பருவம் 2 இயல் 3 | 3 ஆம் வகுப்பு தமிழ் - கல்வி கண் போன்றது | 3rd Tamil : Term 2 Chapter 3 : Kalvi kan pondrathu
3. கல்வி கண் போன்றது
விரியூர் கிராமத்திலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் அன்று கிராமசபைக் கூட்டம். வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பைக் கேட்ட பொன்வண்ணன், தம் கடையைப் பூட்டிவிட்டுக் கூட்டத்திற்குச் சென்றார்.
பஞ்சாயத்துத் தலைவர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். அரசின் சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்துப் பேசினார். இத்திட்டத்தின்கீழ் யார் யாருக்கெல்லாம் உதவித்தொகை வந்திருக்கிறதோ அவர்களின் பெயர்களைப் படித்தார்.
பொன்வண்ணன் தம்முடைய பெயர் வருகிறதா என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், கடைசி வரை அவர் பெயர் வரவேயில்லை.
பொன்வண்ணன், தலைவரிடம் சென்றார். "ஐயா! எனக்கு ஏன் உதவித்தொகை இல்லை? நானும் பண வசதியில்லாமல் மிகவும் துன்பப்படுகிறேனே......” என்று கேட்டார்.
"யாருக்கெல்லாம் பண உதவி தேவையோ, அவர்களுக்கான கூட்டம் பற்றி உங்களுக்குத் அஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தோமே.! நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?" என்றார் தலைவர்.
"ஆமாம். போன வாரம் அஞ்சல்காரர் கொடுத்தார். படிக்கத் தெரியாததால் அப்படியே வைத்துவிட்டேன்".
"என்னப்பா! உனக்குத்தான் படிக்கத் தெரியல, ஆனா, உம்பையன்தான் பள்ளியிலே படிக்கிறானே, அது எப்படி தெரியாமல் போகும்?”
பொன்வண்ணன் சற்றுக் குற்ற உணர்வோடு தலை குனிந்தபடி கூறினார், "ஐயா! நான் மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கிறேன். எனக்கு உதவி செய்வதற்காக, அவனை அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்கச் சொல்வேன். சில சமயங்களில் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனால்தானோ என்னவோ அவனுக்குச் சரியாக எழுதவும் படிக்கவுமே தெரியாமலே போய்விட்டது. அவனுடைய ஆசிரியரும் இதைப்பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார். பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்புமாறு அறிவுரையும் கூறுவார். நான்தான் தப்பு செய்துவிட்டேன். என் மகனை இப்படிப் படிக்கத் தெரியாதவனாக ஆக்கிவிட்டேன்." என்று வருத்தத்துடன் கூறினார் பொன்வண்ணன்.
"உங்கள் அறியாமையால் இப்போது என்னவாயிற்று பார்த்தீர்களா? அரசின் உதவித் தொகையை உங்களால் பெற முடியாமல் போய்விட்டதே. கல்வி அறிவு இருந்தால்தான் நாள்தோறும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையும் அறிவியல் மாற்றங்களையும் அறிந்துகொள்ள முடியும். நம்மையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். கல்வி, தொழிலுக்கு வழிகாட்டுகிறது. வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுகிறது. இப்போதாவது புரிந்து கொண்டீர்களா?”
"ஐயா! இப்ப நான் நன்கு புரிந்து கொண்டேன். நான்தான் கல்வி கற்காமல் இருந்து விட்டேன். என் மகனாவது நன்கு படித்து வாழ்வில் முன்னேறட்டும். இனி நான் என் மகனை வேலைக்காகப் பள்ளியைவிட்டு நிறுத்த மாட்டேன். இப்போதே என் மகனை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரிடம் மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு நான் வேண்டிக்கொள்வேன்.”
புரிந்து கொண்டால் சரிதான். உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால நீங்க மட்டும் தெரிந்துகொண்டால் போதாது. நம் கிராமத்தினர் அனைவருமே அறியாமை நீங்கி, கல்வி குறித்த விழிப்புணர்வு பெறவேண்டும்.
கல்வியின் தேவையை எடுத்துக்கூறிய கிராம சபைத் தலைவருக்கு, நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் பொன்வண்ணன்.
.
உன்னை அறிந்துகொள்