பாரதிதாசன் | பருவம் 1 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - பாடல் : தமிழின் இனிமை | 5th Tamil : Term 1 Chapter 1 : Mozhli
இயல் ஒன்று
மொழி
கற்றல் நோக்கங்கள்
❖ செய்யுளைப்
பிழையின்றிச் சரியான ஒலிப்புடன் படித்தல்.
❖ தன்
கருத்தைக் கவிதை மூலம் வெளிப்படுத்த முயலுதல்.
❖ இரண்டு
கருத்துகளை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பேசும் திறன் பெறுதல்
❖ மரபு
என்பதன் பொருளை உணர்ந்து போற்றுதல்.
❖ மரபின் பல்வேறு வகைகளை அறிந்து பயன்படுத்துதல்
பாடல்
தமிழின் இனிமை!
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
சொல்பொருள்
கனி - பழம்
கழை - கரும்பு
நனி - மிகுதி
நல்கிய - வழங்கிய
பாடல் பொருள்
கனியின் சுளையில் உள்ள சுவையும், முற்றிய கரும்புச் சாற்றின் சுவையும், மலரிலிருந்து எடுக்கப்பட்ட தேனின் சுவையும், காய்ச்சிய பாகின் சுவையும், சிறந்த பசு தந்த பாலின் சுவையும், தென்னை மரத்திலிருந்து பெறப்பட்ட குளிர்ந்த இளநீரின்
சுவையும் இனிமையானவை. ஆனால், தமிழ் இத்தகைய சுவைகளையும்விட உயர்ந்தது. தமிழோ என் உயிர் போன்றது என்கிறார்
பாரதிதாசன்.
ஆசிரியர் குறிப்பு
இப்பாடலைப் பாடியவர் பாரதிதாசன். புதுச்சேரியில் பிறந்த இவர், பாரதியாரின் மீது கொண்ட பற்றினால், கனக சுப்பு ரத்தினம் என்ற தம் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக்கொண்டார். இவர் பாடிய இப்பாடல், பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூலின் முதல் தொகுப்பில், தமிழின் இனிமை என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.