இந்தியப் பொருளாதாரம் - 1991ஆம் ஆண்டுக்கு முந்தைய முக்கிய தொழிற் கொள்கைகள் | 11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence
1991ஆம் ஆண்டுக்கு முந்தைய முக்கிய தொழிற் கொள்கைகள்
ஆசியாவின் மூன்றாவது முக்கியப் பொருளாதாரம் இந்தியாவாகும். 70 ஆண்டு கால சுதந்திர வாழ்க்கை இந்தியாவின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தொழிற்கொள்கை
1948, 1956, 1977, 1980, 1990 & 1991
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறிப்பாக தொழில் மயமாதலைச் சார்ந்துள்ளது. சுதந்திரம் அடைந்த போது இந்தியா பலவீனமான தொழில் அடிப்படையைப் பெற்றிருந்தது. ஆகையால், சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய காலத்தில், இந்திய அரசு வலிமையான தொழில் அமைப்பை உருவாக்குவதற்கான சிறப்பு வலியுறுத்தல்களை மேற்கொண்டது. 1948 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட தொழிற் கொள்கை தீர்மானங்கள் சிறு மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களை முன்னேற்றுவதற்கான அவசியத்தை எடுத்துக்கூறியன.
இந்திய அரசு தொழில் மயமாதலின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை உணர்ந்தது. ஆகையால் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்றுதனது முதல் தொழிற்கொள்கையை அறிவித்தது. இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கம் இந்தியாவில் கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துதலாகும்.
தொழிற்கொள்கைகள்
தொழிற்கொள்கை 1948
மைய அரசின் முற்றுரிமை : இரயில்வே, இராணுவத்தளவாடங்கள், அணு ஆற்றல், தபால்துறை போன்றவை இந்திய அரசின் முற்றுரிமையின் கீழ் செயல்படும். மாநில அரசின் முற்றுரிமை : இயற்கை வளங்களான நிலக்கரி, எஃகு, விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு, வாகன உற்பத்தி, கம்பியில்லா தொடர்பு சாதனங்கள், மற்றும் எண்ணெய் வளங்கள் போன்றவை மாநில அரசின் முற்றுரிமையின் கீழ் செயல்படும்.
ஒழுங்குப்படுத்தப்படாத தனியார் அமைப்புகள் : மேற்காண் இரண்டில் உள்ளடங்காத ஏனைய தொழில்களில் தனியார் அமைப்புகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் ஈடுபடலாம்.
1. இந்தியத்தொழில்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. அவை பொதுத்துறை (மூலத்தொழில்கள்), பொது மற்றும் தனியார்துறை (முக்கிய தொழில்கள்), கட்டுப்படுத்தப்பட்ட தனியார் துறை, தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள்.
2. இக்கொள்கை குடிசைத் தொழில்கள் மற்றும் சிறிய அளவிலான தொழில்களைப் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டது.
3. இருப்புப் பாதைகள் மற்றும் இரும்புத்தாது முதலான கனிம வளங்களுக்கான பிரத்தியேக உரிமையில் மாநில மற்றும் மத்திய அரசுகள் ஏகபோகம் பெற்று இருந்தன (ஆனால் இப்போது நிலைமை மாறிக்கொண்டு வருகிறது)
4. இந்திய அரசு, பிற நாடுகளிலிருந்து கிடைக்கக் கூடிய வெளிநாட்டு முதலீட்டின் முக்கியத்துவத்தை ஊக்குவித்தாலும் அதன் முழுக் கட்டுப்பாடு இந்தியர்களின் கரங்களிலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தது.
தொழிற்கொள்கை 1956
மகலனோபிசின் வளர்ச்சி மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இது நீண்டகால பொருளாதார வளாச்சிச்கு கனரக தொழில்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. தொழிற்கொள்கை 1956ல் தொழில்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன.
17-தொழில்கள் :
இரயில்வே, வான்வழி போக்குவரத்து, இராணுவத் தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகள், இரும்பு மற்றும் எஃகு, அணு ஆற்றல் போன்ற தொழில்கள் இதில் அடங்கும்.
12-தொழில்கள் : மாநில அரசு சொந்தமாகக் கொண்டிருக்கும் இந்த தொழில்களுக்கு தனியார்துறை துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது,
மூன்றாவது பிரிவு: மேற்காண் தொழில்கள் தவிர்த்து ஏனைய தொழில்கள் தனியார்துறையோ அல்லது அரசுத்துறையோ வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்பட தடையில்லை.
1. 1956ஆம் ஆண்டு தொழிற்துறை தீர்மானக் கொள்கை, பொதுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதே நேரத்தில் தனியார் துறையையும் நியாயமான முறையில் வழி நடத்தியது.
2. அரசாங்கம் குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில்களை ஊக்குவித்து நேரடி மானியம் அளித்தது, பெருமளவு உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த பல்வேறு விதமான வரிகளையும் அரசு விதித்தது.
3. வளர்ச்சிகளால் வட்டார வேற்றுமையைக் குறைக்க இந்த தொழிற் கொள்கை வலியுறுத்தியது.
4. இந்திய முதலீடுகளின் தேவையை அரசு புரிந்திருந்தது.
1. புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய நோக்கமாவது. இந்திய பொருளாதாரத்தை உலகமயமாக்கல் மூலம் அங்காடியை திறந்து விடுதல் ஆகும்.
2. இதன் மூலம் இந்திய அங்காடிக்கு ஒரு புதிய திசையை வழங்குவதாகும்.
3. புதிய பொருளாதாரக் கொள்கை பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்தி பணவீக்கத்தை குறைப்பதிலும் அந்நிய செலாவணி இருப்புகளை அதிகரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறது