Home | 3 ஆம் வகுப்பு | 3வது தமிழ் | எழில் கொஞ்சும் அருவி

பருவம் 2 இயல் 6 | 3 ஆம் வகுப்பு தமிழ் - எழில் கொஞ்சும் அருவி | 3rd Tamil : Term 2 Chapter 6 : Ezhil konjum aruvi

   Posted On :  30.06.2022 01:16 am

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : எழில் கொஞ்சும் அருவி

எழில் கொஞ்சும் அருவி

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : எழில் கொஞ்சும் அருவி

6. எழில் கொஞ்சும் அருவி



(அங்கவை, சங்கவை இருவரும் சித்தப்பா, சித்தி வீட்டிற்குச் செல்கிறார்கள்)


சித்தி: வாருங்கள், செல்லங்களே! வீட்டில் எல்லாரும் நலமா?

அங்கவை சங்கவை: நலமாய் உள்ளோம் சித்தி, நீங்கள் நலமா?

சித்தப்பா: நீங்கள் இருவரும் கல்விச் சுற்றுலா சென்று வந்தீர்களாமே! அதைப் பற்றிக் கூறுங்கள் கேட்போம். 

அங்கவை: நாங்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்குப் போய் வந்தோம். அதைப் பற்றிக் கூறுகிறேன். கேளுங்கள்.

சங்கவை: எழில் கொஞ்சும் மலையில் உள்ள அந்த அருவி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது. 

சித்தப்பா: மலையின் உச்சியிலிருந்து வெள்ளியை உருக்கி ஊற்றியது போல பேரிரைச்சலுடன் கீழ் நோக்கி விழும் அருவி பார்க்க பார்க்க அழகு, இல்லையா?

அங்கவை: ஆம் சித்தப்பா அழகோ, அழகு

சித்தப்பா: அதற்கு ஒகேனக்கல் என்ற பெயர் எப்படி வந்ததாம்? தெரிந்து கொண்டீர்களா?


அங்கவை: ஒகேனக்கல் என்பதற்குப் புகையும் கல்பாறை எனப்பொருள்.கன்னடத்தில் ஒகே என்பது புகை ஆகும். அருவிநீர் கல்பாறையில் பட்டுத் தெறித்து, வெண்புகை போலத் தோற்றம் அளிப்பதால் தான் இப்பெயர் வந்தது. காவேரி ஆறு கர்நாடகத்திலுள்ள குடகுமலையில் தோன்றி இங்குதான் தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைகிறது 

சங்கவை: உல்லாசப் பயணிகளைப் பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கும் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும் காட்சி அற்புதமாக இருக்கும். 


சித்தி: அவ்விடத்திற்கு எதன் மூலம் பயணம் செய்தீர்கள்? 

சங்கவை: இந்தக் கண்கொள்ளாக் காட்சியினை கண்டுகளிக்க பரிசலில் சென்றோம். என்னே அருமை! 100 அடி உயரத்திலிருந்து விழும் அருவியில் குளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 

சித்தப்பா: பரிசலில் செல்லும் வழியில் என்னென்ன பார்த்தீர்கள்?

அங்கவை: மலை நடுவே பாதையமைத்து அருவி நீர் ஓடும் காட்சி வெண்ணெய் உருகுவது போல தெரிந்தது. இந்தப் பரிசலில் பயணம் சென்றது எங்களை ஆனந்தக் களிப்பில் ஆழ்த்தியது.

சங்கவை: இரு மலைகளுக்கு இடையே தொங்குபாலத்தில் சென்றோம். 


அங்கவை: நாங்கள் எல்லாரும் நீராடி விட்டு, மீண்டும் பரிசலில் கரைக்கு வந்தோம். உணவு உண்டபின், மகிழ்ச்சியோடு மான்பூங்கா சென்றோம். துள்ளித்திரியும் மான் கூட்டம், முதலைப் பண்ணை முதலியவற்றைப் பார்த்தோம்.

சங்கவை: சித்தி, அங்கே மிகப் பழைமையான தேசநாதீஸ்வரர் கோவில் உள்ளது. அது அதியமான் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கல்வெட்டைப் படித்து, அறிந்து கொண்டோம்.

சித்தப்பா: பாராட்டுகள், குழந்தைகளே! அருவியின் அழகை கண்டுகளித்தது மட்டுமின்றி, அங்குள்ள பொது அறிவுச் செய்திகளையும் திரட்டியிருக்கிறீர்கள்.

சித்தி: நன்றி குழந்தைகளே! எங்களுக்கும் ஒகேனக்கலை நேரே சென்று பார்த்த பரவசத்தை உண்டாக்கி விட்டீர்கள்! நாமும் குடும்பத்துடன் ஒருமுறை சென்று வருவோம்.

