நீர் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நீரின் பரவல் | 6th Science : Term 3 Unit 2 : Water
நீரின் பரவல்
புவியின் மொத்த பரப்பளவில்நான்கில் மூன்று பங்கு நீர் சூழ்ந்துள்ளது
என்பதனை நாம் அறிவோம். பெரும்பாலான நீரானது, அதாவது 97% நீரானது பெருங்கடல்களிலும்,
கடல்களிலும் காணப்படுகிறது.
கடலில் கிடைக்கும் நீரினை நம்மால் குடிக்க இயலுமா?
கடல் நீரானது உப்பு நீராகும். ஆனால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும்
நீரானது உப்பு நீர் அல்ல. அதனை நாம் நன்னீர் என அழைக்கிறோம். குளங்கள், குட்டைகள்,
ஆறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் வீடுகளில் காணப்படும் குழாய்களில் கிடைக்கும் நீர்
பொதுவாக நன்னீராகும்.
புவியில் காணப்படும் நீரின் அளவினை 100% எனக் கொண்டால், நமக்கு
கிடைக்கும் நன்னீரின் அளவு எவ்வளவு என்பதனைக் காண்போம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கப்படத்தினைக் (Pie chart) காண்க.
வட்ட விளக்கப்படத்திலிருந்து நாம் பின்வரும் தகவல்களைப் பெறுகிறோம்.
புவியில் காணப்படும் நீரில் 97 % நீரானது உப்புநீராகும். நன்னீரின்
அளவு வெறும் 3 % ஆகும். அவற்றிலும் ஒரு பகுதி துருவங்களில் பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளாகவும்
உள்ளதனால் அந்நீரினையும் நம்மால் பயன்படுத்த இயலாது.
மொத்தம் 3% உள்ள நன்னீரானதுபின்வருமாறு பரவி உள்ளது.
துருவ பனிப்படிவுகள், பனியாறுகள் 68.7%
நிலத்தடி நீர் 30.1%
மற்ற நீர் ஆதாரங்கள் 0.9%
மேற்பரப்பு நீர் 0.3%
மொத்த மேற்பரப்பு நீரான 0.3% பின்வருமாறு பரவியுள்ளது.
ஏரிகள் 87%
ஆறுகள் 2%
சதுப்பு நில நீர் 11%
வட்ட விளக்க வரைபடத்திலிருந்து புவியில் நமது பயன்பாட்டிற்கென
மிகக் குறைந்த அளவிலான நீரே கிடைக்கின்றது என்பதனையும், அதனை பாதுகாப்பதன் அவசியத்தினையும்
நாம் புரிந்து கொள்ளலாம். அல்லவா?
செயல்பாடு 1 : வெவ்வேறு மூலங்களில் இருந்து பெறக்கூடிய நீரின் சார்பளவு:
ஒரு 20 லிட்டர் வாளி நீரினை எடுத்துக் கொள்வோம். மேலும், ஒரு
500 மி.லி குவளை, ஒரு 150 மி.லி டம்ளர் மற்றும் 1 மி.லி தேக்கரண்டி (ஸ்பூன்) ஆகியவற்றினை
எடுத்துக்கொள்வோம். 20 லிட்டர் அளவுள்ள வாளியின் கொள்ளளவு புவியில் உள்ள மொத்த நீரின்
அளவைக் குறிப்பதாக வைத்துக்கொள்வோம்.
இப்பொழுது 20லி வாளியில் இருந்து ஒரு 500 மி.லி குவளை அளவு எடுத்தால்,
அது பூமியில் உள்ள மொத்த நன்னீரின் அளவினைக் குறிக்கும். வாளியில் மீதமுள்ள நீர் கடல்கள்
மற்றும் பெருங்கடல்களில் காணப்படும் நீரின் அளவினைக் குறிக்கும். இது மனித பயன்பாட்டிற்கு
உரியது அல்ல. குவளையில் உள்ள நன்னீரில் மலைகள், பனியாறுகள், பனிப்படிவுகள் ஆகியவற்றில்
காணப்படும் நீரும் அடங்கியுள்ளதால் இதுவும் மனிதனின் தேவைக்கு முழுவதுமாகப் பயன்படுவதில்லை.
பிறகு குவளையில் இருந்து ஒரு 150 மி.லி அளவுள்ள டம்ளரில் நீரை எடுக்கவும்.
இது புவியில் உள்ள மொத்த நிலத்தடி நீரின் அளவினைக் குறிக்கிறது.
இறுதியாக அந்த டம்ளர் நீரிலிருந்து தேக்கரண்டியில் ஒரு கால்பங்கு நீரினை எடுக்கவும்.
இதுவே பூமியில் உள்ள மொத்த ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள மேற்பரப்பு நீராகும்.
இச்செயல்பாட்டிலிருந்து உலகெங்கிலும் பயன்பாட்டிற்கு என உள்ள
மொத்த நீரின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது என்பதனை அறியலாம். எனவே நாம் நீரினை மிகுந்த
கவனத்துடன் கையாள வேண்டுமல்லவா?
நீரானது
மண்ணில் உள்ள உப்புகள் மற்றும் தாதுப்பொருள்களை தன்னுடன் கரைத்து எடுத்துச் செல்கிறது.
இந்த உப்புகளும், தாதுக்களும் கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் இலட்சக்கணக்கான ஆண்டுகளாக
படிந்து வருகிறது. கடலின் அடியில் காணப்படும் எரிமலைகளும் கடல் நீருடன் உப்பினை சேர்க்கின்றன.
அதிக
அளவு கரைபொருள் கரைந்துள்ள நீரினை நம்மால் பயன்படுத்தவோ அல்லது பருகவோ இயலாது. இத்தகைய
நீரினை நாம் உப்பு நீர் என அழைக்கிறோம்.
செயல்பாடு
2 : இச்செயல்பாட்டிற்கு சாதாரண உப்பு, மணல், சுண்ணக்கட்டித்தூள், கரித்தூள் மற்றும்
காப்பர் சல்பேட்டினை எடுத்துக்கொள்ளவும். உரிய இடத்தில் செய்யவும்.
பின்வரும்
அட்டவணையை நிரப்புக:
இச்செயல்பாட்டில் சாதாரண உப்பு மற்றும் காப்பர்
சல்பேட் ஆகியவை முழுவதும் நீரில் கரைவதோடு தங்களின் நிறம் மற்றும் பண்புகளை நீருக்கு
அளிக்கின்றன. ஆனால் மணல், சுண்ணக்கட்டித் தூள் மற்றும் கரித்தூள் ஆகியவை நீரில் கரையவில்லை.