள் கம்பியானது தமனியைத் திறந்த நிலையிலும், இரத்தம் பாய்வதற்கு ஏதுவாகவும் வைக்கிறது. இரத்தக் குழல்களில் மீண்டும் அடைப்பு ஏற்படாமலிருக்க வேதிப்பொருட்களை மெதுவாக வெளியேற்றும் ஸ்டென்ட்கள் இப்போது கிடைக்கின்றன.
இதயத்திற்கு இரத்தத்தை அளிக்கும் இதயத்தசைத் தமனிகள் சில பற்றுப்படிவுப் பொருட்களால் (plaque) (கொழுப்புப் பொருள்கள் சேர்தல், கொலஸ்ட்ரால் மற்றும் இதர பொருள்கள்) அடைப்பிற்குள்ளாகும் நிலையில் (அதிரோஸ்கிலெரோசிஸ்) அவர்களுக்கு இரத்தக்குழல் மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வறுவைச் சிகிச்சைக்குப் பின் இதயத்தசைத் தமனிக்குள் இரத்த ஓட்டம் அதிகரித்து மார்புவலியிலிருந்து விடுபடுகிறார்கள். உடலின் வேறொரு பகுதியிலிருந்து குறிப்பாக கால் பகுதிகளிலிருந்து பெற்ற நல்ல நிலையில் உள்ள இரத்தக் குழலைப் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மாற்றாகப் பொருத்திப் புதிய பாதை அமைக்கப்பட்டு இரத்த ஓட்டம் சீராக்கப்படுகிறது. இது மிகவும் பெரிய சிகிச்சையாகக் கருதப்படுகிறது. அறுவை சிகிச்சையின்போது சுவாச – இரத்த ஓட்டப்பணியை இதய நுரையீரல் கருவி (Heart lung machine) (ஆக்ஸிஜன் வழங்கிக் கருவி) மேற்கொள்கிறது. அறுவைசிகிச்சை முடிந்த பிறகு புதிதாக இணைக்கப்பட்ட இரத்தக் குழல் இயல்பான இரத்த ஓட்டத்துடன் இணைக்கப்பட்டு இரத்த ஓட்டம் எளிதாகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் பல மில்லியன் மக்கள் இதய நோய்களினால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். பல நோயாளியின் ஒரே நம்பிக்கை இதய மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே.
அறுவை சிகிச்சை மூலம் ஒருவரின் பழுதடைந்த அல்லது நோயுற்ற இதயத்தினை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக மற்றொரு இதயத்தை மாற்றிப் பொருத்துவது. இதய மாற்று சிகிச்சை எனப்படும். இதயச்செயலிழப்பு அல்லது தீவிர இதயத்தசை இரத்தக்குழல் நோய் உள்ள ஒருவருக்கு எந்த மருத்துவமோ அல்லது அறுவை சிகிச்சை முறையோ உதவாத நிலையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக, மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து (உறுப்புக்கொடையாளி) எடுக்கப்பட்ட செயல்படும் நிலையில் உள்ள இதயம் பாதிக்கப்பட்ட இதயத்தினை உடையவருக்குப் பொருத்தப்படுகிறது. இவ்வாறு இதயமாற்றுஅறுவைசிகிச்சை செய்யப்பட்டவரின் சராசரி வாழ்நாள் அதிகரிக்கின்றது.
ஜேம்ஸ் இலாம் (James Elam) மற்றும் பீட்டர் சாஃபர் (Peter Safer) ஆகிய இருவரும் வாயோடு வாய்வைத்து உயிர்ப்பித்தல் என்னும் முறையை முதன்முதலில் 1956-ம் ஆண்டு பயன்படுத்தினர். இதய நுரையீரல் உயிர்ப்பித்தல் இது நீரில் மூழ்கிவிடுதல், மின்தாக்கம், அல்லது மாரடைப்பு போன்ற நெருக்கடி நேரங்களில் மூச்சும் இதயத்துடிப்பும் திடீரென நின்று விடும்போது செய்யப்படும் அவசரச் சிகிச்சையாகும். இதய நுரையீரல் உயிர்ப்பித்தல் முறையானது இதயத்துடிப்பு நின்றுவிட்ட ஒருவரின் வாயின் மேல் வாய் வைத்து ஊதிச் சுவாசத்தினை மீட்கவும், பாதிக்கப்பட்டவரின் நெஞ்சை அழுத்தி முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் செல்லவும் உதவுகிறது. மூளைச்சேதம் அல்லது மரணத்தை தவிர்க்க மூச்சு நின்ற 4-6 நிமிடங்களுள் இம்முறையை மேற்கொள்ள வேண்டும். இதய நுரையீரல் உயிர்ப்பித்தலுடன் பிறழ்துடிப்பு நீக்கமும் (Defibrillation) செய்யப்படுகிறது. இம்முறையில் பாதிக்கப்பட்டவருக்குச் சிறிய மின் அதிர்ச்சி (Electric shock) மார்பு மீது அளித்து இதயம் தொடர்ந்து செயல்பட வைக்கப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
முதல் இதயமாற்று அறுவை சிகிச்சை 1959ம் ஆண்டு செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் பேரா. கிறிஸ்டியன் பெர்னார்டு 1967ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி கேப் டவுனில் உள்ள க்ரூட் ஷீர் மருத்துவமனையில் மனித இதயமாற்று அறுவை சிகிச்சையினைச் செய்தார். இந்தியாவில் முதன் முதலில் 1994ம் ஆண்டு ஆகஸ்டு 3ம் தேதி Dr. அனங்கிப்பள்ளி வேணுகோபால் என்பவர் AIIMS மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையினைச் செய்தார்.