கவிஞர் கண்ணதாசன் | பருவம் 1 இயல் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ் - தமிழ் அமுது | 3rd Tamil : Term 1 Chapter 1 : Tamil amuthu
1. தமிழ் அமுது
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே!
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே!
உன்னைத் தவிர
உலகில் எனைக் காக்க
பொன்னோ! பொருளோ!
போற்றி வைக்க வில்லையம்மா!.
- கவிஞர் கண்ணதாசன்
பாடல் பொருள்
தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே! தேவைப்படும் பொழுதெல்லாம் விளைகின்ற முத்தே! உன்னை அன்றி இவ்வுலகில் என்னைக் காக்க வேறு பொன்னையோ பொருளையோ சேர்த்து வைக்கவில்லை, என்னைக் காத்திடுவாய் அம்மா.
மீண்டும் மீண்டும் சொல்லலாமா?
ஆடிப் பாடி மகிழ்வோம்!
அத்திப்பழத் தேன் எடுப்போம்
ஆலமர விழு தாவோம்
இசைவோடு பள்ளி செல்வோம்
ஈகையோடு நட்பு செய்வோம்
உவகையாய் கற்றிடுவோம்
ஊர் முழுதும் சுற்றிடுவோம்
எல்லோரும் சேர்ந்திடுவோம்
ஏட்டினிலே பாட்டு செய்வோம்
ஐவகை நிலம் செழிக்க
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
ஓடம் விட்டுக் களித்திடுவோம்
ஔவை மொழி கற்றிடுவோம்
எஃகாய் உறுதி கொள்வோம்
மொழியோடு விளையாடு
"தொட்டால் சுருங்கி"
மாணவர்கள் வட்டமாக நிற்க வேண்டும். ஒரு மாணவன் வட்டத்திற்கு வெளியே சுற்றி ஓடி வரவேண்டும். ஓடி வரும் மாணவன் நிற்கின்ற யாராவது ஒரு மாணவன் முதுகில் தொட்டு ஒரு சொல்லைக் கூற வேண்டும். அந்தச் சொல்லில் முடியும் எழுத்தை முதலாகக்கொண்டு வேறு சொல்லைத் தொடப்பட்ட மாணவன் கூற வேண்டும். அவன் சொல்லைக் கூறிவிட்டால் ஓடி வரும் மாணவனே மீண்டும் ஓடி வந்து வேறு மாணவனைத் தொட்டு வேறு சொல் கூற வேண்டும். தொடப்பட்டவன் சரியாகக் கூற வில்லையென்றால் அவன் ஓடிவர வேண்டும். இவ்வாறே விளையாட்டைத் தொடரலாம்.
எ.கா: விலங்கு என்று சொன்னால்
குருவி என்று சொல்ல வேண்டும்.
செயல் திட்டம்
கேட்டு, எழுதி வரலாமா...
தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல்கள் இரண்டை எழுதி வருக
தமிழ்மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல்கள்:
தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
- பாரதிதாசன்
அன்னை மொழியே !
அழகார்ந்த செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்