Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பிற்காலப் பாண்டியர்கள்

தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் | முதல் பருவம் அலகு 3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பிற்காலப் பாண்டியர்கள் | 7th Social Science : History : Term 1 Unit 3 : Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas

   Posted On :  13.05.2022 06:37 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 3 : தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

பிற்காலப் பாண்டியர்கள்

கி.மு. (பொ .ஆ.மு) நான்காம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவைக் குறிப்பிட்ட இடைவெளிகளோடு ஆட்சி செய்த மூன்று பழைமையான அரசவம்சங்களுள் பாண்டியர்கள் அடங்குவர்.

பிற்காலப் பாண்டியர்கள் 

அறிமுகம்

கி.மு. (பொ .ஆ.மு) நான்காம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவைக் குறிப்பிட்ட இடைவெளிகளோடு ஆட்சி செய்த மூன்று பழைமையான அரசவம்சங்களுள் பாண்டியர்கள் அடங்குவர். முத்துக்குளித்தலோடு தொடர்புடைய கொற்கை, தொடக்கக்காலத்தில் அவர்களின் துறைமுகமாகவும் தலைநகரமாகவும் இருந்ததாகக் கருதப்படுகிறது. பாண்டியர்களின் பல பழைமையான தமிழ்க் கல்வெட்டுகள் மதுரையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் பிற்காலத்தில் மதுரைக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் எனக் கருதலாம். சங்ககாலப் பாண்டியர்களின் கீழ் மதுரை நகர் மாபெரும் பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது. தமிழ்ப் புலவர்களும் எழுத்தாளர்களும் அங்கு ஒன்றுகூடித் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களுக்குச் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். கி.பி. (பொ.ஆ) 6ஆம் நூற்றாண்டில் களப்பிரர்களை வெற்றிகொண்டு பாண்டியர்கள் தென்தமிழகத்தில் தங்களை மீண்டும் வலுவாக நிறுவிக் கொண்டனர். ஆனால் 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை ஆண்ட பிற்காலச் சோழர்களின் எழுச்சியைப் பாண்டியர்களால் எதிர்கொள்ள இயலவில்லை. பின்னர் சோழர்களின் வீழ்ச்சியைச் சாதகமாகப் பயன்படுத்திப் பிற்காலப் பாண்டியர் மீண்டும் தங்கள் அதிகாரத்தை நிறுவினர். அவர்களின் ஆட்சி 16ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. 


பாண்டிய அரசு மீண்டெழுதல் (கி.பி. (பொ.ஆ) 600 - 920) 

கடுங்கோன் எனும் பாண்டிய அரசன் 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர்களிடமிருந்து பாண்டியர்களின் பகுதிகளை மீட்டார். அவரைத் தொடர்ந்து வேறு இருவர் அரச பதவி ஏற்றனர். அரிகேசரி மாறவர்மன் எனும் வலிமை மிக்க முதல் பாண்டிய அரசர் கி.பி. (பொ.ஆ) 642இல் அரியணை ஏறினார். அவர் பல்லவ முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் சமகாலத்தவராவார். கல்வெட்டுகளும் செப்புப்பட்டயங்களும் தனது எதிரிகளான சேரர், சோழர், பல்லவர், சிங்களர் ஆகியோரை அவர் வெற்றிகொண்டதைப் புகழ்பாடுகின்றன. அரிகேசரி மாறவர்மன் சமணர்களைத் துன்புறுத்திய கூன் பாண்டியனே என அடையாளப்படுத்தப்படுகிறார்.

சைவத் துறவியான திருஞானசம்பந்தர் அரிகேசரியைச் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். மதம் மாறிய பின்னர் அரிகேசரி சுமார் 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகக் கூறப்படுகிறது. எண்ணிக்கை மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பினும், சைவத்திற்கு மாறிய பின்னர் அரிகேசரியின் சமண எதிர்ப்புப் போக்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது.

அரிகேசரிக்குப் பின்னர் பாண்டியர் அரசவம்சத்தின் மகத்தான மன்னான ஜடிலபராந்தக நெடுஞ்சடையன் (முதலாம் வரகுணன்) (756 - 815) ஆட்சிப் பொறுப்பேற்றார். அவரே வேள்விக்குடிச் செப்பேடுகளின் கொடையாளி ஆவார். நெடுஞ்சடையன் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயமுத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகப் பாண்டிய அரசை விரிவுபடுத்தினார். நெடுஞ்சடையனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன், இரண்டாம் வரகுணன் ஆகியோர் பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்டனர். பின்னர் முதலாம் பராந்தகனின் கீழ் எழுச்சி பெற்ற சோழவம்சத்தை அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை. முதலாம் பராந்தகனிடம் தோல்வியடைந்த பாண்டிய அரசன் இரண்டாம் ராஜசிம்மன் 920இல் நாட்டைவிட்டு வெளியேறினார். இவ்வாறு கடுங்கோனால் மீள்எழுச்சி பெற்ற பாண்டியர் ஆட்சி முடிவுற்றது. 


பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சி (1190 - 1310) 

அதிராஜேந்திரனின் (விஜயாலயனின் வழிவந்த கடைசி அரசர்) மறைவுக்குப் பின்னர் பாண்டிய நாட்டில் சோழ மண்டலாதிபதிகளின் ஆட்சி பலவீனமடைந்தது. அதன் விளைவாகப் பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர் மட்டுமே எழுச்சி பெற்ற தமிழ் அரச வம்சமாக விளங்கினர். மதுரை அவர்களின் தலைநகராகத் தொடர்ந்தது. அவ்வமயம் காயல் அவர்களின் முக்கியத் துறைமுகமாயிற்று. வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பயணியான மார்க்கோபோலோ இரண்டு முறை (1288, 1293) காயலுக்கு வருகைதந்தார். இத்துறைமுக நகர் அராபிய, சீனக் கப்பல்களால் நிரம்பியிருந்தது என்றும் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகளைக் கொண்டிருந்ததாகவும் அவர் நம்மிடம் கூறுகிறார்.

பாண்டிய அரசு "செல்வச் செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்" என மார்க்கோ போலா புகழாரம் சூட்டுகிறார். இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்கக்கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்கிறது என மேலும் கூறுகிறார். தன்னுடைய பயணக் குறிப்புகளில் சதி '(உடன்கட்டை ஏறுதல்) நிகழ்வுகளையும் அரசர்களின் பலதார மணத்தையும் பதிவு செய்துள்ளார்.


சடையவர்மன் சுந்தரபாண்டியன் 

இரண்டாம் பாண்டியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர் சடைய வர்மன் (ஜடா வர்மன்) சுந்தரபாண்டியன் (1251 - 1268) ஆவார். ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்த அவருடைய ஆட்சி ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பரவியிருந்தது. அவர் ஹொய்சாளர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார். மலைநாட்டுத் தலைவனான சேர அரசர் சுந்தர பாண்டியனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவருக்குக் கப்பம் கட்டச் சம்மதித்தார். சோழ அரசின் வீழ்ச்சியால் ஊக்கம் பெற்ற மாளவப் பகுதியின் அரசர் வீர சோமேஸ்வரர் சுந்தர பாண்டியனைப் போருக்கு அழைத்தார். கண்ணனூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சுந்தரபாண்டியன் வீர சோமேஸ்வரரைத் தோற்கடித்தார். வடதமிழகத்தில் கடலூர், காஞ்சிபுரம், மேற்குத் தமிழகத்தில் ஆர்க்காடு, சேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறுநிலத் தலைவர்களின் மேல் தனது அதிகாரத்தை நிறுவினார்.


சுந்தர பாண்டியனின் ஆட்சியின்போது அவருடன் இரண்டு பேர் கூட்டு அரசர்களாக ஆட்சிசெய்தனர். அவர்கள் விக்கிரம பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோர் ஆவர். சுந்தர பாண்டியனுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகரன் வெற்றிகரமாக நாற்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்து நாட்டிற்கு அமைதியையும் செழிப்பையும் நல்கினார். அவருக்கு வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் என இரண்டு மகன்கள் இருந்தனர். அரசர் வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார். அதனால் தந்தை மீது வெறுப்புற்ற சுந்தர பாண்டியன் தந்தையார் மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார். தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் வீரபாண்டியன் வெற்றி பெற்றுத் தன்னை வலுவாக நிறுவிக்கொண்டார். தோல்வியுற்ற சுந்தர பாண்டியன் டெல்லிக்கு விரைந்து அலாவுதீன் கில்ஜியின் பாதுகாப்பில் அடைக்கலமானார். இதுவே மாலிக்கபூரின் படையெடுப்புக்கான வாய்ப்பை வழங்கியது.

மாலிக்கபூரின் படையெடுப்புக்குப் பின்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த பல அரசர்களால் பாண்டிய நாடு பிரித்துக்கொள்ளப்பட்டது. மதுரையில் டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு உருவாக்கப்பட்டது. 


