மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - காற்று | 3rd Science : Term 3 Unit 3 : Air

   Posted On :  28.05.2022 10:40 pm

3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : காற்று

காற்று

இப்பாட இறுதியில் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ பல்வேறு சோதனைகள் மூலம் காற்றின் பண்புகளைப் புரிந்துகொள்ளல் ❖ மனிதனின் சுவாச முறைகள் பற்றிப் புரிந்துகொள்ளல் ❖ வேகத்தின் அடிப்படையில் காற்றின் பல்வேறு வகைகளை அறிதல்

அலகு 3

காற்று



கற்றல் நோக்கங்கள் 

இப்பாட இறுதியில் மாணவர்கள் பெறும் திறன்களாவன: 

பல்வேறு சோதனைகள் மூலம் காற்றின் பண்புகளைப் புரிந்துகொள்ளல் 

மனிதனின் சுவாச முறைகள் பற்றிப் புரிந்துகொள்ளல் 

வேகத்தின் அடிப்படையில் காற்றின் பல்வேறு வகைகளை அறிதல்


ஆயத்தச் செயல்பாடு

படங்களை உற்றுநோக்கி, பின்வரும் வினாவிற்கு விடையளிக்க.


மேற்கண்ட செயல்களைச் செய்ய அவசியமானது எது? காற்று


I. காற்றின் பண்புகள்


காற்று ஓர் இயற்கை வளம். காற்று இல்லாமல் நாம் உயிர் வாழ இயலாது. அது நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் உள்ளது. காற்றுக்கு நிறமும், வடிவமும் இல்லை. காற்றுக்கு எடை உண்டு. காற்று இடத்தை அடைத்துக் கொள்ளும். நம்மால் காற்றைப் பார்க்க இயலாது. ஆனால் உணர முடியும். காற்று எல்லா இடங்களிலும் நகர்ந்துகொண்டே இருக்கும்.


காற்று இடத்தை அடைத்துக்கொள்ளும்

ஆசிரியருக்கான குறிப்பு: பின் வரும் அனைத்துச் சோதனைகளையும் வகுப்பில் செய்து காட்டவும்

தேவையான பொருள்கள் : குவளை, முகவை, நீர் 

செய்முறை: 

நீர் உள்ள முகவையின் மேற்பரப்பில் படத்தில் காட்டியுள்ளவாறு குவளையை வைக்கவும். பின்பு குவளையை நீரினுள் நேராக அழுத்தவும். என்ன காண்கிறீர்கள்? பின்பு குவளையைச் சற்றே சாய்த்து நீரினுள் அழுத்தவும். இச்செயலைச் செய்யும்போது ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா? ஆம். நீர்க்குமிழிகள் நீரின் மேலே வருகின்றன. 


இச்சோதனை மூலம் காற்று இடத்தை அடைத்துக்கொள்ளும் என்பதை நாம் அறியலாம்.


வெப்பக் காற்று மேலே செல்லும்

தண்ணீர்ப் புட்டியின் வாய்ப்பகுதியில் படத்தில் காட்டியபடி ஒரு பலூனைக் கட்ட வேண்டும். பின் அதைச் சூடான நீர் உள்ள முகவையில் வைக்க வேண்டும். சிறிது நேரத்திற்குப் பின் உற்று நோக்கவும். பலூன் மெதுவாக விரிவடைவது ஏன்? 

முகவையில் உள்ள சூடான நீரால் புட்டியில் உள்ள காற்று வெப்பமடைந்து மேல் நோக்கிச் சென்று பலூனை நிரப்பி விரிவடையச் செய்கிறது.

இச்சோதனை மூலம் நீ அறிவது என்ன? வெப்பக் காற்று மேல் செல்லும். 


காற்றுக்கு எடை உண்டு

செய்முறை

இரண்டு பலூன்களை எடுத்துக்கொண்டு அதில் ஒரு பலூனை நன்றாக ஊதி இறுக்கமாகக் கட்டவேண்டும். இரண்டாவது பலூனை ஊதாமல் அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும். ஓர் அடி நீளமுள்ள குச்சியின் ஒரு முனையில் காற்று ஊதிய பலூனையும் மற்றொரு முனையில் காற்று ஊதாத பலூனையும் படத்தில் காட்டியுள்ளவாறு கட்டவேண்டும். இப்பொழுது குச்சியின் மையத்தில் ஒரு நூலைக் கட்டி தராசு போல தொங்கவிட வேண்டும். எந்தப் பலூன் உள்ள முனை கீழ்நோக்கிச் சாய்கிறது? ஏன்?

இச்சோதனை மூலம் காற்றுக்கு எடை உண்டு என்பதை அறியலாம்.


முயல்வோம் 

அ. பின்வரும் கூற்றுகள் சரியா, தவறா என எழுதுக.

1. காற்று இடத்தை அடைத்துக்கொள்ளும். ஆனால் அதற்கு எடையில்லை. (தவறு)

2. காற்றுக்கு நிறமில்லை. _______________ (சரி)

3. காற்றுக்குக் குறிப்பிட்ட வடிவம் உண்டு. (தவறு)

ஆ. பின்வரும் எந்தப் பொருளில் காற்று நிரப்பப்படும்போது அதன் வடிவம் மாறும்? 

1. குடுவை 

2. குவளை

3. பந்து 

விடை : 3. பந்து


இ. ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையானது எது? 

1. தூசு

2. சுத்தமான காற்று 

3. புகை 

விடை : 2. சுத்தமான காற்று

ஈ. வெப்பக் காற்றுப் பலூனுக்கு வண்ணம் தீட்டுக.


II. காற்று நகர்தல் மற்றும் பொருள்களைத் தள்ளுதல்

வகுப்பறையின் ஒரு மூலையில் ஊதுவத்தியை ஏற்றி வைத்துச் சிறிது நேரம் உற்றுநோக்கவும். காற்றின் காரணமாக ஊதுவத்தியின் புகை அறை முழுவதும் பரவுவதைக் காண்பீர்கள்.

வானில் நகரும் மேகங்களைச் சிறிது நேரம் கவனிக்கவும். காற்று நகர்வதால் மேகங்களும் நகர்கின்றன.

காற்றாலையைப் பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

செய்து பார்ப்போம்

ஒரு கண்ணாடி முகவை அல்லது கண்ணாடிக் குவளையில் உள்ள சிறிய நெகிழிப் பந்தைத் தொடாமல் உன்னால் வெளியே எடுக்க முடியுமா? ஆம். உன்னால் முடியும். முகவையின் ஒரு பக்கச் சுவரில் பலமாக ஊதினால், காற்று பந்தை வெளியே உந்தித் தள்ளும்.

செய்து மகிழ்வோம்

வாய் குறுகலான நெகிழிப் புட்டியின் வாய்ப் பகுதியில் காகிதப் பந்துகளை இறுக்கமாக வைத்து அடைக்கவும். இப்பொழுது நெகிழியை வேகமாக அழுத்த காகிதப் பந்துகள் ‘பாப்’ என்ற சத்தத்துடன் தூக்கி எறியப்படும்.

மகிழ்வோம்

காகிதத்தால் எளிய விமானம் ஒன்றைச் செய்து பறக்கவிட்டு மகிழ்க.

இச்செயல்பாடுகளின்மூலம் நாம் அறிவது: காற்றால் பொருள்கள் _________ (நகரும் / நகராது)


எரிதலுக்குக் காற்று தேவை

ஒரு மெழுகுவத்தியை ஏற்றி மேசை மீது வைக்கவும். இப்பொழுது ஒரு கண்ணாடி முகவையை மெழுகுவத்தியின் மீது

தலைகீழாகக் கவிழ்த்து வைத்து (படத்தில் உள்ளவாறு) என்ன நிகழ்கிறது என்று உற்று கவனிக்க.


இச்சோதனையின் மூலம் நாம் அறிவது: பொருள்கள் எரிய ________தேவை.

காற்றுக்கு அழுத்தம் உண்டு

நாம் பழரசத்தை உறிஞ்சுகுழல் மூலம் உறிஞ்சிக் குடிக்கிறோம். பழரசத்தை உறிஞ்ச நமக்குக் காற்று உதவுகிறது. 

உறிஞ்சு குழல் எவ்வாறு வேலை செய்கிறது?

