வரலாறு - பாண்டியர் | 11th History : Chapter 11 : Later Cholas and Pandyas

   Posted On :  18.05.2022 05:39 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 11 : பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்

பாண்டியர்

தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் நவீன காலத்துக்கு முன்புவரை இந்தியாவின் தென்பகுதியைத் ஆட்சி செய்து வந்த மூவேந்தர் மரபினரில் பாண்டியரும் அடங்குவர்.

பாண்டியர்

தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் நவீன காலத்துக்கு முன்புவரை இந்தியாவின் தென்பகுதியைத் ஆட்சி செய்து வந்த மூவேந்தர் மரபினரில் பாண்டியரும் அடங்குவர். அசோகர் தன் கல்வெட்டுகளில் சோழர், சேரர், பாண்டியர் சத்தியபுத்திரர் ஆகியோரைத் தென் இந்தியாவின் ஆட்சியாளர்களாகக் குறிப்பிடுகிறார். முத்துக்குளித்தல் தொழிலோடு வரலாற்றுப்பூர்வமாக இணைந்த கொற்கை பாண்டியரின் தொடக்க காலத் தலைநகரமாகவும் துறைமுகமாகவும் இருந்தது. பிற்காலத்தில் அவர்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்தனர்.

மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாண்டியர்களின் தொடக்க காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் மடிரை என மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் செவ்விலக்கியங்கள் மதுரையைக் கூடல் எனச் சுட்டுகின்றன. இச்சொல்லுக்குக் கூடுகை என்று பொருளாகும். பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலிமான் கோம்பை என்ற கிராமத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் கூடல் என்ற சொல் குறிப்பிடப்பெற்றுள்ளது. பத்துப்பாட்டு நூல்களிலான பட்டினப்பாலையிலும், மதுரைக்காஞ்சியிலும் கூடல் பாண்டியர் தலைநகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டுத்தொகை நூல்களிலும் இச்சொல் காணப்படுகிறது. வரலாற்றுப் பூர்வமாகவே மதுரை, கூடல் ஆகிய சொல்லாடல்கள் ஒன்றுக்கொன்று மாற்றுச்சொல்லாகவே கையாளப்பட்டு வந்திருக்கின்றன.

சான்றுகள்

சங்ககாலப் பாண்டியர் வரலாறு ஏறத்தாழ பொ..மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.. மூன்றாம் நூற்றாண்டு வரை எனக் குறிப்பிடப்படுகிறது. பெருங்கற்கால ஈமப் பொருள்கள் கண்டுபிடிப்பு, தமிழ் பிராமி கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள் போன்ற பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலம் சங்க காலப் பாண்டியர் வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொ.. ஆறாம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் தென் தமிழ்நாட்டில் பாண்டியர் தம் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினர். ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தது குறித்த தகவல்களைச் சில செப்பேடுகள் உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் நெடுஞ்சடையானின் வேள்விக்குடி மானியம் முக்கியமானதாகும். அரசாணைகள், பாண்டிய அரசர்களின் மரபுவழி வரிசை, வெற்றிகள், அரசர்கள் எழுப்பிய கோவில்கள், உருவாக்கிய பிரம்மதேயங்கள் ஆகியவற்றுக்கு அரசர்கள் வழங்கிய மானியங்கள், அறக்கொடைகள் ஆகியன குறித்து செப்பேடுகள் தெரிவிக்கின்றன. குடைவரைக் கோவில்களை உருவாக்கியவர்கள், பாசன ஏரிகள், கால்வாய்கள் போன்றவற்றை உருவாக்கியவர்கள் குறித்த செய்திகளைக் கல்வெட்டுகள் அளிக்கின்றன. மார்க்கோ போலோ, வாசஃப், இபின் பதூதா போன்ற பயணிகள் எழுதியுள்ள வரலாற்றுக் குறிப்புகள் அக்காலகட்ட அரசியல், சமூக, பண்பாட்டு வளர்ச்சிகள் குறித்து அறிய உதவுகின்றன. மதுரைத் தல வரலாறு, பாண்டிக்கோவை, மதுரை திருப்பணி மாலை ஆகிய இலக்கியங்கள் மதுரையை ஆண்ட பிற்காலப் பாண்டியர் குறித்த செய்திகளை வழங்குகின்றன.

பொ.. ஏழாம்/எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இறையனார் அகப்பொருளில்சங்கம்என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பல்லவர்களுக்கு முந்தைய இலக்கியங்களில் சங்கம் என்ற சொல் இப்பொருளில் குறிப்பிடவில்லை. திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் ஆகிய பிந்தைய இடைக்கால நூல்களில் சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?

