பணிகள் துறை
வங்கி, காப்பீடு, சக்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை முதன்மைத் துறையான பணிகள் துறையாகும்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த வங்கிச் பணிகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் 52 விழுக்காடு பங்குகளுடன் (5337 கிளைகள்) பணியாற்றுகின்றன. தனியார் வணிக வங்கிகள் 30% (3060 கிளைகள்), பாரத ஸ்டேட் வங்கியும் அதன் துணை நிறுவனங்களும் 13% (1364 கிளைகள்) வட்டார கிராமிய வங்கிகள் 5% (537 கிளைகள்) 2 அயல்நாட்டு வங்கிக் கிளைகளும் பணியில் உள்ளன.
தமிழ்நாட்டு வங்களின் மொத்த வைப்பு நிதியானது ஒவ்வொரு ஆண்டும் 14.32% உயர்வுடன் மார்ச் 2017ல் ₹ 6,65,068.59 கோடியை எட்டியுள்ளது. கடன் தொகை ஒவ்வொரு ஆண்டும் 13.5% அதிகரித்து மார்ச் -2017ல் ₹.6,95,500.31 கோடியாக எட்டியுள்ளது.
முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் தெகையானது 45.5 சதவீதமும் (தேசிய சராசரி 40%) வேளாண்மைத் துறைகளுக்கான கடன் வழங்கல் அளவு மார்ச் 2017ல் 19.81% ஆகவும் (தேசிய சராசரி 18%) உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் இந்தியாவிலேயே அதிக கடன் - வைப்பு வீதமான 119.15 விழுக்காட்டைக் கொண்டுள்ளது. இந்திய அளவில் இதன் வீதம் 77.5 விழுக்காடு மட்டுமே உள்ளது.
அ) பள்ளிக் கல்வி
நிகர மாணவர் சேர்க்கை வீதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. நிதி ஆயோக் அறிக்கையின்படி 2015-16ல் துவக்க நிலையளவில் நிகர மாணவர் சேர்க்கை வீதம் தமிழ்நாடு (89.24 விழுக்காடு) கேரளாவை (79.94 விழுக்காடு) நாட்டின் சராசரியைவிட (74.74 விழுக்காடு) அதிக அளவில் உள்ளது. இது உலக அளவில் 59 விழுக்காடாகவும் உள்ளது.
அட்டவணை 11.13 தமிழ்நாடு தொடக்கக் கல்வி புள்ளிவிபரம்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி புள்ளிவிபரம் 2014-15
(ஆதாரம்: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2016-17)
தொடக்கப் பள்ளிக்கான மொத்த மாணவர் சேர்க்கை வீதம் 118.8% (வகுப்பு 1-5) ஆகவும், நடுநிலைப் பள்ளிகளுக்கான மொத்த மாணவர் சேர்க்கை வீதம் 112.3% (வகுப்பு 6-8) ஆகவும், உயர்நிலைப் பள்ளிகளுக்கான மொத்த மாணவர் சேர்க்கை வீதம் 62.7% (வகுப்பு 9-10) ஆகவும், மேல்நிலை பள்ளிகளுக்கான மொத்த மாணவர் சேர்க்கை வீதம் 49.26% (வகுப்பு 11-12) ஆகவும் உள்ளது.
ஆ) உயர்கல்வி
உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து பிற மாநிலங்களைக் காட்டிலும் முதன்மை பெற்று முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை வீதமான (GER) 46.9% அனைத்து மாநிலங்கள் மற்றும் தேசிய சராசரியை விட அதிகமாகவுள்ளது.
அட்டவணை 11.14 உயர்கல்வியில் மொத்த சேர்க்கை வீதம்
(ஆதாரம்: அனைத்து இந்திய உயர் கல்விக்கான விபரம் - மனித வள மேம்பாட்டு மந்திரிசபையின் ஜனவரி 2018 அறிக்கை )
தமிழ்நாட்டில் 59 பல்கலைக் கழகங்களும், 40 மருத்துவக் கல்லூரிகளும், 517 பொறியியல் கல்லூரிகளும், 2260 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 447 பல் தொழில்நுட்ப கல்லூரிகளும், 20 பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து 4 இலட்சம் பொறியியல் மற்றும் பல் தொழில்நுட்பம் பயின்ற மாணவர்கள் வெளியேறுகின்றனர், இது இந்திய அளவில் உச்சபட்ச அளவாகும்.
2013-14 லிருந்து 2015-16 வரை பொதுத்துறை வங்கிகள் முக்கியத் துறைகளுக்கு வழங்கும் கடன்களின் அளவுகளில் 20.8 சதவீதத்தை கல்விக் கடனாக வழங்கியுள்ளன. ஆந்திர பிரதேசம் 11.2 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், 10.2 சதவீதத்துடன் மகாராஷ்டிரா மூன்றாமிடத்திலும் உள்ளன. 18 மாநிலங்கள் மொத்த கடன்களில் 1 சதவீத கடனையே கல்விக்கு அளித்துள்ளன. தமிழ்நாட்டில் தான் இந்திய அளவில் அதிக பயனாளிகள் உள்ளனர்.