ஆட்சிஅமைப்பும் சமூகமும்

அரசு

பாண்டிய அரசர்கள் தலைநகரைப் பொருத்தமட்டிலும் மதுரைக்கே முன்னுரிமை கொடுத்தனர். மதுரை பொதுமக்களால் கூடல்' என்றே போற்றப்பட்டு வந்தது. பாண்டிய மன்னர்கள் பாரம்பரியமாகக் 'கூடல்கோன்', 'கூடல் காவலன்' என மதிக்கப்பட்டனர். ராணுவரீதியாக அண்டைநாடுகளைக் காட்டிலும் பாண்டியர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இதன் காரணம் அவர்களிடம் இருந்த குதிரைப் படைகளாகும். அராபிய வணிக, பண்பாட்டு உலகில் அவர்களுக்கு இருந்த தொடர்பின் மூலம் அவர்கள் அந்தக் குதிரைகளை இறக்குமதி செய்தனர்.

அரசர், 'மனு சாஸ்திரத்தின்படி தான் ஆட்சி செய்வதாகக் கூறினார். இக்கோட்பாடு சமூகத்திலிருந்த ஏற்றத் தாழ்வு நிலைகளை நியாயப்படுத்தியது. அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் 'மங்கலம்' அல்லது 'சதுர்வேதிமங்கலம்' எனும் பிராமணர் குடியிருப்புகளை உருவாக்கினர். இவை நீர்ப்பாசன வசதிகளோடு உருவாக்கப்பட்டிருந்தன. நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் பூமி புத்திரர்' அல்லது 'வேளாளர்' என விவரிக்கப் பட்டுள்ளனர். வரலாற்று ரீதியாக அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்களாகையால் அவர்கள் 'நாட்டுமக்கள்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இச்சமூக மக்கள் ஒன்றிணைந்த மன்றம் 'சித்திர - மேழிபெரிய நாட்டார் என அழைக்கப்பட்டது. 


அரசு அதிகாரிகள்

அதிகாரிகளின் குழுவொன்று அரசரின் ஆணைகளை நடைமுறைப்படுத்தியது. பிரதம மந்திரி உத்தர மந்திரி' என அழைக்கப்பட்டார். முக்கிய வரலாற்று ஆளுமைகளான மாணிக்கவாசகர், குலச்சிறையார், மாரன்காரி ஆகியோர் அமைச்சர்களாகப் பணியாற்றினர். அரசுச் செயலகம் எழுத்து மண்டபம் என அழைக்கப்பட்டது. மிகவும் மதிக்கப்பட்ட அதிகாரிகள் 'மாறன்-எயினன்', 'சாத்தன்கணபதி', 'ஏனாதி-சாத்தன்', 'திறதிறன்', 'மூர்த்தி-எயினன்', ஆகியோரும் மற்றவருமாவர். 'பள்ளி-வேலன்', 'பராந்தகன்பள்ளி-வேலன்', 'மாறன்-ஆதித்தன்', 'தென்னவன்-தமிழ்வேள்' ஆகியவை படைத் தளபதிகளின் பட்டங்களாகும். 


நிர்வாகப் பிரிவுகள் 

சோழநாட்டில் இருந்ததைப்போலவே பாண்டிய நாடு பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மண்டலங்கள் வளநாடுகள்' என அழைக்கப்பட்டன. வளநாடுகள் பல 'நாடுகளாகவும்', 'கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டன. நாடுகளை நிர்வகித்தவர்கள் நாட்டார் ஆவர். நாடுகளும் கூற்றங்களும் மங்கலம், நகரம், ஊர், குடி எனும் குடியிருப்புக்களைக் கொண்டிருந்தன. அவற்றில் பல்வகைப்பட்ட சமூகக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் வசித்தனர்.


கிராம நிர்வாகம் 

திருநெல்வேலி மாவட்டம் மானூர் என்னும் ஊரில் உள்ள கி.பி. (பொ.ஆ) 800ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிராமநிர்வாகம் தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளது. கிராம மன்றங்களையும், பல்வேறு குழுக்களையும் கொண்டிருந்த சோழர்களின் உள்ளாட்சித் துறை போலவே நிர்வாகம் காணப்படுகிறது. சிவில் ராணுவ அதிகாரங்கள் ஆகிய இரண்டும் ஒரே நபரிடம் வழங்கப்பட்டிருந்தன.


நீர்ப்பாசனம்

பாண்டிய மன்னர்கள் அதிக எண்ணிக்கையில் நீர் ஆதாரங்களை உருவாக்கினர். வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இரு கரைகளிலும் நீர்நிலைகளுக்கு நீர் கொண்டுசெல்லும் கால்வாய்கள் வெட்டப்பட்டன. தென்தமிழகத்தில் சோழர்களைப் போலவே பாண்டியர்களும் புதிய நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர். நீர்பாசனப் பணிகள் உள்ளாட்சி அமைப்புகளாலும், அதிகாரிகள் மற்றும் உள்ளூர்த் தலைவர்களாலும் மேற்கொள்ளப்பட்டன. பழுதுநீக்கும் பணிகள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன. சிலசமயங்களில் நீர்ப்பாசன ஏரிகளை வணிகர்கள் வெட்டிக்கொடுத்துள்ளனர்.


மதம்

பாண்டிய அரசர்கள் வேத நடைமுறைகளுக்கு ஆதரவு நல்கினர். வேள்விக்குடிச் செப்பேடுகளும் ஏனைய பொறிப்பியல் சான்றுகளும் சிறந்த பாண்டிய அரசர்கள் ஒவ்வொருவரும் செய்த அஸ்வமேதயாகம், ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய வேள்வி போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன. பாண்டிய மன்னர்கள் சைவம், வைணவம் ஆகிய இரண்டையும் சமமாகவே கருதினர் என்பதைப் பொறிப்புச் சான்றுகளின் தொடக்கப் பகுதிகள் உணர்த்துகின்றன. இரு பிரிவைச் சேர்ந்த கோவில்களும் பாண்டிய மன்னர்களின் ஆதரவைப் பெற்றிருந்தன. இக்கோவில்களுக்கு நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன. வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. அவை புனரமைக்கப்பட்டுப் புதிய கோபுரங்களும் விசாலமான மண்டபங்களும் கட்டப்பட்டன.

புகழ் பெற்ற சைவ, வைணவ அடியார்கள் (நாயன்மார்கள், ஆழ்வார்கள்) தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், ஆன்மிக அறிவு மேம்பாட்டிற்கும் பெரும் பங்களிப்பைச் செய்தனர். அக்காலப்பகுதியில் தீவிர மதமோதல்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. அக்காலகட்டப் பக்தி இயக்கம் புறசமயத்தாரை வாதத்திற்குத் தூண்டின. அப்படிப்பட்ட விவாதப் போட்டிகளில் பலமுறை பெளத்தர்களும் சமணர்களும் தோற்கடிக்கப்பட்டதாகப் பக்தி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அக்காலப் பாண்டிய அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து வளர்த்தனர். 


கோவில்கள்

இடைக்காலப் பாண்டியர்களும் பிற்காலப் பாண்டியர்களும் புதிய கோவில்கள் எதையும் நிர்மாணிக்கவில்லை. ஏற்கெனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர், புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிப் பெரிதாக்கினர். பெரிய வடிவிலான அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒற்றைக்கல் தூண்கள் இடைக்காலப் பாண்டியர்களின் தனித்தன்மை வாய்ந்த பாணியாகும். சிவன், விஷ்ணு, கொற்றவை, கணேசர், சுப்ரமணியர் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் இக்கோவில்களில் காணப்படும் சிறந்த கலை வடிவங்களாகும்.


வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பாண்டியர் பேராதரவு நல்கினர். புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிக் கோவிலைத் தொடர்ந்து விசாலப்படுத்தினர்.


வணிகம்

ஏழாம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உருவாகியிருந்த அராபிய வணிகர்களின் குடியிருப்புகள் அவர்களின் வணிக உறவுகள் கிழக்குக் கடற்கரைக்கு விரிவடைய வழிவகுத்தன. கிழக்குக் கடற்கரையில் இருந்த அரசுகள் அயல்நாட்டு வணிகர்களைப் பொறுத்தமட்டில் மிக தாராளமான, அறிவுபூர்வமான கொள்கையைப் பின்பற்றின. அவற்றின் பட்டயச் சட்டங்கள் வணிகர்களுக்குப் பல துறைமுக வரிகளிலிருந்தும், சுங்க வரிகளிலிருந்தும் விலக்கு அளித்தன. காயல் துறைமுகத்தில் மாலிக் உல் இஸ்லாம் ஜாமலுதீன் எனும் அராபிய வணிகரின் வணிக நிறுவனம் செயல்பட்டது. பாண்டிய அரசர்களுக்குக் குதிரைகள் எளிதாகக் கிடைப்பதற்கான வசதிகளை இந்நிறுவனம் செய்துகொடுத்தது.

