தகடூர் யாத்திரைப் பாடல் | இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: வளம் பெருகுக | 8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam
இயல் ஆறு
கவிதைப்பேழை
வளம் பெருகுக
நுழையும்முன்
மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு மாமழைக்கு உண்டு. மண்ணில்
பொழியும் மழை நீரே சத்தான வித்துகளை நித்தமும் முளைக்கச் செய்து உணவைத் தந்து உலக உயிர்களை
ஊட்டி வளர்க்கின்றது. வளமான வான்மழையால் பயிர்கள் செழித்து உழவர் பெருமக்கள் உவக்கும்
காட்சி ஒன்றைத் தகடூர் யாத்திரைப் பாடலில் காண்போம்.
பெருநீரால் வாரி சிறக்க! இருநிலத்து
இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார
முட்டாது வந்து மழை பெய்க! பெய்தபின்
ஒட்டாது வந்து கிளைபயில்க! அக்கிளை
பால்வார் பிறைஞ்சிக் கதிரீன! அக்கதிர்
ஏர்கெழு செல்வர் களம்நிறைக! அக்களத்துப்
போரெல்லாங் காவாது வைகுக! போரின்
உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு
நாரை பிரியும் விளைவயல்
யாணர்த் தாகஅவன் அகன்றலை நாடே!
சொல்லும் பொருளும்
வாரி – வருவாய்
எஞ்சாமை – குறைவின்றி
முட்டாது - தட்டுப்பாடின்றி
ஓட்டாது - வாட்டம்
வைகுக - தங்குக
ஓதை - ஓசை
வெரீஇ - அஞ்சி
யாணர் - புதுவருவாய்.
பாடலின் பொருள்
சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய்
சிறந்து விளங்குக. அகன்ற நிலப்பகுதியில் இட்டவிதைகள் குறைவின்றி முளைவிடுக. முளைத்த
விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிக. தகுந்த காலத்தில் மழை பொழிவதால்
பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்க. கிளைத்துச் செழித்த பயிர்கள் பால்முற்றிக்
கதிர்களை ஈனுக. அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின்
களத்தில் வந்து நிறைக. அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குக.
போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை
இனங்கள் அஞ்சித் தம் பெண்பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற
பெரிய நாடு புதுவருவாயுடன் சிறந்து விளங்குக.
நூல் வெளி
ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை. தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.