Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | நீர்வாழ் உயிரி வளர்ப்பு (Aquaculture)
   Posted On :  10.01.2024 09:02 am

11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்

நீர்வாழ் உயிரி வளர்ப்பு (Aquaculture)

நீர்வாழ் உயிரி வளர்ப்பு பல நூற்றாண்டுகளாக பல்வேறு வகைகளில் போனிசியன்கள் (Phoenicians) காலம் முதல் புழக்கத்தில் உள்ளது. நம் இந்திய நாட்டில் நீர் வாழ் உயிரி வளர்ப்பு மிகப்பெரிய வளமாகக் கருதப்படுகின்றது.

நீர்வாழ் உயிரி வளர்ப்பு (Aquaculture)

நீர்வாழ் உயிரி வளர்ப்பு பல நூற்றாண்டுகளாக பல்வேறு வகைகளில் போனிசியன்கள் (Phoenicians) காலம் முதல் புழக்கத்தில் உள்ளது. நம் இந்திய நாட்டில் நீர் வாழ் உயிரி வளர்ப்பு மிகப்பெரிய வளமாகக் கருதப்படுகின்றது. 1911 ஆம் ஆண்டு தமிழகத்தில் மீன் வளர்ப்பு குறிப்பிடும்படியான கவனத்தைப் பெற்றது. நீர் வாழ்உயிரி வளர்ப்புஎனும் அறிவியல் பிரிவு மீன்கள், மெல்லுடலிகள், கிரஸ்டேஷியன்கள் மற்றும் நீர்த் தாவரங்கள் ஆகியவற்றை பண்ணை அமைத்து வளர்த்தல் என்பதாகும். ஆதார வளங்கள் அடிப்படையில் நீர்வாழ் உயிரி வளர்ப்பை மூன்று வகைகளாக வகைபடுத்தலாம் அவை ) நன்னீர் உயிரி வளர்ப்பு, ) கழிமுக நீர் உயிரி வளர்ப்பு மற்றும் () கடல்நீர் உயிரி வளர்ப்பு ஆகியனவாகும். மீன்களை பலவகை ஊடகங்களிலும் கண்காணித்து வளர்த்தல் மீன் வளர்த்தல் (pisciculture) எனப்படும். ஆறுகள், கால்வாய்கள், நீரோடைகள், ஏரிகள், வெள்ள நீர் ஈரநிலங்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள், தாங்கல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் மற்றும் நன்னீர் மீன்வளர்ப்புக்கு உருவாக்கப்பட்ட குளங்கள் ஆகியவை உள்நாட்டு நீர் நிலைகள் ஆகும். நீர் நிலைகளின் pH சமநிலையுடனும் உப்புத்தன்மை 5 ppt க்கும் குறைவாக இருத்தல் அவசியம்.

கழிமுக நீரில் வாழும் மீன்கள் தம் வாழ்நாளின் பெரும்பகுதியை முகத்துவாரங்கள், மாங்குரோவ் சதுப்புநிலங்கள் மற்றும் ஆழம் (lagoons) குறைந்த கடற்கரையோரங்களில் கழிக்கின்றன. வங்காளம் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் கழிமுக நீரில் வாழும் மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. 0.5 - 30 ppt உப்புத்தன்மை கொண்ட நீரில் விலங்குகளை வளர்த்தல் கழிமுக உயிரிகள் வளர்த்தல் எனப்படும். பால் மீன் (Chanos chanos), கொடுவா (Sea bass), மடவை (Mullet), கறிமீன் (Pearlspot) போன்றவை கழிமுக நீரில் வளர்க்கப்படும் மீன் வகைகளாகும்.

