இந்தியப் பொருளாதாரம் - இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் | 11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence
இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள்
பொருளாதார திட்டமிடலின் நோக்கம் வரையறுக்கப்பட்ட அளவிலான வளங்களைத் திறம்படப் பயன்படுத்தி விரும்பிய இலக்குகளை அடைதலாகும். ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் பொருளாதாரத் திட்டமிடலை மேற்கொள்ளும் முறை ரஷ்யாவிடமிருந்து [முன்னால் சோவியத் ரஷ்யா (USSR)] தருவிக்கப்பட்டது. இதுவரை இந்தியா 12 ஐந்தாண்டுத் திட்டங்களைத் செயல்படுத்தியுள்ளது. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டமே(2012-2017) இறுதியான ஐந்தாண்டுத் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் (National Institution for Transforming India) மூலம் திட்டமிட முடிவு செய்துள்ளது.
முதல் ஐந்தாண்டுத்திட்டம் (1951-1956)
• இது ஹாரேட் டாமர் (Harrod-Domar) மாதிரியை அடிப்படையாக் கொண்டது.
• இதன் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மை முன்னேற்றமாகும்.
• இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கைவிட அதிகம்) வெற்றி பெற்றது.
இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் (1956-1961)
• இத்திட்டம் PC மஹலநோபிஸ் (P.C. Mahalanobis) மாதிரியை அடிப்படையாகக் கொண்டது
• இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதாகும்.
• இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.
மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டம் (1961-1966)
• இத்திட்டம் "காட்கில் திட்டம்" (Gadgil) என்றும் அழைக்கப்பட்டது.
• இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்.
• சீன - இந்தியப்போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6% ஐ அடைய இயலவில்லை .
திட்ட விடுமுறை காலம் (1966-1969)
• இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியே இத்திட்ட விடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும்.
• இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
நான்காம் ஐந்தாண்டுத்திட்டம் (1969-1974)
• இத்திட்டத்தின் இரண்டு முக்கிய நோக்கங்கள் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதலாகும்.
• இத்திட்டம் அதன் இலக்கான 5.7% வளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
ஐந்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (1974 - 1979)
• இத்திட்டத்தில் வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
• ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4% ஐ விட அதிகமாக 4.8% வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.
• இத்திட்டத்திற்கான முன் வரைவு D.P.தார் (DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978 ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே) கைவிடப்பட்டது.
சுழல் திட்டம்
1978-79 ஆம் ஆண்டு ஒரு வருட காலத்திற்காக இச்சுழல் திட்டம் தொடங்கப்பட்டது. இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கியது.
ஆறாம் ஐந்தாண்டு திட்டம் (1980-1985)
• இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். "வறுமை ஒழிப்பு" (GARIBI HATAO) என்பதே இதன் இலட்சியமாகும்.
• இது முதலீட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டது.
• இத்திட்டதின் வளர்ச்சி இலக்கு 5.2%. ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.
ஏழாம் ஐந்தாண்டுத்திட்டம் (1985-1990)
• இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல். ஆகியவற்றை உள்ளடக்கியது.
• முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாகதனியார்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.
• இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.
ஆண்டுத் திட்டங்கள்
மைய அரசில் நிலையற்ற அரசியல் சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. எனவே 1990 - 91 மற்றும் 1991 - 92 ஆம் ஆண்டுகளுக்கு இரு ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)
• இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனித வள மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
• இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
• இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.6%. ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.)
ஒன்பதாம் ஐந்தாண்டுத்திட்டம் (1997-2002)
• சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது
• இத்திட்டகால இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை. இந்தியப் பொருளாதாரம் 5.6% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.
பத்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (2002-2007)
• இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.
• இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக்க குறைக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது.
• இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.0%. ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.
பதினொன்றாம் ஐந்தாண்டுத்திட்டம் (2007-2012)
• இதன் முக்கிய நோக்கம் "விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்"
• இதன் வளர்ச்சி இலக்கு 8.1%. ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே.
பனிரெண்டாம் ஐந்தாண்டுத்திட்டம் (2012-2017)
• இதன் முதன்மை நோக்கம் "விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே" ஆகும்.
• இதன் வளர்ச்சி இலக்கு 8% ஆகும்
நாடு விடுதலை அடைந்ததிலிருந்து இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஐந்தாண்டு திட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன எனக் கொள்ளலாம். பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி, எவ்வாறு அதிகபட்ச பொருளாதாரப் பலன்களைப் பெறலாம், என்று இத்திட்டங்கள் வழிகாட்டியுள்ளன. இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்கள் முறையை சோவியத் ரஷ்யாவிடமிருந்து எடுத்துக்கொண்டது என்று தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.
நிதி ஆயோக்
திட்டக்குழு என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் அமைப்பு 2015ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இது நீடித்த நிலையான வளர்ச்சியை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் செயல்படுத்தவும் செயல்படும். நிதி ஆயோக் என்பது இந்திய அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் கண்காணிக்கும் அறிவு மையமாகும். தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறைகளையும், புதிய கொள்கைகளையும் ஏற்படுத்தவும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கான ஆதரவையும் தரும். இது சார்ந்த சாதனைகளை புரிந்து கொள்ள தனிப்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ளவேண்டும்.