இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu
இயல் ஐந்து
வாழ்வியல்
திருக்குறள்
தெரிந்து வினையாடல்
1. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
பொருள்: செயலாற்றும் திறன் உடையவரையும் செய்யவேண்டிய செயலையும்
செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து அச்செயலை நிறைவேற்ற வேண்டும்.
2. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்*
பொருள்: இச்செயலை இந்தவகையால் இவர் செய்துமுடிப்பார் என்று ஆராய்ந்து
அச்செயலை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்.
செங்கோன்மை
3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
பொருள்: எதையும் நன்கு ஆராய்ந்து ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில்
நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.
4. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
பொருள்: உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை
அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும்.
வெருவந்த செய்யாமை
5. தக்காங்கு நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
பொருள்: ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும்
குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.
6. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
பொருள்: நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும்
கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.
சொல்வன்மை
7. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.*
பொருள்: கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத்
தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.
8. சொல்லுக சொல்லைப் பிறிதுஒர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.*
பொருள்: நாம் சொல்லும் சொல்லை வேறு சொல்லால் வெல்ல இயலாதவாறு
சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசவேண்டும்.
அவையறிதல்
9. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
பொருள்: சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின்
தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.
10. கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
பொருள்: சொற்களை ஆராயும் அறிஞர்நிறைந்த அவையில் பேசும்போதுதான் பலநூல்களைக் கற்றவரின் கல்வி பெருமையடையும்.