கடலில் நடைபெறும் மீன்பிடி செயல்பாடுகள் கடல் மீன்பிடித்தல் எனப்படும். இந்தியத் துணைக் கண்டம் ஏறக்குறைய 5600கி.மீ நீள கடற்கரையைப் பெற்றுள்ளது. இந்தியாவில் பிடிக்கப்படும் கடல் மீன்களில் 80% மேற்கு கடற்கரையிலிருந்தும் மீதியுள்ள 20% கிழக்குக் கடற்கரையிலிருந்தும் பிடிக்கப்படுகின்றன.கானாங்கெழுத்தி, மத்தி, சுறா மற்றும் கடல் கெழுத்திகள் போன்றவை முதல் தர கடல் மீன்களாகும். தமிழ்நாடு கடற்பகுதிகளில் குருத்தெலும்பு மற்றும் எலும்புமீன்கள் ஆகிய இரண்டு வகை மீன்களும் பிடிக்கப்படுகின்றன. 30 – 35 ppt உப்புத்தன்மையுள்ள நீரில் மீன்களும் பிற விலங்குகளும் வளர்க்கப்படுதல் கடல் வாழ் உயிரிகள் வளர்த்தல் (Mariculture) எனப்படும்.பால்மீன்கள் (Chanos chanos), மடவை மீன்கள் போன்றவை இங்கு வளர்க்கப்படுகின்றன. 36 - 40ppt உப்புத்தன்மை கொண்ட நீரில் உயிரிகள் வளர்க்கப்படுதல் மிகை உப்பு நீர் உயிரிகள் (Metahaline) வளர்த்தல்எனப்படும்.(.கா.) ஆர்ட்டீமியா சலைனா. உப்பு நீர் இறால் எனப்படும் கிரஸ்டேஷியன் பிரிவைச் சேர்ந்த ஆர்ட்டீமியா சலைனா உயர் ஊடுகலப்பு ஒழுங்குபாட்டுத் திறனைப் பெற்றிருப்பதால் இவை அதிக உப்புத்தன்மை கொண்ட நீரில் வாழ்கின்றன


மீன் வளர்ப்பு

வளர்ப்பு மீன்களின் பண்புகள் 

வளர்க்கப்படும் மீன்களின் சிறப்புப் பண்புகளாவன:

I. குறைந்த வளர்ப்பு காலத்தில் அதிக வளர்ச்சி வீதம் கொண்டவை.

II. வழங்கும் துணை உணவை ஏற்றுக்கொள்பவை

III. சில பொதுவான நோய்களை தாங்கும் திறன் மற்றும் ஒட்டுண்ணிகள் தாக்கத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை.

IV. கலப்பு மீன் வளர்ப்பிற்கு உட்படுத்தும் மீன்கள், பிற இன மீன்களை தாக்காமலும், மற்றவை அவற்றின் இயல்பில் குறுக்கிடாமலும் இணைந்து வாழும் தன்மையுடையனவாக இருப்பது அவசியம்.

V. வழங்கப்படும் உணவை உடல் பொருளாக மாற்றும் திறன் மிகுதியாக இருத்தல் அவசியம்

வளர்ப்பு மீன்களின் வகைகள்

வளர்ப்பு மீன்களை 3 வகைகளாகப் பிரிக்கலாம் (படம் 13.8).


) உள்நாட்டு (அல்லது) உள்ளூர் நன்னீர் மீன் வகைகள் (Indigenous or native freshwater fishes) (பெருங்கெண்டைகளான (Major carps) கட்லா, லேபியோ மற்றும் கெழுத்திமீன்).

) நன்னீரில் வாழும் தன்மை கொண்ட உவர் நீர் மீன்கள் (பால்மீன், மடவை).

) வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் (சாதா கெண்டைகள்) (Common carps). 

அனைத்து மீன்களிலும் பெருங்கெண்டைகள் இந்தியாவில் வளர்க்க மிகப் பொருத்தமான இனங்களாக கருதப்படக் காரணங்கள்:

1. விலங்கு மிதவை உயிரிகள், தாவர மிதவை உயிரிகள், அழுகும் களைச்செடிகள், கழிவுகள் மற்றும் நீர்த் தாவரங்களை உண்ணும் தன்மை

2. கலங்கல் தன்மை அதிகமுள்ள, சிறிதளவு உயர் வெப்ப நிலையுடைய நீரிலும் வாழும் தன்மை.

3. நீரிலுள்ள O2 மாறுபாட்டை தாங்கும் திறன்

4. ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குகொண்டு செல்வது எளிது.

5. இவை அதிக உணவூட்ட மதிப்பு கொண்ட உண்ணத் தகுந்த மீன்கள் ஆகும்.


