இந்தியப் பொருளாதாரம் - தொழில் துறைச் சீர்திருத்தங்கள் | 11th Economics : Chapter 9 : Development Experiences in India
தொழில் துறைச் சீர்திருத்தங்கள்
புதிய தொழிற்கொள்கையை ஜுலை 24, 1991ஆம் ஆண்டில் பாரத பிரதமர் அறிவித்தார். புதிய கொள்கை தொழில்துறையில் கணிசமாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. தொழிற்கொள்கையின் முதன்மையான நோக்கங்கள் அதிகாரத்தின் பிடியில் இருக்கும் பல தொழில்களை முன்னேற்றுவது, வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் உள்ள கட்டுப்பாடுகளை ஒழிப்பது. MRTP சட்டக் கட்டுப்பாடுகளிலிருந்து உள்நாட்டு நிறுவனங்களை தளர்த்துவது, உற்பத்தித் திறனிலும், வேலைவாய்ப்பிலும் நீடித்த வளர்ச்சியைப் பராமரிப்பது மற்றும் சர்வதேச போட்டிகளை எதிர்கொள்வது ஆகியனவாகும்.
தொழிற்கொள்கை பின்வரும் மாற்றங்களை தொழில் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
1. தொழில் உரிமங்கள் விலக்கம் செய்யப்பட்டன.
2. தொழில் துறையில் உள்ள ஒதுக்கீட்டை நீக்குதல்.
3. பொதுத்துறைக்கொள்கை (கட்டுப்பாடுகள் நீக்கம் மற்றும் சீர்திருத்தங்கள்) கொண்டுவரப்பட்டது.
4. MRTP சட்டம் ஒழிப்பு
5. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையும் வெளிநாட்டு தொழில்நுட்பக் கொள்கையும் கொண்டுவரப்பட்டது.
1. தொழில் உரிம விலக்களித்தல்
1991ஆம் ஆண்டின் புதிய தொழிற்கொள்கையின் மிக முக்கிய அம்சம் என்னவெனில், தொழிலிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்கு கொண்டுவருதலாகும். தொழில் உரிமைக் கொள்கையின் கீழ் தனியார் துறை தொழில் துவங்க உரிமம் பெறவேண்டியிருந்தது.
2. தொழிற்துறையில் உள்ள ஒதுக்கீட்டை நீக்குதல்
முன்னதாக மூலதன தொழிற்சாலைகளும், முக்கிய தொழிற்சாலைகளும் பொதுத்துறைக்கென ஒதுக்கப்பட்டன. தற்போது தொழிற் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பெரும்பாலான தொழில்கள் தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டன. புதிய தொழிற் கொள்கையின் கீழ் அணுசக்தி, சுரங்கம் மற்றும் இரயில்வே ஆகிய மூன்று துறைகள் மட்டுமே பொதுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த மூன்று துறை தவிர ஏனைய துறைகள் தனியார் துறைக்கு திறந்து விடப்பட்டன.
3. பொதுத்துறை தொடாபான சீர்திருத்தங்கள்
பொதுத்துறை சீர்திருத்தங்கள் என்பது திறமையாக இயங்கும் நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குவதாகும். பொதுத்துறையில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அரசு அடையாளம் காண்கிறது. தனது முதலீட்டுக் குறைப்புக் கொள்கை மூலம் பொதுத்துறையை மாற்றியமைக்கிறது. நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுனங்களை தனியாரிடம் ஒப்படைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
4. முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டத்தை (MRTP) ஒழித்தல்
1991ம் ஆண்டைய புதிய தொழிற்கொள்கை முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டத்தை அகற்றியது. 2010ல் போட்டிக்குழு ஏற்படுத்தப்பட்டது. இது பொருளாதாரப் போட்டி நடைமுறைகளைக் கண்காணிக்கும். இக்கொள்கை தனியார் துறையில் போட்டியை ஏற்படுத்தவும், குறித்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கவும் செய்தது.
5. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை
பொருளாதார சீர்திருத்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம் வெளிநாட்டு முதலீட்டிற்கும் மற்றும் வெளிநாட்டு தொழில் நுட்பத்திற்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு தருவதாகும். இந்த நடவடிக்கை நாட்டில் தொழில்துறையில் போட்டியை ஏற்படுத்தி வணிகச் சூழலை மேம்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் வெளிநாட்டு தொகுப்பு முதலீடு (FPI) ஆகியவற்றிற்கு இலகுவான வழி திறந்துவிடப்பட்டது. 1991ல் சில உயர் தொழில்நுட்பம் மற்றும் பேரளவு முதலீடு தேவைப்படும் முக்கிய தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதில் 51 சதவீத பங்குகள் வரை வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. இதன் அளவு பல நிறுவனங்களுக்கு 74 சதவீதமாகவும், பின்னர் 100 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் பல புதிய நிறுவனங்கள் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் நேரடி வெளிநாட்டு முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும், வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் (FIPB) அமைக்கப்பட்டது.