பருவம் 3 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் : சிறுபஞ்சமூலம் - காரியாசான் | 5th Tamil : Term 3 Chapter 1 : Naadu, samugam, arasu, niruvagam
இயல் ஒன்று
செய்யுள்
நாடு / சமூகம் / அரசு / நிருவாகம்
கற்றல் நோக்கங்கள்
❖ பண்டைத் தமிழ்
மன்னர்களின் நிருவாகத் திறனையும் ஆட்சிமுறையையும் அறிந்துகொள்ளுதல்
❖ கடையெழு வள்ளல்களின்
கொடைத்தன்மையைத் தெரிந்துகொள்ளுதல்
❖ தமிழர்களின் சமூகச்
சிந்தனைகளைப் புரிந்துகொள்ளுதல்
❖ நடைமுறை
வாழ்க்கையில் இணைச்சொற்களைப் பயன்படுத்துதல்
சிறுபஞ்சமூலம்
கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச்
செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் -
பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல் வனப்பு
- காரியாசான்.
சொல்பொருள்
வனப்பு – அழகு
கண்ணோட்டம் - இரக்கம்
இத்துணை - இவ்வளவு
வேந்தன் - அரசன்
வாட்டான் - வருத்தமாட்டான்
பண் - இசை
பாடல் பொருள்
கண்ணுக்கு அழகு, இரக்கம் கொள்ளுதல்; காலுக்கு அழகு, பிறரிடம் பொருள் வேண்டிச் செல்லாமை; ஆராய்ச்சிக்கு அழகு, இது இவ்வாறு முடியும் என்று உறுதி செய்து கூறுதல்; இசைக்கு அழகு, அதனைக் கேட்போர் நன்று எனச் சொல்லுதல்; அரசனுக்கு அழகு, தன் நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனைப்
புகழ்ந்து கூறுதல்.
நூல் குறிப்பு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமூலம். கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்கள் உடல் நோயைத் தீர்க்கின்றன. அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகள், மக்கள் மனநோயைத் தீர்ப்பனவான உள்ளன. ஆகையால், இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர், காரியாசான்.