பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - பாடல் : கடல் | 5th Tamil : Term 1 Chapter 3 : Iyarkai

   Posted On :  20.07.2023 02:03 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை

பாடல் : கடல்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை : பாடல் : கடல் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

இயற்கை

 

கற்றல் நோக்கங்கள்

இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வைப் பெறுவர்.

பழமொழிகள் உணர்த்தும் ஆழமான பொருளை அறிந்து பயன்படுத்துவர்

புதிர்கள், விடுகதைகள் உருவாக்கும் திறன் பெறுவர்

எழுவாய், செயப்படு பொருள், பயனிலை அறிந்துகொள்வர்

 

பாடல்

கடல்


எல்லை அறியாய் பெருங்கடலே - நீதான்

இரவும் உறங்காயோ? கடலே

அல்லும் பகலும் அலைகடலே - உனக்கு

அலுப்பும் இலையோ கருங்கடலே

 

பொங்கு திரைகளோ? கடலே - அவை

புரவி நிரைதாமோ? கடலே

எங்கும் உனதொலியோ? கடலே – அன்றி

இடியின் முழக்கமோ? கடலே!

 

மலையை வயிற்றடக்கம் கடலே! - எண்ணில்

மகர மீனுலவும் கடலே!

விலைகொள் முத்தளிக்கும் கடலே! - சிப்பி

விளையாடற் குதவும் கடலே!

 

மழைக்கு மூலமும் நீ கடலே! - அதை

வாங்கி வைப்பதும் நீ, கடலே!

வழுத்து மகிமையெலாம் கடலே! - எவர்

மதித்து முடிக்கவலார் கடலே!

- கவிமணி தேசிக விநாயகம்

 

சொல் பொருள்

அலுப்பு - களைப்பு

மகரம் – மீன்

மகிமை - பெருமை

புரவி - குதிரை

திரைகள் - அலைகள்

பாடல் பொருள்

எல்லையின்றிப் பரந்து விரிந்திருக்கும் பெருங்கடலே! நீ இரவும் பகலும் உறங்காது எப்போதும் அலைகளை வீசி ஒலித்துக் கொண்டே இருக்கிறாய். உனக்கு ஓய்வு என்பதே இல்லை. பொங்கி வருகின்ற உன் அலைகள், பார்ப்பதற்குக் குதிரைகள் அணிவகுத்து வருவதைப்போல் காட்சியளிக்கின்றன. எங்கும் ஒலிக்கின்ற உன் ஒலி, அலையோசையால் எழுந்ததா அல்லது இடியோசையால் எழுந்ததா என்று எங்களுக்கு ஐயம் எழுகிறது. உன்னுள் உயர்ந்த மலையும் அடங்கிக் கிடக்கிறது. எண்ணில்லாத மீன் வளங்களையும் விலை மதிப்புடைய முத்துகளையும் கொண்டுள்ள நீ, சிப்பிகள் விளையாடுவதற்கும் உதவுகிறாய். இப்பூமியில் மழை பெய்வதற்குக் காரணமாகவும் இருக்கிறாய், அந்த மழைநீரைச் சேமித்து வைக்கும் வைக்கும் பெரிய கலனாகவும் விளங்குகிறாய். ஆகவே, உன் பெருமைகளை எல்லாம் எடுத்துரைக்க வல்லவர்கள் இங்கு எவரும் இலர்.

 

ஆசிரியர் குறிப்பு

இப்பாடலைப் பாடியவர், கவிமணி தேசிக விநாயகம். இவர், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர். இவர், இனிமையும் எளிமையும் மிக்க பாடல்களை எழுதியமையால், கவிமணி என்று போற்றப்பெற்றார். நம் பாடப்பகுதியிலுள்ள பாடல், குழந்தைப்பாடல்கள் என்னும் தலைப்பில் முதற்பாடலாக அமைந்துள்ளது.

Tags : Term 1 Chapter 3 | 5th Tamil பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 1 Chapter 3 : Iyarkai : Poem: kadal Term 1 Chapter 3 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை : பாடல் : கடல் - பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை