ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - எதிரொளிப்பு விதிகள் | 8th Science : Chapter 3 : Light
எதிரொளிப்பு விதிகள்
செயல்பாடு 3
ஒரு
சமதள ஆடியின் உதவியுடன் சூரிய ஒளியை சுவற்றில் விழச் செய்யவும். சுவரில் பொலிவான புள்ளி
தோன்றுகிறதா? இது எவ்வாறு நிகழ்கிறது? ஆடியின் மீது விழுந்த கதிர்கள் எதிராளித்து சுவரை
நோக்கி திரும்பி வருவதால் இது நிகழ்கிறது. இதுபோன்ற ஒளிப்புள்ளியினை சொரசொரப்பான பரப்பினைக்
கொண்ட பொருளின் மூலம் ஏற்படுத்த முடியுமா?
சமதள ஆடிகள் ஏற்படுத்தும் விளைவை அனைத்துப் பொருள்களும் ஏற்படுத்தமுடியாது.
ஓர் ஒளிக்கதிரானது பளபளப்பான, மென்மையான ஒளிரும் பரப்பின்மீது படும்போது, அது திருப்பி
அனுப்பப்படுகிறது. இவ்வாறு ஒளியானது பளபளப்பான, மென்மையான, ஒளிரும் பரப்பில் பட்டு
திரும்பும் நிகழ்வே ஒளி எதிரொளித்தல் என்று அழைக்கப்படுகிறது.
ஒளி எதிரொளித்தலில் இரு கதிர்கள் ஈடுபடுகின்றன. அவை: படுகதிர்
மற்றும் எதிரொளிப்புக் கதிர் ஒரு ஊடகத்திலுள்ள பளபளப்பான எதிரொளிக்கும் தளத்தின் மீது
விழக்கூடிய ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும். ஒளியானது அப்பரப்பின்மீது பட்டபிறகு, அதே
ஊடகத்திற்கே திரும்ப வருகிறது. இந்த ஒளிக்கதிர் 'எதிரொளிப்புக் கதிர்' எனப்படும். எதிரொளிக்கும்
பரப்பில், ஒளிக்கதிர் படும் புள்ளியில் கற்பனையாக வரையப்பட்ட செங்குத்துக் கோடு 'குத்துக்கோடு'
எனப்படும்.
படுகதிர், எதிரொளிப்புக்கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகியவற்றிற்கு
இடையே உள்ள தொடர்பு எதிரொளிப்பு விதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
1. படுகதிர், எதிரொளிப்புக் கதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட
குத்துக்கோடு ஆகிய அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன.
2. படுகோணமும் (i), எதிரொளிப்புக் கோணமும் (r) எப்போதும் சமமாகவே
இருக்கும்.
வெள்ளியே
மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்புப் பொருளாகும். எனவேதான், ஆடிகளை உருவாக்குவதற்கு கண்ணாடித்துண்டின்
பரப்பின்மீது மெல்லிய படலமாக வெள்ளி பூசப்படுகிறது.