மணிமேகலையை இயற்றிய சீத்தலைச்சாத்தனார் மதுரையைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆட்சிப்பகுதி

பாண்டியரின் ஆட்சிப்பகுதி பாண்டி மண்டலம், தென் மண்டலம், பாண்டி நாடு என்று அழைக்கப்படுகிறது. வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளால் வளம் பெறும் சில பகுதிகள் நீங்கலாகப் பெரும்பாலும் பாறைகளும் குன்றுகளும் மலைத்தொடர்களும் நிறைந்த பகுதியே பாண்டிய நாடு ஆகும். புதுக்கோட்டை வழியே ஓடும் வெள்ளாறு பாண்டிய நாட்டின் வட எல்லையாகும். இந்தியப் பெருங்கடல் தென் எல்லையாகும். மேற்குத்தொடர்ச்சி மலைகள் மேற்கு எல்லையாகவும் வங்காள விரிகுடா கிழக்கு எல்லையாகவும் அமைந்திருந்தன.

 

 

1. பாண்டியரின் மறுமலர்ச்சி (600 - 920)

களப்பிரரின் மறைவுக்குப் பின் பாண்டியரின் மறு எழுச்சி ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒருகாலத்தில் மலைவாழ் பழங்குடிகளாக இருந்த களப்பிரர்கள் விரைவிலேயே சமவெளியில் குடியேறினர். அவர்கள் புத்த, சமண சமயங்களை ஆதரித்தனர்.

களப்பிரரிடமிருந்து பாண்டியர் பகுதியைக் கடுங்கோன் மீட்டதாகச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அவரைத் தொடர்ந்து இரு அரசர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் சேந்தன் என்பவர் போர் முறையில் சிறந்தவராக இருந்துள்ளார். சேரரை வென்றதால் அவர் வானவன் என்ற பட்டம் பெற்றார் எனச் செப்பேடுகள் கூறுகின்றன. அடுத்து வந்த தொடக்க காலப் பாண்டிய அரசர்களில் சிறந்தவரான அரிகேசரி மாறவர்மன் (624-674) 642இல் பதவி ஏற்றார் என்பதை வைகை ஆற்றுப்பகுதி கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோருக்குச் சம காலத்தவர் ஆவார். அவர் தமது காலத்தைச் சேர்ந்த சேர, சோழ, பல்லவ சிங்கள அரசர்களை வெற்றி கொண்டதாக அக்கல்வெட்டுக் குறிப்புகளும் செப்பேடுகளும் கூறுகின்றன. சமணர்களைக் கழுவேற்றிய கூன் பாண்டியனே அரிகேசரி என்று அடையாளம் காணப்படுகிறார்.

உங்களுக்குத் தெரியுமா?

சைவத் துறவியான திருஞானசம்பந்தர் அரிகேசரியை சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாற்றினார்.

அரிகேசரியைத் தொடர்ந்து கோச்சடையான் இரணதீரனும் (700-730), அவருக்குப் பின் மாறவர்மன் இராஜசிம்மனும் (730-765) ஆட்சி செய்தனர். அவர்களுக்குப் பின் ஜதில பராந்தக நெடுஞ்சடையன் (முதலாம் வரகுணன்) (765-815) ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இவரே புகழ்பெற்ற வேள்விக்குடி நிலக்கொடை அளித்தவர் ஆவார். பாண்டிய அரச மரபில் மிகச் சிறந்தவரான இவர் பல்லவர்களையும் சேரர்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். பாண்டிய அரசைத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார். பல விஷ்ணு கோவில்களைக் கட்டிய பெருமையும் இவருக்கு உண்டு. இவருக்கு அடுத்த அரசரான ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர் (815-862) இலங்கைக்குப் படையெடுத்து, அங்கு தன் அதிகாரத்தை நிலைநிறுத்தினார். எனினும் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனிடம் (846-869) தோற்றார். அடுத்ததாக ஆட்சிக்கு வந்த இரண்டாம் வரகுணன் திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவனால் (885-903) தோற்கடிக்கப்பட்டார். இவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த பராந்தக வீரநாராயணன், இரண்டாம் இராஜசிம்மன் ஆகியோரால் முதலாம் பராந்தகனின் தலைமையில் தோன்றிய சோழரின் எழுச்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. முதலாம் பராந்தகனிடம் தோற்ற இரண்டாம் இராஜசிம்மன் 920இல் நாட்டை விட்டே ஓடினார்.

 



 

மீண்டும் பாண்டிய எழுச்சி (1190-1310)

பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதிக் கால்பகுதியில் ஆதி இராஜேந்திரனின் மறைவுக்குப் பிறகு, சோழ அரசில் வெற்றிடம் ஏற்பட்ட நிலையில் பாண்டியப் பகுதியை நிர்வகித்த ஆளுநரும் வலுவிழந்தார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பாண்டியக் குடித்தலைமை மன்னர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு தமது சுதந்தர ஆட்சியை நிறுவ முயன்றனர். இரண்டாம் இராஜராஜ சோழனுடன் போரிட்ட ஸ்ரீவல்லப பாண்டியன் தன் மகனைப் போரில் பறிகொடுத்தார். ஐந்து பாண்டியக் குறுநில மன்னர்கள் இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் குலோத்துங்கனுடன் (1070-1120) போரிட்டார்கள். போரில் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தது. 1190இல் சடையவர்மன் ஸ்ரீவல்லபன் முதலாம் குலோத்துங்கனுடைய அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு, பாண்டிய நாட்டில் ஆட்சியைத் துவக்கினார். சடையவர்மன் மதுரையில் நடைபெற்ற பட்டம் சூட்டு விழாவில் அரசராக முடிசூடி, செங்கோல் ஏந்தி, அரியணையில் அமர்ந்தார். இந்த நிகழ்வின் நினைவாகச் சுந்தர சோழபுரம் என்ற வேளாண் குடியிருப்புப் பகுதியைச் சுந்தரசோழசதுர்வேதிமங்கலம் என்று பெயர் மாற்றி இறையிலியாகப் பிராமணர்களுக்கு வழங்கினார்.

