இயல் 1 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: தமிழ்விடு தூது | 9th Tamil : Chapter 1 : Amuthendru ber
மொழி – க
தமிழ்விடு தூது
கவிதைப் பேழை
நுழையும்முன்
தமிழின் பெருமையைப் பாடக் கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை, அதற்கொரு கருவி. கிளி, அன்னம், விறலி, பணம், தந்தி என்று பல தூது வாயில்களைப்பற்றி அறிந்துள்ளோம். தமிழையே தூதுப் பொருளாக்கியுள்ளது 'தமிழ்விடு தூது'. தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, திறம், தகுதி ஆகியன இச்சிற்றிலக்கியத்தில் விரவியுள்ளன.
சீர்பெற்ற செல்வம்
தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் - மண்ணில்
குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று மூன்று இனத்தும் உண்டோ - திறம் எல்லாம்
வந்து என்றும் சிந்தா மணியாய் இருந்த உனைச்
சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே* - அந்தரமேல்
முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ
குற்றம் இலாப் பத்துக் குணம்பெற்றாய் - மற்றொருவர்
ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ
நோக்கிய வண்ணங்கள் நூறுஉடையாய் - நாக்குலவும்
ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள் உணவு
ஆன நவரசம்உண் டாயினாய் - ஏனோர்க்கு
அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ
ஒழியா வனப்புஎட்டு உடையாய்....
(கண்ணிகள் 69-76)
சொல்லும் பொருளும்
குறம், பள்ளு - சிற்றிலக்கிய வகைகள்; மூன்றினம் - துறை, தாழிசை, விருத்தம் ; திறமெல்லாம் - சிறப்பெல்லாம்; சிந்தாமணி - சிதறாத மணி(சீவகசிந்தாமணி), என்னும் இருபொருளையும் குறிக்கும் ; சிந்து - ஒருவகை இசைப்பாடல்.
முக்குணம் - மூன்று குணங்கள் (சத்துவம்-அமைதி, மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம்; இராசசம் - போர், தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்; தாமசம்சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும் குணம்); பத்துக்குணம் - செறிவு, சமநிலை முதலிய பத்துக்குண அணிகள்.
வண்ணங்கள் ஐந்து - வெள்ளை, சிவப்பு, கறுப்பு, மஞ்சள், பச்சை; வண்ணம் நூறு - குறில், அகவல், தூங்கிசை வண்ண ம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
ஊனரசம் - குறையுடைய சுவை; நவரசம் - வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை ஆகிய ஒன்பது சுவை; வனப்பு- அழகு. அவை அம்மை , அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.
பாடலின் பொருள்
இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான முத்தி ஆகிய விடுதலை தரும் கனியே! இயல், இசை, நாடகம் என, மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே! உன்னிடம் நான் மகிழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. அதைக் கேட்பாயாக.
தமிழே! உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புக் கொள்கின்றனர். பிறர் படிக்கும் வகையில் நீ அவற்றைக் கொண்டிருக்கிறாய். அதனால் உனக்குத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ?
தெரிந்து தெளிவோம்
கண்ணி - இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். அதேபோல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
பாவின் திறம் அனைத்தும் கைவரப்பெற்று (பொருந்தி நின்று) என்றுமே 'சிந்தா (கெடாத) மணியாய் இருக்கும் உன்னை (இசைப்பாடல்களுள் ஒருவகையான) 'சிந்து' என்று (அழைப்பது நின் பெருமைக்குத் தகுமோ? அவ்வாறு) கூறிய நா இற்று விழும் அன்றோ ?
வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட சத்துவம், இராசசம், தாமசம் என்னும் மூன்று குணங்களையே பெற்றுள்ளார்கள். ஆனால், நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை , காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக்குணங்களையும் பெற்றுள்ளாய்.
மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என ஐந்திற்கு மேல் இல்லை. நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.
நாவின்மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை. நீயோ செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய். தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று அல்லாமல் அதிகம் உண்டோ ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகுகள் எட்டினைப் பெற்றுள்ளாய்.
இலக்கணக் குறிப்பு
முத்திக்கனி - உருவகம்
தெள்ளமுது - பண்புத்தொகை
குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நா - ஓரெழுத்து ஒருமொழி
செவிகள் உணவான - நான்காம் வேற்றுமைத்தொகை.
சிந்தா மணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
கொள்வார் - கொள் + வ் + ஆர்
கொள் - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
உணர்ந்த - உணர் + த் (ந்) + த் + அ
உணர் - பகுதி த் - சந்தி,
த் - ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
நூல் வெளி
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது, 'வாயில் இலக்கியம்', 'சந்து இலக்கியம்' என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .