இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும் - தொழில் மற்றும் காலனித்துவ முதலாளித்துவம் | 11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence
தொழில் மற்றும் காலனித்துவ முதலாளித்துவம்
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தொழில் மாற்ற செயல்பாடு பொதுவாக இரண்டு வகைகளாகும்
அ) 19 ஆம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி
19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய முதலீட்டாளர்கள் தாங்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், பல முன்னோடி தொழில் நிறுவனங்களை இந்தியாவில் ஆரம்பித்தனர். ஆங்கிலேய நிறுவனங்களுக்கு நிலையான ஆதரவு கிடைத்தது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் தொழில் புரட்சிக்கு வித்திட்ட போதும், அவர்கள் இலாபத்தை ஈட்டுவதையே முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்; இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஆர்வமில்லாமல் இருந்தனர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் 36 சணல் ஆலைகளும், 194 பருத்தி ஆலைகளும் அதிக எண்ணிக்கையிலான தொழில் பூங்காக்களும் இருந்தன. நிலக்கரி உற்பத்தி ஆண்டுக்கு 6 மில்லியன் டன்களாக உயர்ந்தது.
ஆ) 20 ஆம் நூற்றாண்டில் தொழில் முன்னேற்றம்
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுதேசி இயக்கம் இந்தியாவில் தொழில் மயமாதலை ஊக்குவித்தது. 1914 ஆம் ஆண்டில் முதல் உலகப் போர் வெடிக்கும் வரை இந்தியாவின் பழைய - புதிய நிறுவனங்கள் மெதுவான மற்றும் நிலையான வளர்ச்சியைப் பராமரித்து வந்தன. இக்காலத்தில் 70க்கும் மேற்பட்ட பருத்தி ஆலைகளும், 30க்கும் மேற்பட்ட சணல் ஆலைகளும் அமைக்கப்பட்டன. நிலக்கரி உற்பத்தி இரு மடங்கானது. இரும்பு எஃகு தொழிற்சாலைகளுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. இரயில்வே அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது.
1924 முதல் 1939 வரையிலான கால கட்டத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களான இரும்பு, எஃகு, பருத்தி நெசவாலைகள்,சணல், தீப்பெட்டி,சர்க்கரை, காகித மற்றும் காகித கூழ் நிறுவனங்கள் போன்றவை பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இது இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட தொழில்கள் விரிவடைய வழிவகுத்தது. இவ்வாறு பாதுகாக்கப்பட்ட தொழில்கள் முழுமையாக இந்தியச் சந்தையைக் கைப்பற்றி அயல்நாட்டுப் போட்டிகளை முழுவதுமாக முறியடித்தன.
ஆரம்பத்தில் ஆங்கிலேய அரசு இந்தியப் பொருளாதாரத்தை கச்சாப் பொருட்கள் உருவாக்குவதாக உருமாற்றி, தங்கள் நாட்டின் பொருட்களுக்கான சந்தையாக இந்தியாவை ஆக்க முயற்சி செய்தது. இதன் மூலம் பல வழிகளில் இந்தியப் பொருளாதாரத்தை நசுக்க முயற்சித்தது.
ஆங்கிலேய முதலீட்டாளர்கள், சாதகமான இந்தியப் புவியியல் காரணிகளைப் பயன்படுத்தி படிப்படியாக சணல், தேயிலை, காபி, பருத்தி நெசவு, காகிதம், காகிதக்கூழ், சர்க்கரை போன்ற பல்வேறு தொழிற்களை இந்தியாவில் உருவாக்கினார்கள் ஆனால் இந்தியத் தொழிலார்களை பெருமளவில் உறிஞ்சினார்கள்.