சோழரின் வீழ்ச்சிக்குப் பிறகு, பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர் செல்வாக்குமிக்க அரச மரபினராக மாறினார்கள். மதுரை அவர்களின் தலைநகராக இருந்தது. காயல் அவர்களுக்கான பெருந்துறைமுகமாக விளங்கியது. வெனீஸைச் சேர்ந்த புகழ்பெற்ற பயணி மார்க்கோ போலோ 1288இலும் 1293இலுமாக இரு முறை காயலுக்கு வந்துள்ளார். அப்போது காயல் துறைமுகம் முழுவதும் அரேபிய, சீன கப்பல்களால் நிறைந்திருந்ததாகவும் காயல் நகரில் வணிக நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும் மார்க்கோ போலோ கூறுகிறார்.


 

பாண்டிய நாட்டுக்கு வருகை தந்த வெனீஸிய (இத்தாலி) பயணி மார்க்கோ போலோ நேர்மையான நிர்வாகத்துக்காகவும் வெளிநாட்டுவணிகர்களைச் சிறந்த முறையில் நடத்தியதற்காகவும் பாண்டிய அரசரைப் பாராட்டியுள்ளார். உடன்கட்டை ஏறும் வழக்கம், அரசர்கள் பின்பற்றிய பலதார மணமுறை ஆகியவை மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சடையவர்மன் சுந்தரபாண்டியன்

இரண்டாம் பாண்டிய அரசின் சிறப்புமிக்க ஆட்சியாளர் சுந்தரபாண்டியன் (1251-1268) ஆவார். அவர் தமிழ்நாடு முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததுடன், ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை தனது அரசியல் அதிகாரத்தைச் செலுத்தினார். இவர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் பாண்டிய அரசு வலிமையின் உச்சத்தில் இருந்தது. அப்போது ஹொய்சாளர்கள் அடக்கிவைக்கப்பட்டார்கள். பல கல்வெட்டுக்கள் அவரை மிகவும் உயர்வாகப் போற்றப்படுகின்றன. சுந்தரபாண்டியன் சேர அரசரான மலைநாட்டுத் தலைவரை அடக்கி, தனக்குக் கப்பம் செலுத்த வைத்தார். சோழரின் வீழ்ச்சி மால்வா பகுதியை ஆட்சி செய்த போஜ அரசன் வீர சோமேஸ்வரனுக்குச் சுந்தரபாண்டியனை சவாலுக்கு அழைக்கும் துணிச்சலைக் கொடுத்தது. இருவருக்குமிடையே கண்ணனூரில் நடந்த போரில் சுந்தர பாண்டியன் வீர சோமேஸ்வரனைத் வென்று, மால்வா பகுதியைச் சூறையாடினார். சேந்தமங்கலத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தார். கடலூரை மையமாகக் கொண்டு வட தமிழகத்தில் செல்வாக்குடன் ஆட்சி நடத்திய காடவர்களையும் அடக்கிய சுந்தரபாண்டியன் அவர்களைக் கப்பம் செலுத்தப் பணித்தார். அவர் மேற்குப்பகுதியையும் தற்கால ஆற்காடு பகுதிக்கும் சேலத்துக்கும் இடைப்பட்ட பகுதியையும் கைப்பற்றினார். போரில் காஞ்சிபுரம் அரசனைக் கொன்று அதையும் எடுத்துக்கொண்டார். கொல்லப்பட்ட காஞ்சிபுரம் அரசரின் சகோதரர் பாண்டிய மன்னருக்கு அடிபணிந்ததன் மூலம் காஞ்சிபுரம் ஆட்சியை கவனித்துக் கொண்டார். கப்பம் செலுத்தவும் சம்மதித்தார். எனினும் அவர் தனி ஒருவராக ஆட்சி செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. சுந்தரபாண்டியன் தன்னுடைய தரப்பினரான விக்கிரம பாண்டியன், வீர பாண்டியன் ஆகிய இருவருடன் சேர்ந்து ஆட்சி புரியும்படி செய்தார். வீரபாண்டியன் ஈழம், கொங்கு, சோழ மண்டலம் (சோழ நாடு) ஆகியவற்றை வெற்றிகொண்டதாக அவர் குறித்த ஓர் ஆவணம் (1253-1256) கூறுகிறது.