மீன்வளர்ப்பை பாதிக்கும் புறக் காரணிகள்

வெப்பநிலை, ஒளி,மழைநீர், வெள்ளம், நீரோட்டம், நீரின் கலங்கல் தன்மை, அமில-காரத்தன்மை (pH), உப்புத்தன்மை மற்றும் கரைந்துள்ள O2போன்ற காரணிகள் மீன்வளர்ப்பை பாதிக்கும் புறக் காரணிகள் ஆகும். ஒளியும், வெப்பநிலையும் மீன் இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மீன் பண்ணை பராமரிப்பு

மண்ணின் தன்மை, நீரின் தரம், நீராதாரம், நீரின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் காரணிகள் போன்ற மீன்வளர்ப்பின் பல்வேறு நிலைகளை மீன்வளர்க்க விரும்புவோர் அறிந்திருத்தல் வேண்டும். இனப்பெருக்கம், பொரித்தல், பேணுதல், பராமரிப்பு மற்றும் இருப்பு வைத்தல் போன்றனவற்றை சரிவர பராமரித்தல் வேண்டும். கீழ்க்காணும் பல்வேறு வகை குளங்கள் மீன்களின் பல்வேறு நிலைகளைக் கருத்தில் கொண்டு பராமரிப்பிற்காக பரிந்துரைக்கப்படுகின்றது


இனப்பெருக்கக் குளம்

மீன் வளர்ப்பின் முதல்படி நிலை இனப்பெருக்கம் ஆகும். இனப்பெருக்கம் சரியாக நடைபெற இனப்பெருக்க குளம் தேவைப்படுகிறது. இவ்வகைக் குளங்கள் ஆறு அல்லது இயற்கை நீர் வளங்களின் அருகில் உருவாக்கப்படுகின்றன

இனப்பெருக்க முறைகள்: இரண்டு வகை இனப்பெருக்க முறைகள் காணப்படுகின்றன. (1) இயற்கை முறை (2) தூண்டப்பட்ட இனப்பெருக்கம்.


1. இயற்கை முறை இனப்பெருக்கம் (Natural Breeding - Bundh Breeding)

இவை வளர்ப்பு மீன்களின் இனப்பெருக்கத்திற்காக பராமரிக்கப்படும் சிறப்புத் தன்மை வாய்ந்த குளங்களாகும். அதிக அளவு மழைநீரைத் தேக்கி வைக்கக்கூடிய பெரிய தாழ்மட்டப் பகுதிகளில் இவற்றின் வரப்புகள் அமைக்கப்படுகின்றன. இவ்வமைப்பின் ஆழம் குறைந்த பகுதிகள் குஞ்சு பொரிப்பு இடமாக பயன்படுத்தப்படுகின்றன.


2. தூண்டப்பட்ட இனப்பெருக்கம் (Induced Breeding)

பொதுவாக, விதை மீன்களை இனப்பெருக்கப் பரப்பிலிருந்து சேகரிக்கலாம். ஆனால், அனைத்து விதை மீன்களும் ஒரே இனத்தைச் சார்ந்ததாக அமைவது சாத்தியமற்றது. எனவே தரமான விதைமீன்களை உற்பத்தி செய்ய செயற்கை முறைக் கருவுறுதல் மற்றும் தூண்டல் இனப்பெருக்கம் எனும் மேம்பட்ட தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. செயற்கை கருவுறுதல் முறையில் மீன்களின் அண்ட செல்களும் விந்து செல்களும் சேகரிக்கப்பட்டு செயற்கை முறையில் கருவுறச் செய்யப்படுகின்றன. செயற்கை முறை கருவுறுதலுக்கு பெண் மீனின் அடிவயிற்றுப் பகுதியை நேராகப் பிடித்து வலது கை பெருவிரலால் வயிற்றின் முன்புறத்திலிருந்து பின்புறம் நோக்கி அழுத்தி முட்டைகள் தனியாக சேகரிக்கப்படுகின்றன. ஆண் மீனின் வயிற்றுப்பகுதி கீழ்நோக்கி இருக்கும்படி பிடித்துமேற்கூறிய முறையில் விந்து செல்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர், கருவுறுதலுக்காக இரண்டும் கலக்கப்படுகின்றன.