ஒரு கண்ணாடிக் குவளையில் பாதி அளவு நீர் எடுத்து, அதில் சில துளி பேனா மையைச் சேர்க்கவும். ஒளி ஊடுருவக்கூடிய உறிஞ்சுகுழல் ஒன்றை அதில் வைக்கவும். பின்பு குழலின் மேல் பகுதியில் உன் ஆள்காட்டி விரலால் அடைத்துக்கொண்டு, உறிஞ்சுகுழலை வெளியே எடுத்துக் கவனிக்கவும்.

பிறகு உறிஞ்சுகுழலின் மேற்புறம் உள்ள கட்டை விரலை எடுக்கவும். என்ன நிகழ்கிறது என கவனிக்கவும். உறிஞ்சுகுழல் கட்டை விரலால் மூடப்பட்டுள்ளபோது வண்ணநீர் உள்ளே அப்படியே இருக்கிறது. கட்டை விரலை எடுத்தால் அந்த நீர் கீழே வெளியேறுகிறது. காரணம், உறிஞ்சு குழலின் மேற்புறத்தைக் கட்டைவிரலால் மூடும்போது காற்றழுத்தம் மேலே குறைகிறது. அப்போது குழலின் கீழ்ப்புறம் காற்றழுத்தம் அதிகரித்து நீர் கீழே விழாமல் தடுக்கப்படுகிறது.

செய்து பார்ப்போம்

காற்று - சுமைதூக்கி 

தேவையான பொருள்கள்: காலியான பால் பாக்கெட், கயிறு, வெற்று மைப்பேனா அல்லது சிறிய நெகிழிக் குழாய் 

செய்முறை: பால் பாக்கெட்டின் வாய்ப்பகுதியில் வெற்று மைப்பேனா அல்லது நெகிழிக் குழாயை வைத்துக் கயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டவேண்டும். பால் பாக்கெட்டை மேசை மீது வைத்து அதன்மீது இரண்டு அல்லது மூன்று சிறிய நோட்டுப் புத்தகங்களை வைத்து வெற்று மைப்பேனாவின் வழியே பலமாகக் காற்றை ஊதவும். பால் பாக்கெட்டின் உட்பகுதியில் காற்று நிரம்பும்போது, அதன்மேல் உள்ள புத்தகத்தைத் தூக்குகிறது. அது எவ்வாறு நிகழ்கிறது? உங்கள் வாயால் குறிப்பிட்ட அளவே ஊதப்பட்ட காற்று, பால் பாக்கெட்டை விரிவடையச் செய்து புத்தகங்களை உயர்த்தித் தூக்குகிறது.

மேலே உள்ள இச்செயல்பாட்டின் மூலம் நாம் அறிவது ____________

1. வெப்பமடையும்போது காற்று மேல்நோக்கிச் செல்லும். 

2. எரிவதற்குக் காற்று தேவை. 

3. காற்றுக்கு அழுத்தம் உண்டு.

விடை : 3. காற்றுக்கு அழுத்தம் உண்டு 



III. சுவாசம் (உட்சுவாசம், வெளிச் சுவாசம்)


செய்...... கவனி..... கலந்துரையாடு.....

நீ சுவாசிக்கும்போது உனது நாசி அருகே ஆள்காட்டி விரலை வை. காற்று உள்ளே மற்றும் வெளியே செல்வதை உன்னால் உணர முடிகிறதா? 

ஒரு நிமிடத்தில் நீ எத்தனை முறை மூச்சு விடுகிறாய் என எண்ணவும். 

6 அல்லது 7 முறை குதித்த பின், உனது மூச்சு விடும் எண்ணிக்கை மாறுகிறதா? அல்லது அப்படியே உள்ளதா? 

சுமார் 100 மீ. தூரம் ஓடிய பின் உனது மூச்சு விடும் வேகத்தைக் கவனி.

அனைத்து உயிர்களும் உயிர் வாழ, காற்று தேவை. தாவரங்கள் இலைத் துளை மூலமும், மீன்கள் செவுள்கள் மூலமும் சுவாசிக்கின்றன. மனிதர்கள் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றனர்.