மாறவர்மன் குலசேகரன்

சுந்தரபாண்டியனுக்குப் பிறகு மாறவர்மன் குலசேகரன் நாற்பது ஆண்டுகள் பாண்டிய நாட்டை வெற்றிகரமாக ஆட்சிபுரிந்தார். அவரது ஆட்சியில் அமைதியும் வளர்ச்சியும் நிலவின. அவர் 1268இல் அரியணை ஏறி, 1312 வரை ஆட்சி செய்தார். அவருக்கு இரு மகன்கள். மூத்தவர் சுந்தர பாண்டியன்; இளையவர் வீரபாண்டியன். 1302இல் இளைய மகன் வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. இதனால் கோபமடைந்த மூத்த மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று பதவிக்கு வந்தார். இதைத் தொடர்ந்து மூண்ட உள்நாட்டுப் போரில் வீரபாண்டியன் வென்று ஆட்சியைப் பிடித்தார். சுந்தர பாண்டியன் தில்லிக்குத் தப்பிச் சென்று அலாவுதின் கில்ஜியிடம் அடைக்கலமானார். இந்த நிகழ்வுகளே மாலிக் காபூர் தமிழகப் படையெடுப்புக்கு வழிவகுத்தன.

மாலிக் காபூர் படையெடுப்பு

மாலிக்காபூர் 1311இல் மதுரையை அடைந்தபோது, அங்கே யாரும் இல்லை. வீரபாண்டியன் ஏற்கனவே தப்பியோடியிருந்தார். இந்த மதுரை படையெடுப்பு குறித்து அலாவுதின் கில்ஜியின் அரசவைக் கவிஞர் அமிர் குஸ்ருவின் கணிப்பின்படி, அங்கிருந்து 512 யானைகள், 5,000 குதிரைகள், 500 மூட்டைகளில் வைரம், முத்து, மரகதம், மாணிக்க நகைகள் மாலிக் காபூரால் எடுத்துச்செல்லப்பட்டன எனத் தெரிகிறது. அமிர் குஸ்ரு மிகைப்படுத்தி எழுதக்கூடியவர், இருப்பினும் சொக்கநாதர் கோவிலை இடித்து ஏராளமான விலை மதிக்க முடியாத பொருள்களை மாலிக்காபூர் எடுத்துச்சென்றார் என்பது உண்மையே. இச்செல்வத்தைப் பயன்படுத்தி அலாவுதீன் கில்ஜி தனது எதிரிகளை தன் பக்கம் ஈர்த்து தனது பலத்தை அதிகரித்துக் கொண்டார்.

மாலிக் காபூரின் படையெடுப்புக்குப் பிறகு, பாண்டிய அரசின் ஆட்சிப்பொறுப்பு பாண்டிய அரசக் குடும்ப உறுப்பினர்களால் தனித் தனியாகப் பிரித்துக்கொள்ளப்பட்டன. மதுரையில் தில்லி சுல்தானிய அரசுக்குக் கட்டுப்பட்ட ஓர் அரசு உருவாகியது. இது 1335 வரை தான் நீடித்தது. மதுரையை ஆட்சி செய்த ஆளுநர் ஜலாலுதீன் அஸன் ஷா டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்படாமல் 1335இல் மதுரை அரசராகத் தன்னை அறிவித்துக்கொண்டார்.

 

  

2. அரசு

பாண்டிய அரசர்கள் தொடர்ந்து மதுரையையே தங்கள் தலைநகராகக் கொண்டார்கள். மதுரை நகரமானது கூடல் எனவும் தமிழ் கெழுகூடல் எனவும் புகழப்பட்டது. பாண்டிய அரசர்களைக் கூடல்கோன், கூடல் நகர் காவலன், மதுரபுர பரமேசுவரன் என்று போற்றுவது மரபாக இருந்தது. தொடக்க காலப் பாண்டியருக்கான பட்டங்கள்: பாண்டிய அதியரசன், பாண்டிய மகராசன், மன்னர் மன்னன், அவனிப சேகரன், ஏக வீரன், சகலபுவன சக்கரவர்த்தி போன்றவை ஆகும். பிற்காலப் பாண்டியருக்குச் சமஸ்கிருதத்தில் அமைந்த பட்டங்கள்: கோதண்ட ராமன், கோலாகலன், புவனேகவீரன், கலியுக ராமன் போன்றவை ஆகும். தூய தமிழில் அமைந்த பட்டங்கள்: செம்பியன், வானவன், தென்னவன் போன்றவை. பாண்டியர் தம்முடன் நெடிய வணிக பண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்த அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்தனர். இக்குதிரைகளைக் கொண்டு ராணுவத்தைப் பலப்படுத்திக்கொண்டனர். இதன்மூலம் பாண்டியர் தங்கள் ராணுவ வலிமையைத் தக்கவைத்துக் கொண்டனர்.

