பருவம் 3 இயல் 1 | 4 ஆம் வகுப்பு தமிழ் - உலா வரும் செயற்கைக்கோள் | 4th Tamil : Term 3 Chapter 1 : Ula Varum ceyarkaihol
1. உலா வரும் செயற்கைக்கோள்
பட்டுக் குழந்தைகள் வாருங்கள்
பறவைக் கப்பல் பாருங்கள்
விட்டுச் சிறகை விரித்தபடி
விண்ணில் பறக்குது பாருங்கள்
உலகைச் சுற்றி வந்திடுமே
உயர உயரப் பறந்திடுமே
எல்லை இல்லா நற்பயனை
எவர்க்கும் தந்து விளங்கிடுமே
விண்வெளி ஆய்வு செய்திடவே
விண்ணில் சீறிப் பாய்ந்திடுமே
மண்ணிலுள்ள வளத்தை யெல்லாம்
உண்மை யாகச் சொல்லிடுமே
தகவல் தொடர்பில் உதவிடுமே
தன்னிச்சை யாக இயங்கிடுமே
தட்பவெப்ப நிலை யாவும்
தக்க நேரத்தில் சொல்லிடுமே
அருகில் சுற்றும் கோள்களையும்
அளவாய் நிழற்படம் எடுத்திடுமே
உருவில் சிறிய இடங்களையும்
ஒவ்வொன் றாகக் காட்டிடுமே
கனிமவளமும் கடல் வளமும்
கணக்காய்க் குறித்துக் காட்டிடுமே
மனித உயிரைக் காப்பதற்கே
புயல் மழை வருவதை உணர்த்திடுமே
இதுவரை சொன்னது எதையென்று
இன்னுங் கூடத் தெரியலையா?
அதுதான் உலாவரும் செயற்கைக்கோள்
அறிந்தே மகிழ்ச்சி கொள்வோமே!
பொருள் அறிவோம்
'வானில் உலா வரும் செயற்கைக்கோளைப் பற்றி இப்பாடல் கூறுகிறது, உலகைச் சுற்றிவரும் இச்செயற்கைக்கோள், நமக்கு அளவில்லாத பயன்களை வழங்குகிறது. மண்ணிலுள்ள வளங்களை
நுட்பமாகக் காட்டுகிறது. தகவல் தொடர்புக்கு உதவுகிறது. வானிலை குறித்த
தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. வானில் சுழலும் கோள்களை
நிழற்படம் எடுத்து, நமக்கு
அனுப்புகிறது. கனிம வளத்தையும் கடல்வளத்தையும் குறிப்பிடுவதோடு ஆழிப்பேரலை
(சுனாமி) போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து, மனித உயிர்களையும் காக்கிறது.
ஓசை நயமும் கருத்தும் மிக்க பாடல்களைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்.