உன்னை அறிந்துகொள்.

தமிழ்நாட்டில் கோடை வாழிடமாகவும் சுற்றுலாத்தலமாகவும் விளங்கும் ஊட்டி (உதகமண்டலம்) 'மலைகளின் அரசி' என அழைக்கப்படுகிறது. இது, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.


இன எழுத்துகள்

குழந்தைகளே! நண்பர்களோடு சேர்ந்திருப்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்தானே! உங்களைப் போலத்தான் சில எழுத்துகளும் ஒன்றாகவே இருக்க விரும்புகின்றன. அவற்றை இனஎழுத்துகள் என அழைக்கின்றனர்.

உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் அன்பாகப் பேசுவது, ஒரே மாதிரியாக ஆடை அணிவது என்று சில பண்புகள் பொதுவாக இருப்பதைப்போல, இனஎழுத்துகளும் பிறக்கும் இடம், ஒலிக்கும் முயற்சி, காலஅளவு, வடிவம் முதலியவற்றில் ஒத்துப்போகின்றன. சரி, எந்த எழுத்து எந்த எழுத்துக்கு இனமாக வரும்? தெரிந்து கொள்வோமா? 

உயிரெழுத்துகள்

உயிரெழுத்துகள் பன்னிரண்டு அல்லவா! அவற்றை உயிர்க்குறில், உயிர்நெடில் எனப்பிரித்துப் படித்திருப்பீர்கள். ஆகையால், உயிர்க்குறில் எழுத்துகளுக்கு உயிர்நெடில் எழுத்துகள் இனமாக வரும். எப்படி?


அ - ஆ

இ - ஈ

உ - ஊ

எ - ஏ

ஐ - ?

ஒ - ஓ

ஔ - ?

என்ன இது? ஐ என்ற எழுத்துக்கும் ஔ என்ற எழுத்துக்கும் இன எழுத்து எங்கே? கண்டுபிடிக்கலாமா? ஐ - இந்த எழுத்தை நன்றாக ஒலித்துப் பாருங்கள். இறுதியில் என்ன ஓசையில் முடிகிறது? இ தானே. அதுபோல, ஔ என்னும் எழுத்தையும் ஒலித்துப் பாருங்கள். எந்த எழுத்தின் ஓசையில் முடிகிறது? உ என்னும் எழுத்தின் ஓசையல்லவா! இப்போது எழுதிப் பார்க்கலாமா?


ஐ - இ

ஒள - உ


மெய்யெழுத்துகள்

மெய்யெழுத்துகளை நாம் ஏற்கெனவே பெயரிட்டு அழைத்தோமே, நினைவிருக்கிறதா? என்ன அது? வல்லினம், மெல்லினம், இடையினம்.

வல்லின எழுத்துகளுக்கு மெல்லின எழுத்துகள்தாம் இனமாக வரும். கீழே இருப்பதைப் பாருங்கள்.


க் - ங் 

ச் - ஞ்

ட் - ண் 

த் - ந் 

ப் - ம்

ற் - ன்

ய், ர், ல், வ், ழ், ள், இவை ஆறு எழுத்துகளும் இடையினம். இவற்றிற்கு இன எழுத்துகள் இல்லை. ஓர் எழுத்திற்கு அருகில் அதே எழுத்து வந்தாலும் அவை இன எழுத்துகள் அல்ல (பக்கம், அச்சம்...)

இன எழுத்துகள் சேர்ந்தே வருவதைக் கண்டுபிடிக்கலாம் வாருங்கள். கீழே உள்ள படங்களைப் பார்த்து, அவற்றின் பெயர்களைச் சொல்லி, எழுதிப் பாருங்கள்.


உங்கள் நண்பர்களின் பெயர்களிலுள்ள இன எழுத்துகளைக் கண்டுபிடியுங்கள்

மங்கை, கங்கா, இராமலிங்கம், மஞ்சுளா, அஞ்சலி, காஞ்சனா, அஞ்சனா, பாண்டியன், தண்டபாணி, காந்தி, சாந்தி, ஜெயந்தி, கந்தன், நந்தா, நந்தினி, வந்தனா, அம்பிகா, அம்பு, இளமாறன், மணிமாறன்.


Tags : Term 2 Chapter 6 | 3rd Tamil பருவம் 2 இயல் 6 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 2 Chapter 6 : Ezhil konjum aruvi : Ezhil konjum aruvi Term 2 Chapter 6 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : எழில் கொஞ்சும் அருவி : எழில் கொஞ்சும் அருவி - பருவம் 2 இயல் 6 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : எழில் கொஞ்சும் அருவி