அரண்மனையும் அரியணையும்

பாண்டியர் அரண்மனை திருமாளிகை, மனபரணன் திருமாளிகை என்று அழைக்கப்பட்டன. அரசர்கள் நீளமான, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அமரும் இட வசதி கொண்ட அரியணையில் அமர்ந்தபடி நிர்வாகம் செய்தனர். குறுநில மன்னர்கள் மீது அரசர்களின் சட்டபூர்வ மேலாளுமையைக் காட்டும் விதத்திலும் அரியணைகளுக்குப் பெயரிடும் வழக்கம் இருந்தது. அத்தகைய அரியணைகளின் பெயர்கள் முன்னைய தரையன், பாண்டியத்தரையன், கலிங்கத்தரையன் ஆகும். அரசர்கள் அரியணைகளில் இருந்தபடிதான் அரசக்கட்டளைகளை வாய்மொழியாகப் பிறப்பித்தார்கள். அவை 'திருமந்திர ஓலை' என்று அழைக்கப்பட்டன.

அரச அதிகாரிகள்

அதிகாரிகள் குழு அரச கட்டளைகளை நிறைவேற்றியது. முதன்மை அமைச்சர் உத்தர மந்திரி எனப்பட்டார். மாணிக்கவாசகர், குலச்சிறையார், மாறன்கரி போன்ற ஆளுமைகள் பாண்டிய அமைச்சர்களாக இருந்துள்ளனர். அரச தலைமைச் செயலகம் எழுத்துமண்டபம் எனப்பட்டது. அக பரிவார முதலிகள் என்பவர்கள் அரசரின் தனிப்பட்ட உதவியாளர்களாக இருந்தனர். மாறன் எயினன், சதன் கணபதி, ஏனாதி சதன், திரதிரன், மூர்த்தி எயினன் போன்றவை உயர்ந்த மதிப்புக்குரிய அரச பதவிகளாக இருந்தன. படைத்தளபதிகளுக்குப் பள்ளி வேலன், பராந்தகன் பள்ளி வேலன், மாறன் ஆதித்தன், தென்னவன் தமிழவேள் ஆகிய பட்டங்கள் சூட்டப்பட்டன.

அரசியல் பிரிவுகள்

பாண்டிய மண்டலம் என்பது பல வளநாடுகளைக் கொண்டது. ஒரு வளநாடு பல நாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டது. நாடு, கூற்றம் ஆகியன மங்கலம், நகரம், ஊர், குடி ஆகிய குடியிருப்புகளைக் கொண்டவையாக இருந்தன. பாண்டிய மண்டலத்தில் குளக்கீழ் என்ற ஒரு தனிச்சிறப்பான அரசியல் பிரிவு இருந்தது. பாசன ஏரிக்குக் கீழேயிருக்கும் பகுதி என்று இதற்குப் பொருளாகும். எடுத்துக்காட்டாக, மதுரை நகரம்மடக்குளக்கீழ் மதுரைஎன்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண் நிலங்களின் தன்மைகளை மதிப்பிட்டு, வரிகளை விதிப்பது நாட்டாரின் வேலையாகும். நில அளவீடுகளின்போது 14 மற்றும் 24 அடி நீளமுள்ள கழிகளைப் பயன்படுத்தினர். பின்னர் அவற்றைக் கொடையாக வழங்கினர். சாலபோகம் நிலம் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இரும்பு உலோக வேலை செய்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம்தட்டார் காணிஎனப்பட்டது. மரவேலை செய்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம்தச்சர் மானியம்எனப்பட்டது. கல்வி கற்பிக்கும் பிராமணக் குழுவிற்கு வழங்கப்பட்ட நிலம் பட்ட விருத்தி எனப்பட்டது.

நிர்வாகமும் சமயமும் : 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை

800-ஐச் சேர்ந்த மானூர் (திருநெல்வேலி மாவட்டம்) கல்வெட்டு கிராம நிர்வாகத்தைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. அதன்படி, பாண்டியர் கிராம நிர்வாகமும் கிராமசபைகள், குழுக்கள் எனச் சோழர் ஆட்சியின் உள்ளாட்சி முறை போன்றே அமைந்திருந்தது. குடிமை அதிகாரங்கள், இராணுவ அதிகாரங்கள் ஒரே நபரிடமே இருந்துள்ளன. இக்காலகட்ட பாண்டிய அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆதரித்தனர். சைவ, வைணவ அடியார்கள் (நாயன்மார்களும் ஆழ்வார்களும்) தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பை அளித்தனர். இக்காலகட்டம் கடுமையான மத மோதல்கள் நிகழ்ந்த காலகட்டமாகக் குறிக்கப்படுகிறது. பக்தி இயக்கத்தின் எழுச்சி வேற்று மத அறிஞர்களை விவாதங்களுக்கு அழைத்தது. இத்தகைய விவாதங்களில் புத்த, சமண மதங்கள் தோல்வி அடைந்ததாக பக்தி இலக்கியங்கள் கூறுகின்றன.