உட்சுவாசம் என்பது, காற்றை உள்ளே இழுப்பதாகும். வெளிச் சுவாசம் என்பது காற்றை வெளியே விடுவது ஆகும். உட்சுவாசம், வெளிச் சுவாசம் இரண்டு நிகழ்வும் சேர்ந்ததே சுவாசித்தல் எனப்படும்.


சுவாசித்தின்போது நாம் உயிர்வளியை (ஆக்ஸிஜனை) உள்ளிழுத்துக் கரியமில வாயுவை வெளியே விடுகிறோம்.

சிந்தனை பகுதி: நீ உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் செல்லும் போது அவர் உன் நாடித் துடிப்பைச் சோதிப்பதும், உன்னை நன்றாக மூச்சை இழுத்துவிடச் சொல்வதும் ஏன்?

உங்களுக்குத் தெரியுமா? 

நாம் மூச்சை உள் இழுக்கும்பொழுது மார்புப் பகுதி விரிவடைவதும் மூச்சை வெளிவிடும் பொழுது மார்புப் பகுதி சுருங்குவதும் ஏன்?


முயல்வோம்

சுவாசிக்கக் கூடியவைக்கு () குறியும், சுவாசிக்காதவைக்கு ( X ) குறியும் இடுக.

எழுதுவோம்

பின்வரும் செயல்களின் சுவாசமுறையை எழுதுக.


செய்து மகிழ்வோம்

சுவாசமும், உடற்பயிற்சியின் தாக்கமும் 

மதி மற்றும் மொழி இருவரும் நடத்தல், தாவுதல், ஓடுதல் போன்ற பல்வேறு உடற்பயிற்சிகளைச் செய்தனர். ஒவ்வொரு செயலையும் செய்தபின் அவர்கள் விடும் மூச்சுகளின் எண்ணிக்கை குறித்து ஒரு பட்டை வரைபடம் வரைந்தனர்.


செயல்கள் 

வரைபடத்தைக் கவனித்து விடையளிக்க. 

அ) எந்தச் செயலுக்குப்பின் மூச்சு விடும் வேகம் அதிகரிக்கிறது? ஓடுதல்

ஆ) எந்தச் செயல் இதயத் தசைக்குக் குறைந்த பயிற்சி தருகிறது? அமர்தல்

இ) சரியா, தவறா என எழுதுக. 

1. நடக்கும்போது அதிக முறை மூச்சு விடுகிறார்கள். (தவறு)

2. ஓய்வாக அமர்ந்து இருக்கும்பொழுது குறைவாக மூச்சு விடுகிறார்கள். (சரி)

3. ஓடும்போது நிமிடத்திற்கு 50 முறை மூச்சு விடுகிறார்கள். (சரி)

4. மிகக் கடினமாகப் பயிற்சிகள் செய்யும்போது மூச்சு விடும் வேகம் அதிகரிக்கும். (சரி)


IV. காற்று வீசுதல் (காற்று நகர்தல்)


செய்து பார்ப்போமா: 

சிறிது மணலை எடுத்து மெதுவாகக் கீழே போடு. என்ன நிகழ்கிறது? அது காற்று வீசும் திசையில் விழுகிறது. 

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் காற்று நகர்வதையே ‘காற்று வீசுதல்’ என்பர். பூமியின் பரப்பில் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது.

காற்று வீசும் வேகத்தைப் பொருத்து, காற்றானது 'தென்றல்', 'புயல்', 'சூறாவளி’ என வகைப்படுத்தப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா? 

காற்றின் வேகத்தை அளக்க அனிமோ மீட்டர் என்ற கருவி பயன்படுகிறது.

தென்றல் காற்று

இதமாகவும் மிதமாகவும் வீசும் காற்று 'தென்றல் காற்று’ எனப்படும். இது கடற்காற்று, நிலக்காற்று என இருவகைப்படும். 

i. கடற்காற்று

பகல் பொழுதில் கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்று ‘கடற்காற்று’ எனப்படும். இது நிலத்தில் உள்ள வெப்பக் காற்று மேல்நோக்கி எழுவதனால், கடலில் உள்ள குளிர்ந்த காற்று அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக நிலத்தை நோக்கி வீசுவதால் நிகழ்கிறது.


ii. நிலக்காற்று

இரவுப் பொழுதில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று 'நிலக்காற்று' எனப்படும். இது கடலின் மீதுள்ள வெப்பமான காற்று மேல்நோக்கி எழுவதனால், அந்த வெற்றிடத்தை நிரப்ப நிலத்திலுள்ள குளிர்ந்த காற்று, கடலை நோக்கி வீசுவதால் நிகழ்கிறது.