13, 14ஆம் நூற்றாண்டுகளில் குதிரை வணிகம் மேலும் அதிகரித்தது. சம்பிரதாய விழாக்களுக்கும், போர்புரிவதற்கும் குதிரைகள் தேவைப்பட்டதால் அரசர்கள் குதிரைகளுக்காக முதலீடு செய்தனர் என்று மார்க்கோபோலோவும், வாசப்பும் குறிப்பிட்டுள்ளனர். குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்கள் குதிரைச் செட்டிகள்' என அழைக்கப்பட்டனர். அவர்கள் கடல்சார் வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். பாண்டியர்களின் துறைமுகங்களில் மிகவும் விறுவிறுப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் கிழக்குக் கடற்கரையிலிருந்த காயல்பட்டினம் ஆகும். இது இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. வணிகப் பரிமாற்றங்கள் தங்க நாணயங்கள் மூலம் நடைபெற்றதால் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தன. அவை காசு, கழஞ்சு, பொன் எனப் பலவாறு அழைக்கப்பட்டன.

விரிவான அளவில் இக்காலத்தில் நடைபெற்ற குதிரை வணிகம் குறித்து வாசப் என்பவர் பதிவு செய்துள்ளார்..."10,000 க்கும் மேற்பட்ட குதிரைகள் காயலிலும் ஏனைய இந்தியத் துறைமுகங்களிலும் இறக்குமதியாயின. அவற்றில் 1400 குதிரைகள் ஜமாலுதீன் பொறுப்பில் இனப்பெருக்கம் செய்து வளர்த்துவந்த குதிரைகளாகும். ஒவ்வொரு குதிரையின் சராசரிவிலை சொக்கத் தங்கத்தினாலான 200 தினார்களாகும் என அவர் எழுதுகிறார்.


சுருக்கம் 

சோழர்களும் பாண்டியர்களும் நன்கறியப்பட்ட தமிழ் முடியாட்சி மன்னர்கள் ஆவர். 

விஜயாலயன், சோழர்கள் வம்சாவழியை மீண்டெழச் செய்தார் 

முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு வாய்ந்த சோழ அரசர்களாவர். 

உத்திரமேரூர் பொறிப்புகள் கிராம நிர்வாகம் குறித்த விவரங்களை வழங்குகின்றன. 

கடுங்கோன் பாண்டிய நாட்டுப் பகுதிகளைக் களப்பிரரிடமிருந்து மீட்டார். அரிகேசரி மாறவர்மன், பராந்தக நெடுஞ்சடையோன் ஆகியோர் அக்காலத்தின் மிகச் சிறந்த பாண்டிய அரசர்கள் ஆவர். 

பிற்காலப் பாண்டிய அரசின் தலைசிறந்த அரசர்கள் சடையவர்மன் சுந்தர பாண்டியன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் ஆவர். 

பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் மார்க்கோபோலோ, வாசப் ஆகியோரால் புகழப்பட்டுள்ளது.


சொற்களஞ்சியம்

1. திருமண உறவுகள் மூலம் அரசியல் கூட்டு -  Matrimonial alliances - political alliances through marriages 

2. தடுப்பணை – Embankment - a wall or stone structure built to prevent a river flooding an area as well as to store its water 

3. தீவிரமான – Ardent - passionate 

4. அரசருக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னர் - Feudatory - a subordinate to another sovereign/ ruler 

5. புகலிடம் – Refuge - shelter 

6. கருவூலம் - Repository - place in which things are stored


மூலாதார நூல்கள்

1. K.A Nilakanda Sastri, A History of South India, New Delhi: Oxford University Press, 2002. 

2. Y. Subbarayalu, South India under The Cholas, New Delhi: Oxford University Press, 2012. 

3. R Champakalakshmi, Trade, Ideology and Urbanization South India- 300 BC to AD 1300, New Delhi: Oxford University Press, 1996. 

4. Satish Chandra, History of Medieval India, New Delhi: Orient Blackswan, 2010.



Tags : Emergence of New Kingdoms in South India | Term 1 Unit 3 | History | 7th Social Science தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் | முதல் பருவம் அலகு 3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 1 Unit 3 : Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas : The Later Pandyas Emergence of New Kingdoms in South India | Term 1 Unit 3 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 3 : தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் : பிற்காலப் பாண்டியர்கள் - தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் | முதல் பருவம் அலகு 3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 3 : தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்