 

 

3. பொருளாதாரம்

 

சமூகம்

அரசர்களும் குறுநில மன்னர்களும் பாசன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளை உருவாக்கி மங்கலம், சதுர்வேதிமங்கலம் என்ற பெயரிட்டு பிராமணர்களுக்கு வழங்கினர். இக்குடியிருப்புகளுக்கு அரசனின் பெயர்களும் கடவுளரின் பெயர்களும் சூட்டப்பட்டன. செல்வாக்குமிக்க பிராமணர்கள் பிரம்மாதிராஜன், பிரம்மராஜ்யன் ஆகிய உயர் தகுதி நிலை பட்டங்களைக் கொண்டிருந்தனர்.

வணிகம்

இசுலாமியர்களைத் தமிழ்நாட்டுக்குள் முதன் முதலாக வரவழைத்தது மாலிக் காபூரின் படையெடுப்பு அல்ல. ஏழாம் நூற்றாண்டிலேயே தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அரபுக்குடியிருப்புகள் தோன்றிவிட்டன. இதன்மூலம் தங்கள் வணிகத்தை கிழக்குக் கடற்கரையிலிருந்த தமிழர்களுடன் விரிவுப்படுத்திக் கொண்டனர். இதன் காரணமாக கிழக்குக் கரையில் இருந்த அரசுகள் இந்த அரபு வணிகர்கள் மீது மிகவும் தாராளமாக கொள்கைகளைத் தளர்த்தி ஆதரவு அளித்துள்ளனர். இதனால் அவ்வணிகர்களுக்குத் துறைமுகக் கட்டணங்கள், சுங்க வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டன. காயல் துறைமுக நகரில், அரபுத்தலைவன் மாலிக்கு இஸ்லாம் ஜமாலுதின் என்பவரால் ஒரு முகவர் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பாண்டியருக்குக் குதிரைகளை இறக்குமதி செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

நிகமத்தோர், நானாதேசி, திசை ஆயிரத்து ஐநூற்றுவர், ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், பதினென் விஷயத்தார் என்று வணிகர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களது வணிக குழுக்கள் கொடும்பாளூர், பெரியகுளம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன. மிளகு, முத்து, விலையுயர்ந்த கற்கள், குதிரைகள், யானைகள், பறவைகள் ஆகியன வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டன. பதிமூன்று - பதினான்காம் நூற்றாண்டுகளில் குதிரை வணிகம் விறுவிறுப்பாக நடைபெற்றது. விழாக்கள், போர்களில் பயன்படுத்த குதிரைகள் அதிக அளவில் தேவைப்பட்டதால் பாண்டிய அரசர்கள் குதிரைகளில் அதிக முதலீடு செய்தனர் என்று மார்க்கோ போலோ, வாசாஃப் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். குதிரை வணிகம் செய்வோர் குதிரைச்செட்டி எனப்பட்டனர். இவர்கள் கடல்வழி வணிகத்திலும் ஈடுபட்டனர்.

பாண்டியர் காலத்தில் முழு வீச்சில் இயங்கிய துறைமுக நகரம் காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) ஆகும். வணிகத்தில் பரிமாற்றத்துக்கான ஊடகமாக தங்கம் விளங்கியதால், தங்க நாணயங்கள் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தன. அவை காசு, பழங்காசு, அன்றாட நற்பழங்காசு, கனம், கழஞ்சு, பொன் எனப் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டன. வணிகர்களின் கடவுளர் அவர்களுக்கான பட்டப்பெயர்களுடன் கூடிய பெயர்களுடன் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாக, ஆயிரத்து ஐநூற்றுவார் உடையார், சொக்கநாயகி அம்மன் போன்ற பெயர்களைக் கூறலாம். சீரான கால இடைவெளியில் நடத்தப்பட்ட பொருட்காட்சிகள் தவளம் எனப்பட்டன. வணிகர்களின் குடியிருப்புப் பகுதிதெருஎனப்பட்டது.

 

பாண்டியர் கால குதிரை வணிகம் குறித்து வாசாஃப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்: “காயல் மற்றும் இந்தியாவின் பிற துறைமுகங்களில் ஏறத்தாழ 10,000 குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் 1,400 குதிரைகள் ஜமாலுதீனுக்குச் சொந்தமானவை. குதிரையின் சராசரி விலை 220 செம்பொன் தினார்களாகும்."

