பருவம் 2 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வளங்கள் | 6th Social Science : Geography : Term 2 Unit 1 : Resources
புவியியல்
அலகு 1
வளங்கள்
கற்றல் நோக்கங்கள்
• 'வளங்கள்' என்பதன் பொருளை அறிமுகப்படுத்துதல்
• வளங்களின் வகைகள் பற்றி விளக்கமாக அறிதல்
• வளங்கள் பாதுகாத்தலின் தேவையைப் புரிந்து கொள்ளுதல்
• பொருளாதாரச் செயல்பாடுகள் பற்றிப் புரிந்து
கொள்ளுதல்
நுழையுமுன்
இப்பாடம். வளம் என்றால் என்ன? என்பது பற்றியும் அதன் வகைகள்
மற்றும் நிலையான வாழ்விற்கு அதனைப் பாதுகாத்தலைப் பற்றியும் விளக்குகிறது. மேலும் பொருளாதாரச்
செயல்பாடுகள் என்றால் என்ன? என்பது பற்றியும், இயற்கைக்கும் மனித செயல்பாட்டிற்கும்
இடையே உள்ள தொடர்பினையும் விளக்குகிறது.
கேடறியாக்
கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை - குறள்
736
எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும்,
அதனை சீர்செய்யுமளவிற்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான் நாடுகளிலே தலை சிறந்த நாடாகும்.
அப்பா தனது அறைக்குள் எப்பொழுது வருவார் என்று எதிர்பார்த்துத்தன்படுக்கையில்
படுத்திருந்தாள் குழலி பள்ளியில் கொடுத்த தேர்ச்சி அட்டையில் அப்பாவிடம் கையொப்பம்
பெறவேண்டியிருந்தது. ஆனால் அப்பா வருவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. அவள் உடனே
தன் படுக்கையைவிட்டு எழுந்து சமையலறையில் இருக்கும் தன் தாயிடம் ஓடினாள்.
குழலி
:
அம்மா, அப்பா எங்கே மா?
அம்மா
:
இன்றைக்கு அப்பாவுக்கு அதிகநேரம் வேலையிருப்பதினால் சீக்கிரமாகவே கிளம்பிட்டாங்க.
குழலி
:
அதிகநேர வேலைன்னா என்னம்மா?
அம்மா
: வேலை
நேரத்தைவிட கூடுதலான நேரம் வேலை செய்வதுதான் "அதிகநேர வேலை". அப்பா வேலைபார்க்கும்
தொழிற்சாலையில் “சூரிய ஒளித்தகடுகள்" நிறைய தயாரிக்க வேண்டுமாம். அதனால்bஅப்பாவின்bமுதலாளி
சீக்கிரமா வரச்சொல்லிவிட்டார்.
குழலி
:
நேற்று இரவே என்னிடம் சொல்லியிருக்கலாமே? என் தேர்ச்சி அட்டையில் அப்பாவோட கையெழுத்து
போடாமலே இருக்கு.
அம்மா
:
போதும் போதும் போய் முதல்ல குளி நான் கையெழுத்துப் போடுறேன்.
குழலி
:
அம்மா ரொம்ப நன்றிம்மா, ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்குறேன் “சூரிய ஒளித்தகடு” ன்னு
சொல்றீங்களே அதை எதுல தயாரிக்கிறாங்க?
அம்மா
:
நான் சொன்னா உனக்கு புரியுமான்னு தெரியல. ஆனாலும் சொல்றேன் கேளு, மணல் என்ற இயற்கை
வளத்திலிருந்து சிலிக்கான் என்ற தனிமத்தை பிரித்து அதிலிருந்து PV (Photo Voltaic)
செல்களைப் பயன்படுத்தி ஒளி மின்னழுத்தக் கலம் தயாரிக்கிறாங்க. இவை சூரிய ஆற்றலை மின்னாற்றலாக
மாற்றுகின்றன.
குழலி
:
இயற்கை வளமா! அப்படின்னா என்னம்மா?
அம்மா
:
மனிதனுக்குப் பயன்படும் எல்லாமே வளம்தான். அது இயற்கையிலிருந்து கிடைத்தால் அது இயற்கை
வளம்.
குழலி
:
அப்பா எந்த மாதிரியான வேலை செய்யிறாங்கம்மா?
அம்மா
:
அவர் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடியவர். அதனை உற்பத்தி செய்ய இயற்கை வளங்களைப் பயன்
படுத்துகிறார்.
குழலி
:
உற்பத்திச் பொருள்களை செய்யப்பட்ட வளங்கள் என்று அழைக்கலாமா?
அம்மா
:
ஆமாம். அவற்றை மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் என்று அழைக்கலாம்.
குழலி
:
சரிம்மா நேரமாயிடுச்சு. நான் பள்ளிக்குப் போகத் தயாராகுறேன்.
செயல்பாடு: 1
தோட்ட
வேலைக்குத் தொடர்பில்லாத பொருட்களை வட்டமிடுக.
மண்,
விதைகள், நிலம், கணினி, நாற்று, பூந்தொட்டிகள், உரம், பாடநூல்கள்.
மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
பொருளின் பயன்பாட்டைப் பொறுத்துதான் அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. எல்லா வளங்களுக்கும்
உண்டு. மதிப்பு என்பது மதிப்புள்ளதாகவோ, பணமதிப்பற்றதாகவோ இருக்கலாம். பொருளாதாரத்தில்
பணமதிப்புள்ள வளங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. (எ.கா) பெட்ரோலியம். பணமதிப்பற்ற
வளங்கள் எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்கும். (எ.கா) காற்று.
சிந்தனை வினா
வீட்டிற்குத்
தேவையான பொருட்கள் வாங்குவதற்கு நீங்கள் தயார் செய்யும் பட்டியலில் இடம் பெறுகின்ற
பொருட்கள், பணமதிப்பு உள்ளவையா?
உங்களுக்குத்தெரியுமா
ஒரு
பொருளின் பயன்பாட்டினைக் கண்டறிந்த பின்புதான் அப்பொருள் வளமாக மாறுகிறது. மனிதனின்
தேவைகள் நாளுக்கு நாள் மாறுபடக்கூடியவை. தேவையானது மாறுபடும்பொழுது அதை நிறைவு செய்கின்ற
வளங்களும் மாறுகிறது. ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான காரணிகள் காலமும் தொழில் நுட்பமும்
ஆகும். உதாரணமாக நிலக்கரியும், பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வரும் இக்காலகட்டத்தில்,
புதிய கண்டுபிடிப்பான சூரியத்தகடுகள், சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்ற உதவுகிறது எனவே தற்போது
இது ஒரு சிறந்த வளமாகவே நீடிக்கிறது.
சிந்தனை வினா
சூரியத்
தகடுகளின் சாய்வுக் கோணம் புவியின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்குமா?