இதே காலகட்டத்தில் தனியார் வங்கிகள் கேரளாவில் 37.8 விழுக்காடும், தமிழ்நாட்டில் 24.8 விழுக்காடும், வழங்கியுள்ளன. மொத்த தனியார் வங்கி வழங்கியுள்ள கல்வி கடன்களில் கர்நாடகம் மற்றும் கேரளா 60 விழுக்காடு அளவிற்கு வழங்கியுள்ளன.
4. உடல்நலம்
தமிழ்நாடு மூன்றடுக்கு உடல்நல அடிப்படைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. அவை மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக நல மையங்கள் ஆகியனவாகும்.
மார்ச் 2015ல் தமிழகத்தில் 34 மாவட்ட மருத்துவமனைகளும், 229 துணை மருத்துவமனைகளும், 1254 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 7555 துணை நிலையங்களும், 313 சமூக நலமையங்களும் உள்ளன.
5. தொலை தொடர்பு
இந்தியாவில் இணையத்தின் பயன்பாட்டின் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 29.47 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் உள்ளன. மார்ச் 2016ம் ஆண்டு அரசு புள்ளி விவரப்படி இந்தியாவில் மொத்தம் 342.65 மில்லியன் இணையதள சந்தாதாரர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 28.01 மில்லியன் சந்தாதாரர்களும் அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 24.87 மில்லியன், கர்நாடகாவில் 22.63 மில்லியன் சந்தாதாரர்களும் உள்ளனர்.
தமிழ்நாடு மிகச்சிறந்த மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதி கொண்டது. அதன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கிறது. நாட்டிலுள்ள நகரங்கள் கிராமப்புறங்கள் மற்றும் வேளாண் அங்காடிப் பகுதிகளை இணைக்ககூடியத் தரமான விரிவுபடுத்தப்பட்ட சாலைப் போக்குவரத்தைக் கொண்டுள்ளது. மாநில முதலீட்டுற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அ) சாலை வசதி
மாநிலத்தில் 28 தேசிய நெடுஞ்சாலைகள் 5036 கி.மீ. தொலைவினை இணைக்கின்றன. தங்க நாற்கரத் திட்டம் முனையமாக நமது மாநிலம் உள்ளது. சென்னையிலுள்ள கோயம்பேடு மற்றும் ஈரோடு மத்தியப் பேருந்து நிலையங்கள் நம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையங்களாகும். தமிழநாட்டின் மொத்த சாலை நீளம் 1,67,000 கி.மீ. ஆகும். இதில் 60,628 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. பொது மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் 20%திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சாலை போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆ. இரயில் போக்குவரத்து (இருப்புப்பாதை)
தமிழ்நாடு நன்கு மேம்படுத்தப்பட்ட இருப்புப் பாதை அமைப்பைக் கொண்டுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்னக இரயில்வே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 6693 கி.மீ. ஆகும். 690 இரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கின்றது. சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகியவை முக்கிய தொடர் வண்டி நிலையங்களாகும். சென்னையில் மேம்படுத்தப்பட்ட அதி விரைவு மெட்ரோ இரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான பணி மே 2017 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இ.வான் வழிப் போக்குவரத்து
தமிழ்நாட்டில் நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மும்பை மற்றும் தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையமாக சென்னை சிறந்து விளங்குகிறது. கோயம்புத்தூர் மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களிலும் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. தூத்துக்குடி, சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களிலுள்ள உள்நாட்டு விமான நிலையங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இத்துறையின் தொடர் நடவடிக்கையின் மூலம் பயணிகள் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் உன்னத வளர்ச்சி அடைந்து உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 18% வளர்கிறது.
ஈ. துறைமுகங்கள்
சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகமாகும். மேலும் 23 சிறு துறைமுகங்களும் உள்ளன இவை தற்போது ஆண்டுதோறும் 73 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளக் கூடிய திறன் கொண்டவை. (இந்திய அளவில் 24 சதவீதம்). அனைத்து சிறிய துறைமுகங்களும், தமிழ்நாடு கடல்சார் மையத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. சென்னை துறைமுகம் கன்டெயினர்களைக் கையாளும் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது முக்கிய செயற்கைத் துறைமுகமாகும். இது 4,00,000 வாகனங்களைக் கையாளக்கூடிய அர்ப்பணிப்பு முனையமாக தற்போது மேம்படுத்தப்பட்டு அனைத்து விதமான நிலக்கரி மற்றும் கனிமப் போக்குவரத்துகளைக் கையாள்கிறது.