பாசனம்

பாண்டிய அரசர்கள் பெரும் எண்ணிக்கையிலான பாசன வளங்களை உருவாக்கினர். அவை அரசக் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் அறியப்படுகின்றன. வாசுதேவப்பேரேரி, வீரபாண்டியப்பேரேரி, ஸ்ரீ வல்லபப் பேரேரி, பராக்கிரமப்பாண்டியப்பேரேரி போன்றவை ஆகும். ஏரிகள் திருமால் ஏரி, மாறன் ஏரி, கலியன் ஏரி, காடன் ஏரி என்று பெயரிடப்பட்டன. வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இரு கரைகளிலும் அவற்றின் நீரைப் பாசனக் குளங்களுக்குக் கொண்டுசெல்லும் கால்வாய்கள் வெட்டப்பட்டன. சேந்தன் மாறன் காலகட்டத்தைச் சேர்ந்த வைகை ஆற்றுப்படுகைக் கல்வெட்டுகளில் அவரால் நிறுவப்பட்ட ஆற்று மதகு குறிப்பிடப்படுகிறது. ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் வெட்டிய ஒரு பெரிய ஏரி இன்றும் பயன்பாட்டில் உள்ளது. வட மாவட்டங்களில் பல்லவர்கள் மேற்கொண்டதைப் போன்றே தென் மாவட்டங்களிலும் பாண்டியர் பாசனத் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர். ஏரிகளின் கரைகளை அமைக்கும் போது பண்டைய கட்டுமானக் கலைஞர்கள் கரை மட்டத்தைச் சமமாகப் பராமரிக்க நூல் பயன்படுத்தினர். கரைகளின் உட்பகுதியை வலுவூட்ட கல் அடுக்குளைப் பயன்படுத்தியது பாண்டிய பாசனத் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். பிற்காலப் பாண்டியர் காலத்தில் (ஏறத்தாழ 1212) திருவண்ணாமலை கோவில் நிலங்கள் பாசன வசதி பெற, பெண்ணை ஆற்றிலிருந்து வாய்க்கால் அமைத்துத் தந்துள்ளார். வறட்சிப்பகுதியான இராமநாதபுரத்தில் பல ஏரிகள் வெட்டப்பட்டன. இத்தகைய பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள், உள்ளூர் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் மேற்பார்வையில் பாசன வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. பாசன நீர்நிலைகளின் பராமரிப்பு பணிகள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன. சில சமயங்களில் வணிகர்களும் பாசன ஏரிகளை வெட்டினார்கள்.

இருப்பைக்குடி கிழவன் என்ற உள்ளூர்த்தலைவர் பல ஏரிகளை வெட்டியதுடன், அவற்றைப் பழுதுபார்க்கும் வேலையிலும் ஈடுபட்டார். நில உடமையாளர்கள் பூமிபுத்திரர் எனப்பட்டனர். வரலாற்று நோக்கில் இவர்கள் உள்ளூர் குடிகளாக இருந்ததால், நாட்டு மக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களின் சமுதாயக் குழு சித்திர மேழி பெரிய நாட்டார் எனப்பட்டது.


எழுத்தறிவு

பாண்டியர் ஆட்சியில் எழுத்தறிவைப் பரப்பும் பணிகள் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்டன. கோவில்களில் பக்திப்பாடல்கள் பாடப் பாடகர்கள் நியமிக்கப்பட்ட செயல்பாடுகளை, எழுத்தறிவை ஊக்குவிக்கும் செயல்பாடுகளாகக் காணமுடியும். அரங்குகளில் நாடகங்கள் இதே நோக்கில் அரங்கேற்றப்பட்டன. சமஸ்கிருதக் கல்வியை ஊக்குவிக்கப் பட்ட விருத்தி', 'சாலபோகம்' ஆகிய பெயர்களில் அறக்கொடைகள் வழங்கப்பட்டன. கடிகை, சாலை, வித்யா ஸ்தானம் ஆகிய நிலையங்களில் பிராமணர்கள் சமஸ்கிருதம் பயின்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் மடங்கள் உருவாகி மத ஆர்வத்தில் கல்வி கற்பிக்கும் நோக்கத்துடன் கோவில்களுடன் இணைக்கப்பட்டன. தமிழை வளர்க்கவும் மகாபாரதத்தை மொழிபெயர்க்கவும் ஒரு கலைக்கழகம் அமைக்கப்பட்டதாக ஒரு செப்பேடு கூறுகிறது. பாண்டியர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட முக்கியமான இலக்கிய நூல்கள் திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசகம், திருக்கோவை மற்றும் திருமந்திரம் முதலியன ஆகும்.

 

 

4. மதம்

பாண்டியர் தொடக்கத்தில் சமணர்களாக இருந்து, சைவ மதத்துக்கு மாறியவர்கள் என்று கூறப்படுகிறது. கோவில் கல்வெட்டுகளும் சிற்பங்களும் அதற்குச் சான்று பகர்வதாக உள்ளன. குடைவரை - குகை கோவில்கள் இக்காலகட்டத்தில் மதம் - கட்டடக்கலை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களின் வெளிப்பாடுகளாகக் காணப்படுகின்றன. இடைக்காலப் பாண்டியரும் பிற்காலப் பாண்டியரும் பல கோவில்களைப் பழுது பார்த்து, அவற்றுக்குத் தங்கம், நிலம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர். திருவரங்கம், சிதம்பரம் ஆகிய கோவில்களின் கருவறை மீதுள்ள விமானங்கள் தங்கத் தகடுகளால் வேயப்பட்டன. சடையவர்மன் சுந்தர பாண்டியன் திருவரங்கம் கோவிலில் பட்டம் சூட்டினார். அதன் நினைவாக அக்கோவிலுக்கு ஒரு விஷ்ணு சிலையை நன்கொடையாகக் கொடுத்தார். இக்கோவிலின் உட்சுவர்களும் பிற மூன்று விமானங்களும் தங்கத்தகடுகள் பொருத்தப்பட்டவை ஆகும்.

