பருவம் 3 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம் : இணைச்சொற்கள் | 5th Tamil : Term 3 Chapter 1 : Naadu, samugam, arasu, niruvagam
கற்கண்டு
இணைச்சொற்கள்
பூவரசன் : செல்வா, என்னாச்சு? ஏன்
கவலையாக இருக்கிறாய்?
செல்வம் : எங்க வீட்டுத் தோட்டத்திலே இருந்த சின்னஞ்சிறிய பூச்செடி
வாடிவதங்கியிருக்கு.
பூவரசன் : அதற்காகவா கவலைப்படுகிறாய்?
செல்வம் : ஆமாம். நான் அதை எவ்வளவு கண்ணுங்கருத்துமாகப்
பார்த்துக்கொண்டேன் தெரியுமா? போனவாரம்தான் அதில அடுக்கடுக்கா வெள்ளைவெளேர்னு பூ பூத்திருந்தது.
பூவரசன் : வருந்தாதே, செல்வம். இரவுபகலாக நீ அந்தச் செடிய எப்படிக் கவனித்திருப்பாய் என்று எனக்கும்
புரிகிறது. மீண்டும் அந்தச்செடி பச்சைப்பசேல்னு மாறணும் இல்லையா? நம்ம அறிவியல் ஆசிரியரிடம் கூறி இதற்குத் தீர்வு காண்போம்.
உரையாடலைப் படித்தீர்களா? தடித்த எழுத்துகளில் சில சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன அல்லவா? அவற்றைப்பற்றித்தான் நாம் இப்போது படிக்கப் போகிறோம்.
நாம் பேசும்போதும் எழுதும்போதும் இயல்பாகவே இத்தகைய
சொற்களைப் பயன்படுத்துகிறோம். நன்றாகக் கவனித்தீர்களேயானால், ஒவ்வொன்றும் இரண்டிரண்டு சொற்களாக இருப்பதைக் காண்பீர்கள்.
எப்படி?
சிறிய + சிறிய - சின்னஞ்சிறிய
கண்ணும் + கருத்தும் - கண்ணுங்கருத்தும்
இரவு + பகல் - இரவுபகல்
பச்சை + பச்சை - பச்சைப்பசேல்
இவைபோன்று இணையாகச் சொற்கள் வருகின்றன. ஆகையால், இவற்றை இணைமொழிகள் அல்லது இணைச்சொற்கள் என்று கூறுகிறோம்.
இவை,
தொடர்களில் வரும்போது எப்போதும் சேர்ந்தே இருக்கும்.
நம்முடைய சொற்களஞ்சியத்தைப் பெருக்குவதற்கு இவை துணைபுரிகின்றன.
இணைச்சொற்கள் மூவகையாக வருகின்றன. அவையாவன,
நேரிணை - கண்ணுங்கருத்தும், வாடிவதங்கி, ஈடும்எடுப்பும்
எதிரிணை - இரவும்பகலும் அங்கும்இங்கும், வெற்றியும் தோல்வியும்
செறியிணை - பச்சைப்பசேல், வெள்ளைவெளேர், சின்னஞ்சிறிய, அடுக்கடுக்காக