புயல் காற்று

வேகமாக வீசக்கூடிய பலத்த காற்று ‘புயல் காற்று’ எனப்படும். இது பல உயரமான மரங்களை வேரோடு சாய்ப்பதுடன் பயிர்களையும் அழிக்கும்.

சூறாவளி

மிகவும் வேகமாக வீசக்கூடிய பலத்த காற்று 'சூறாவளி' எனப்படும். இது புயலைவிடப் பலமானது. எனவே இது மரங்கள், கட்டடங்கள் போன்ற அனைத்தையும் சேதப்படுத்துகிறது.

ஆசிரியருக்கான குறிப்புகள் : 

பல்வேறு இயற்கைப் பேரிடர்களின் படங்களைக் காண்பித்து அவற்றைப் பற்றிக் கலந்துரையாடச் செய்க 

ஆழ்துளைக் கிணற்றைத் திறந்தநிலையில் வைப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கலந்துரையாடச் செய்க. 

இணைப்போம்

பின்வருவனவற்றைப் பொருத்துக. 

அ. தென்றல் - பலத்த காற்று 

ஆ. புயல் - மிக பலத்த காற்று 

இ. சூறாவளி -  இதமான காற்று

விடை  

அ. தென்றல் - இதமான காற்று

ஆ. புயல்    - பலத்த காற்று 

இ. சூறாவளி - மிக பலத்த காற்று 


வரைவோம்

கொடுக்கப்பட்ட படத்தில் கடற்காற்று, நிலக்காற்று வீசும் திசைகளை வரைக.


முயல்வோம்

கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. இதமான காற்று ____________ எனப்படும். 

விடை  : தென்றல்

2. காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவுவது ____________ 

விடை  : காற்றாலை

3. நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று ____________ எனப்படும். 

விடை  : நிலக்காற்று

4. கடற்காற்று என்பது ____________ இல் இருந்து ____________  நோக்கி வீசும்.

விடை  : கடல் , நிலம்


செய்து பார்ப்போம்

இரண்டு முகவைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்றில் மணலையும் மற்றொன்றில் நீரையையும் நிரப்பவும். பின் இரண்டு முகவைகளையும் சூரிய ஒளியில் ஒரு மணி நேரம் வைக்கவும். பின்பு உங்களது ஒரு கையை நீரின் மீதும் மற்றொரு கையை மணல் மீதும் வைக்கவும். 

இவற்றில் அதிக சூடாக இருப்பது எது? நீர் / மணல்

விடை : மணல்

மீண்டும் இரண்டு முகவைகளையும் சிறிது நேரம் நிழலில் வைக்கவும். முன்பு போன்றே உங்களது கைகளால் இரண்டு முகவைகளையும் தொட்டுப் பார்க்கவும். 

இப்போது இரண்டில் எது அதிகம் குளிர்ச்சி அடைந்துள்ளது? நீர் / மணல்

விடை : நீர்

விடையளிப்போம் 

பேரிடரின்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? 

அ. பலத்த மழையின் பொழுது தொலைக்காட்சி ____________ (பார்ப்பேன் / பார்க்க மாட்டேன்

ஆ. புயல் வீசும் காலங்களில் எச்சரிக்கைகளைப் ____________ (பின்பற்றுவேன் / பின்பற்ற மாட்டேன்) 

இ. பலத்த காற்று வீசுகின்றபோது மரத்தின் கீழ் ____________ (நிற்பேன் / நிற்க மாட்டேன்)


Tags : Term 3 Chapter 3 | 3rd Science மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு அறிவியல்.
3rd Science : Term 3 Unit 3 : Air : Air Term 3 Chapter 3 | 3rd Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : காற்று : காற்று - மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : காற்று