பாண்டியர் வேத நடைமுறைகளுக்கும் தங்கள் ஆதரவை விரிவுப்படுத்தினார்கள். பல வேதச் சடங்குகளைச் செய்த பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி சங்க காலத்தைச் சேர்ந்த பாண்டிய அரசர் ஆவார். ஒவ்வொரு பெரிய பாண்டிய அரசரும் அசுவமேத யாகம், ஹிரண்ய கர்பா, வாஜபேய யக்னா ஆகிய சடங்குகளை மேற்கொண்டதாக வேள்விக்குடி செப்பேடும் பிற கல்வெட்டுகளும் கூறுகின்றன. அரசர்கள் சைவத்தையும் வைணவத்தையும் சமமாக நடத்தியதைக் கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் கடவுள் வாழ்த்துப்பகுதிகள் தெரிவிக்கின்றன. சில அரசர்கள் தீவிர சைவச் சமயத்தவராகவும் சில அரசர்கள் தீவிர வைணவச் சமயத்தவராகவும் இருந்துள்ளனர். எனினும் இரு பிரிவைச் சேர்ந்த கோவில்களும் ஆதரிக்கப்பட்டன. நிலக்கொடைகள், வரி விலக்கு, புதுப்பிக்கும் பணி, கூடுதலாகக் கோபுரம் கட்டுவது, அதிக இட வசதி உள்ள மண்டபங்களைக் கட்டுவது போன்ற அறக்கொடைகள் மூலம் கோவில்கள் சிறப்பாக ஆதரிக்கப்பட்டன.

கோவில்கள்

பாண்டியர் பல்வேறு மாதிரிகளில் கோவில்கள் கட்டினார்கள். அவை கல்லறைக் கோவில்கள் (சுந்தரபாண்டிசுவரம்), குடைவரைக் கோவில்கள், கட்டமைப்புக் கோவில்கள் ஆகும். இடைக்காலப் பாண்டியர்களும் பிற்காலப் பாண்டியர்களும் புதிதாகக் கோவில்களைக் கட்டவில்லை. மாறாக, புதிய கோபுரங்கள் எழுப்புவது, பிரகார வீதிகள் அமைப்பது, மண்டபங்கள் கட்டுவது ஆகிய விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டனர். தொடக்க காலப் பாண்டியர் கோவில்கள் எளிமையாகவும் சிறியதாகவும் இருந்தன. இக்கோவில்களில் சிவன், விஷ்ணு, கொற்றவை, கணேசன், சுப்பிரமணியர், சூரியன், பிரம்மன் ஆகிய கடவுளர் சிலைகள் சிறப்பாக வடிக்கப்பட்டிருந்தன. பாண்டியர் காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கூடுதல் அக்கறையுடன் பராமரிக்கப்பட்டது. கூடுதல் கோபுரங்கள், மண்டபங்கள் என கோவில் பரப்பை விரிவாக்கிக் கொண்டேயிருந்தனர்.


பண்டைய பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பிள்ளையார்பட்டி, திருமயம், குன்றக்குடி, திருச்செந்தூர், கழுகுமலை, கன்னியாகுமரி, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. சித்தன்னவாசல், அரிட்டாபட்டி, திருமலைபுரம், திருநெடுங்கரை ஆகிய கோவில்களில் ஓவியங்கள் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் குகைக் கோவிலில் காணப்பட்ட ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு அந்தக் குகை இளம் கௌதமர் என்பவரால் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறது. அதே காலகட்டத்தைச் சேர்ந்த இன்னொரு கல்வெட்டு ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் இக்கோவிலைப் புதுப்பித்தார் என்று கூறுகிறது. கோவிலின் சுவர்களிலும் கூரைகளிலும் தூண்களிலும் காணப்படும் ஓவியங்கள் சிறந்த கலைப்படைப்புகளாகும். இந்த ஓவியங்கள் நடனமாடும் பெண், அரசன், அரசி போன்றோரைச் சித்தரிக்கின்றன. ஒரு குளத்தைச் சித்தரிக்கும் ஓவியத்தில் சில நீர்வாழ் உயிரினங்களும் பூக்களும் பறவைகளும் சில பாலூட்டிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் கடல் சார்ந்த வரலாறு பாண்டியர்களின் வரலாறு இன்றி முழுமை பெறாது. பாண்டியர்களின் காலத்தில் கிழக்குக் கடற்கரை நெடுகிலும் துறைமுக நகரங்கள் இருந்தன. பாண்டியர் தென்கிழக்கு ஆசிய அரச மரபுகளில் திருமண உறவுகளும் செய்து கொண்டார்கள்.

கடல்வழி வணிக நடவடிக்கைகளில் பாண்டியர் ஓர் அழுத்தமான தடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

சிந்தாமணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவாடனை, மகாபலிபுரம் ஆகியவை சுறுசுறுப்பான கடல் வணிக மையங்களாக இருந்தன என்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.

Tags : History வரலாறு.
11th History : Chapter 11 : Later Cholas and Pandyas : Pandyas History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 11 : பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் : பாண்டியர் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 11 : பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்