பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - தாவர உலகம் | 6th Science : Term 1 Unit 4 : The Living World of Plants
அலகு 4
தாவர உலகம்
கற்றல் நோக்கங்கள்
❖ தாவர வகைகளைப் பற்றி தெரிந்துகொள்ளல்.
❖ தாவரங்களின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளல்.
❖ இலைகளின் அமைப்பு, பணிகள் மற்றும் தகவமைப்புகளை அறிந்துகொள்ளல்.
❖ விலங்குகள் மற்றும் மனிதர்களுக்குத் தேவையான உணவை, தாவரங்களே தயாரிக்கின்றன
என்பதைப் புரிந்துகொள்ளல்.
❖ பல்வேறு வாழ்விடங்களைப் பற்றி அறிதல்.
❖ வாழ்விடத்திற்கு ஏற்பதாவரங்களின் தகவமைப்புகள் மற்றும் மாற்றுருக்கள்
அமைந்துள்ளன என்பதை அறிந்து கொள்ளல்.
❖ உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளல்.
அறிமுகம்:
ராணியும், ரவியும் தங்கள் தாயாருடன் காய்கறிக் கடைக்குச் சென்றார்கள்.
பல்வேறு வண்ணங்களில் உள்ள காய்கறிகளை அவர்கள் பார்த்தனர். அவர்களது தாயார் முட்டைகோஸ்,
காலிஃப்ளவர், முள்ளங்கி போன்ற காய்கறிகளை வாங்கினார். ரவி, தன் தாயிடம் "அம்மா,
இவை அனைத்துமே மண்ணின் கீழே விளையும் காய்கறிகள்தானே?", என்று கேட்டான், அதற்கு
ரவியின் தாயார், "இல்லை ரவி, இந்தக் காய்கறிகளில் சில வேர்களில் இருந்தும், சில
தண்டுகளிலிருந்தும் கிடைப்பவை, சில பூக்களைக் கூட நாம் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம்",
என்றார். ராணிக்கும், ரவிக்கும் ஆச்சரியம். வாங்கிய காய்கறிகளை வீட்டிற்குச் சென்றதும்
பையிலிருந்து வெளியே எடுத்து எது தண்டு, எது பூ எது வேர் என்று விவாதித்தார்கள். அவர்கள்
தாயார் கீழாநெல்லி, கொத்துமல்லி, மற்றும் கறிவேப்பிலை போன்ற இலைகளை தோட்டத்திலிருந்து
பறித்துவந்து இவற்றைச் சமையலில் மருந்திற்காகவும், நறுமணத்திற்காகவும் பயன்படுத்துவதாகக்
கூறினார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலுள்ள தாவரப் பகுதிகளைப் பற்றி உங்கள்
ஆசிரியரிடம் விவாதிக்கவும்.
உயிரினங்களின் வாழ்க்கைமுறை, அமைப்பு, மற்றும் செயல்களைப் பற்றி
பயிலும். இயற்கை அறிவியல் உயிரியல் ஆகும். நாம் வாழும் உலகம் தாவரங்கள் மற்றும் விலங்குகளைக்
கொண்டது. தாவரங்கள் தங்களுக்குரிய உணவைத் தாங்களே தயாரிக்கின்றன; உடல் வளர்ச்சியடைகின்றன;
மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றன. தாவரத்தின் பல்வேறு பகுதிகள் உணவாக, மருந்தாக, மரக்கட்டைகளாக,
மற்றும் வாழ்விடமாக பயன்படுகின்றன.