பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை : படம் இங்கே ! பழமொழி எங்கே ? | 5th Tamil : Term 1 Chapter 3 : Iyarkai
இயல் மூன்று
உரைநடை
படம் இங்கே! பழமொழி எங்கே?
பழையனூர் மாந்தோப்பில் கிளி ஒன்று இருந்தது. அதன் பெயர்
செல்லம்மா. அந்த ஊரில் அதை அவ்வாறுதான் பெயர் சொல்லி அழைப்பார்கள். மாங்காய்
காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவர்களிடம் ஒரு படத்தை மரப்
பொந்திலிருந்து எடுத்துக் காட்டும். அந்தப் படம் உணர்த்தும் பழமொழியைச் சிறுவர்கள்
கூறிவிட்டால் அவர்களுக்கு ஒரு மாங்காய் பறித்துப் போடும். அதனால், அதைப் 'பழமொழிக் கிளி' என்றும்
ஆசையாக அழைப்பார்கள்.
மரத்தில் மாங்காய்கள் காய்த்துத் தொங்குவதைக் கண்டு, சிறுவர்கள் ஒவ்வொருவரும் தோப்புக்கு வரத் தொடங்கினர்.
பழமொழிகள் என்பவை, நம்
முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய மொழிகள். பழங்காலம்
முதற்கொண்டே பழமொழிகள் வழக்கிலிருந்து வருகின்றன. பழமொழி நானூறு என்னும் பெயரிலேயே
நீதிநூல் ஒன்றும் உள்ளது.
சொற்களஞ்சியப் பெருக்கமும் சொல்லாட்சித்
திறனும்
செல்லம்மா, நான் பிரபு வந்திருக்கிறேன்.
ஓ! பிரபுவா ! நன்றாக இருக்கிறாயா?
நான் நன்றாக இருக்கிறேன். உன்னைப் பார்த்துவிட்டு மாங்காய்
பறித்துச் செல்லலாம் என வந்தேன்.
மிக்க மகிழ்ச்சி! நான் காட்டும் படத்திற்குரிய பழமொழியைக்
கூறினால் நானே உனக்கு மாங்காய் பறித்துத் தருகிறேன் என்று கூறியவாறு கிளி ஒரு
படத்தை எடுத்துக்காட்டியது
இந்தப் படம் உணர்த்தும் பழமொழி என்ன?
யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!
சரியாகக் கூறினாய். இதோ, உனக்கு மாங்காய் பறித்துத் தருகிறேன்.
ஐ....! ரொம்ப நன்றி செல்லம்மா.
எப்படி இருக்கிறாய் செல்லம்மா?
யார் வந்திருப்பது?
வின்சென்ட் வந்திருக்கிறேன் செல்லம்மா. எனக்கும் மாங்காய்
வேண்டும்.
இந்தப் படம் உணர்த்தும் பழமொழி என்ன என்று சொல். மாங்காய்
தருகிறேன்..
இக்கரைக்கு அக்கரை பச்சை
நன்று, சீக்கிரமாக விடை கண்டுபிடித்து
விட்டாயே! இதோ உனக்கு மாங்காய்!
எனக்கு மாங்காய் கிடைத்துவிட்டது.
நன்றி செல்லம்மா!
கனிமொழி ஏன் அமைதியாக நிற்கிறாய்?
உனக்கு மாங்காய் வேண்டாமா?
வேண்டும் செல்லம்மா!
இந்தப்படம் உணர்த்தும் பழமொழி
என்னவென்று சொல் பார்க்கலாம்.
சூறைக்காற்று வீசுது.
இல்லையே கனிமொழி இன்னும் கொஞ்சம் யோசி.
ஆங்..... ஆடிக்காற்றில்
அம்மியும் பறக்கும்.
அழகாகக் கூறினாய் இதோ மாங்காய்
வாங்கிக் கொள்.
உண்மையாகவே நான் அழகாகக்
கூறினேனா? நன்றி செல்லம்மா!
என் நண்பன் முகமது
வந்திருக்கிறான் செல்லம்மா!
அப்படியா, இதிலுள்ள பழமொழி என்ன என்று கூறச்சொல், மாங்காய் தருகிறேன்.
எனக்குத் தெரியும் கூறுகிறேன்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
மிகவும் அருமை! நான் உனக்கு
மாம்பழமே தேடிப் பறித்துத் தருகிறேன்.
நன்றி செல்லம்மா!
செல்லம்மா! எனக்கு?
தேனிசையா? இதில் என்ன பழமொழி இருக்கு சொல்லேன். உடனே பறித்துத் தருகிறேன்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
கண்ணிமைக்கும் நேரத்தில் கூறிவிட்டாயே! இதோ மாங்காய்
வாங்கிக்கொள்.
மாங்காய் சாப்பிட மிகவும் பிடிக்கும் எனக்கும் மகிழ்ச்சியாக
இருக்கிறது செல்லம்மா, நன்றி!
பழமொழிக்கிளி! எனக்கு மாங்காய் இல்லையா?
யாரு என் செல்லப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது? கதிரவனா? இதன் பழமொழியைக் கூறு தருகிறேன்.
அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்
மிக்க மகிழ்ச்சி! இதோ உனக்கு மாங்காய், பெற்றுக்கொள்.
ரொம்ப நன்றி பழமொழிக் கிளி!
சிறுவர்கள் அனைவரும் செல்லம்மா! நாங்கள் இன்னும் நிறைய பழமொழிகளைத் தெரிந்து கொண்டு மீண்டும் நாளைக்கு வருகிறோம், எனக் கூறிவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக வீட்டிற்குச் சென்றனர்.