தூண்டப்பட்ட னப்பெருக்கம் ஹைபோஃபைசேஷன் (Hypophysation) முறையிலும் செய்யலாம். இம்முறையில் பிட்யூட்டரி ஹார்மோனான கொனடோட்ரோபின் ஹார்மோனைப் (FSH & LH) பயன்படுத்துவதால் மீன்களின் இனவுறுப்புகளின் முதிர்ச்சி மற்றும் முட்டை வெளிப்படுதல் தூண்டப்படுகின்றது. முதிர்ந்த ஆரோக்கியமான மீனில் இருந்து பிட்யூட்டரி சுரப்பி எடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட பிட்யூட்டரி சுரப்பியை 0.3% உப்புக்கரைசல் அல்லது கிளிசரின் சேர்ந்து அரைத்து (Homogenising) மையவிலக்கு சுழலியில் (centrifuge) 8000rpm ல் 15 நிமிடங்கள் மையவிலக்கம் செய்யப்படுகிறது. பின்னர், சேகரிக்கப்பட்டு வடிகட்டிய பிட்யூட்டரி கரைசலை மீன்களின் வால் துடுப்பின் அடிப்பகுதியில் தசைகளுக்கிடையிலோ அல்லது மார்புத்துடுப்பின் அடிப்பகுதியில் பெரிடோனியத்திலோ செலுத்தி மீன்களில் இனப்பெருக்கம் தூண்டப்படுகின்றது. ஆண் மற்றும் பெண் மீன்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இனச்செல்கள் (விந்து மற்றும் அண்ட செல்கள்) சேர்ந்து கருவுறுதல் நடைபெறுகிறது. கருவுற்ற முட்டைகள் சேகரிக்கப்பட்டு ஹாப்பா என்னும் பொரிப்பகங்களில் விடப்படுகின்றன.


மீன்விதைகள்

இனப்பெருக்கக் குளத்தில் இருந்து பென்சிஜால் (Benchijal) எனும் எறி வலையைக் (Shooting net) கொண்டு மீன் கருமுட்டைகள் அல்லது மீன் விதைகள் சேகரிக்கப்பட்டு பொரிப்புக் குளத்திற்கு மாற்றப்படுகின்றது


பொரிப்புக்குழி

கருவுற்ற முட்டைகள் பொரிப்புக்குழியில் வைக்கப்படுகின்றன. பொரிப்புக்குழி இனப்பெருக்கத் தளத்திற்கு அருகில் இருப்பது அவசியம். இந்தச் சிறிய அமைப்பில் நல்ல தரமான நீர் இருக்க வேண்டும். பொரிப்புக் குழிவகைப்படும். பொரிப்புக்குளம் (Hatcheries) என்பது சிறிய குளமாகும். இதில் கருவுற்ற முட்டைகள் விடப்பட்டு பொரித்தல் நடைபெறுகின்றது. பொரிப்பக ஹாப்பா (Hapa) என்பது கொசுவலைத் துணியால் உருவாக்கப்பட்ட செவ்வக வடிவத் தொட்டியாகும். இத்தொட்டியின் நான்கு மூலைகளும் மூங்கில் கழிகளால் வலுவூட்டப்பட்டுஆற்றில்பொருத்தப்படும் அமைப்பு ஆகும் (படம் 13.9).



நாற்றங்கால் குளம் (Nursery Pond)

பொரித்த இளம் மீன்குஞ்சுகள் (fries) ஹாப்பாவில் இருந்து நாற்றங்கால் குளத்திற்கு அனுப்பப்படுகின்றது. இங்கு இவை வளர்ந்து விரலி (Fingerlings) களாகின்றன.


பராமரிப்புக் குளம் (Rearing Pond)

விரலிகள் நாற்றங்கால் குளத்தில் இருந்து பராமரிப்புக் குளத்திற்கு மாற்றப்படுகின்றன. குறுகலான நீண்ட பராமரிப்புக்குளத்தில் விரலிகள் நீண்ட தூரம் நீந்த இயலும். இக்குளத்தில் நச்சுப்பொருட்களும் கொன்றுண்ணிகளும் இல்லாமை அவசியம். நோய் எதிர்ப்புப் பொருளைக் கொண்டு தூய்மை செய்யப்பட்ட விரலிகள் இருப்புக் குளத்திற்கு மாற்றப்படுகின்றன.


இருப்புக்குளம் (Stocking Pond)

இருப்புக்குளத்தில் களைகளும் கொன்றுண்ணி மீன்களும் இருக்கலாகாது. மாட்டுச்சாணம் கொண்டு (கரிம தொழுஉரம்) உற்பத்தித் திறன் மேம்படுத்தப்படுகின்றது. வேதி உரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.


அறுவடை செய்தல் (Harvesting)

அறுவடை செய்தல் என்பது நீர்நிலையில் இருந்து மீன்களை பிடித்தல் ஆகும். நன்கு வளர்ந்த மீன்களை அறுவடை செய்து சந்தை படுத்துகின்றனர். சிறிய மீன்கள் மேலும், வளர்ச்சியடைய, இருப்புக் குளத்திற்குள்மீண்டும் விடப்படுகின்றன. பல்வேறு மீன்பிடி வகைகள் பயன்பாட்டில் உள்ளன. அவை துரத்திப் பிடித்தல், தூண்டில் போட்டு பிடித்தல், கண்ணிவைத்து பிடித்தல், மூழ்கு வலை, வீச்சு வலை, செவுள் வலை, இழுவலை, மற்றும் பர்ஸ் வலை ஆகியவற்றை பயன்படுத்துதல் போன்றவையாகும். பிடிக்கப்பட்ட மீன்கள் குளிர்பதனம், ஆழ் உறை நிலை முறை, உறைவு உலர்த்தல், சூரிய ஒளியில் உலர்த்தல், உப்பிடல், புகையூட்டல், பெட்டிகளில் அடைத்தல் ஆகிய முறைகளில் பதப்படுத்தப்படுகிறது.


கூட்டு மீன்வளர்ப்பு (Composite Fish Farming)

வெவ்வேறு சிற்றினங்களைச் சார்ந்த சில மீன்களை குறிப்பிட்ட விகிதத்தில் குளத்தில் ஒன்றாக வளர்க்கும் முறை கூட்டு மீன் வளர்ப்பு அல்லது பலமீன் வளர்ப்பு (Polyculture) ஆகும். இம்முறையின் நன்மைகள்

1. கிடைக்கக்கூடிய சூழ்நிலைக்கூறுகள்முழுவதையும் பயன்படுத்துதல்.

2. பொருத்தமான சிற்றினங்கள் ஒன்றை ஒன்று பாதிக்காது.

3. இவ்வளர்ப்பில் உள்ள சிற்றினங்களுக்கிடையே போட்டி இருக்காது.

கட்லா கட்லா (Catla catla), லேபியோ ரோஹிட்டா (Labeo rohita), சிர்ரைனா மிர்காலா (Cirrhinus mrigala) போன்றன கூட்டு மீன் வளர்ப்பு முறையில் வளர்க்கும் மீன்கள் ஆகும்.


வெளிநாட்டு மீன் வளர்ப்பு (Exotic Fishes) 

மீன் வளர்ப்பிற்காக பிற நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மீன்கள் வெளிநாட்டு மீன்கள் எனப்படும். வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மீன்களை உள்நாட்டில் வளர்க்கும் முறைக்கு வெளிநாட்டு மீன் வளர்ப்பு என்று பெயர்.

சிப்ரினஸ் கார்பியோ (Cyprinus carpio), ஓரியோகுரோமிஸ் மொசாம்பிகஸ் (Oreochromis mossambicus) போன்றன இந்தியாவில் வளர்க்கப்படும் சில வெளிநாட்டு மீன் வகைகள் ஆகும்.


நோய் மேலாண்மை

வைரஸ் அல்லது பாக்டீரியாவால் நோய்கள் தோன்றுகின்றன. நீரின் தரம், காற்றோட்டம், உணவூட்டம், மீன்களின் இறப்பு போன்றவற்றை முறையாக சோதனை செய்தல் அவசியம். ஒட்டுண்ணி தாக்கம் மற்றும் நுண்ணுயிரித் தொற்று போன்றனவற்றை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும்.


மீன்களின் பொருளாதார முக்கியத்துவம்

மீன்கள் புரத உணவிற்கான உயர்ந்த ஆதாரமாகும். இது மனிதனின் உணவூட்டத் தேவைக்கான பிரதான உணவாகவும் உள்ளது. சார்டைன் (மத்தி), மாக்கெரல் (கானாங்கெழுத்தி), டூனா (சூறை), ஹெர்ரிங் போன்ற மீன் இனங்கள் அதிக அமினோ அமில செறிவைக் கொண்டுள்ளன, குறிப்பாக, மீனுக்கு மணமளிக்கும் ஹிஸ்டிடின் என்னும் அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளன. மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. கால்சியம்,மெக்னீசியம்,பாஸ்பரஸ்,பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, அயோடின் மற்றும் தாமிரம் போன்ற தனிமங்களும் உள்ளன. மீன்களில் இருந்து கிடைக்கும் சில உப பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


தெரிந்து தெளிவோம்

மீன்கள், உணவை மாமிசமாக மாற்றும் திறமைசாலிகள் எனப்படுவது ஏன்?


மீன் எண்ணெய் (Fish Oil)

மீன் எண்ணெய் என்பது ஒரு மிக முக்கிய மீன் உப பொருளாகும். இது மீனின் கல்லீரல் மற்றும் உடலில் இருந்து பெறப்படுகின்றது. இதில், வைட்டமின் A மற்றும் D மிகுந்துள்ளது. மீன் உடல் எண்ணெயில் அயோடின் அதிகம் உள்ளதால் நாம் உட்கொள்ள இயலாது, ஆனால் இது சோப்பு, பெயிண்ட் மற்றும் நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றது.


மீன்மாவு (Fish Meal) அல்லது மீன் தூள் 

மீனின் உடலில் இருந்து எண்ணெய் எடுத்தபிறகு உள்ள கழிவுகளில் இருந்து உருவாக்கும் பொருள் மீன் மாவு ஆகும். உலர்த்தப்பட்ட இக்கழிவுகளில் இருந்து பன்றி, பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவு தயாரிக்கப்படுகின்றது. மீன் மாவு தயாரித்த பின் எஞ்சியுள்ள கழிவுகள் உரமாகப் பயன்படுகின்றது.

இசின்கிளாஸ் (Isinglass)

இசின்கிளாஸ் என்பது ஒரு உயர்தர கொலாஜன் ஆகும். இது கெண்டை மற்றும் கெழுத்தி போன்ற மீன்களின் உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட காற்றுப்பைகளில் இருந்து பெறப்படும் பொருளாகும். பதப்படுத்தப்பட்ட காற்றுப்பைகளை கொதிநீரில் கரைக்கும் போது ஒட்டும் தன்மை பெற்ற ஜெலாடின் உருவாகின்றது. ஒயின், பீர், வினிகர் போன்ற பொருட்களை சுத்திகரிக்க இது பயன்படுகிறது.


இறால் வளர்ப்பு

நீர் வாழ் கிரஸ்டேஷியன்களில் மிக முக்கியமானது இறால் ஆகும். இது உலகம் முழுதும் வளர்க்கப்படுகின்றது. இறால் மாமிசம் சுவைமிக்கது. இதில், கிளைக்கோஜன், புரதம் ஆகியன அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் உள்ளது.

இறால் பிடிப்பு வகைகள்

1. ஆழம் குறைந்த நீரில் இறால் பிடிப்பு: இம்முறை மேற்குக்கடற்கரைப்பகுதியின் ஆழம் குறைந்த குதியில் மேற்கொள்ளப்படுகின்றது.

2. கழிமுக அல்லது உப்பங்கழிகளில் இறால் பிடிப்பு: இம்முறை மேற்குக்கடற்கரைப் பகுதிகள், எண்ணூர், புலிகட் ஏரி, சில்கா ஏரி, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளின் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றது

3. நன்னீர் இறால் பிடிப்பு: இந்தியா முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் இருந்து இறால் பிடிக்கப்படுகிறது.

4. கடல் இறால் பிடிப்பு: பினேய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கடல் இறால்கள் இந்திய கடற்கரைப் பகுதிகளில் இருந்து பிடிக்கப்படுகின்றன


இறால் சிற்றினங்கள்

பினேயஸ் இன்டிகஸ் (Penaeus indicus), பினேயஸ் மோனோடான் (Penaeus monodon), மெட்டாபினேயஸ் டோப்சானி (Metapenaeus dobsoni) மற்றும் மேக்ரோபிராக்கியம் ரோஸன்பெர்ஜி (Macrobrachium rosenbergii) போன்ற இறால் வகைகள் நீர் நிலைகளில் காணப்படுகின்றன.


நன்னீர் இறால் வளர்ப்பு

மேக்ரோபிராக்கியம் ரோஸன்பெர்ஜி (படம் 13.10) பொதுவாக ஆறுகள், வயல்கள், குறை உப்புத்தன்மை கொண்ட கழிமுகம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. ஏரிகள், ஆறுகள் மற்றும் நெல் வயல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இறால்கள் காற்று நிறைந்த குளத்தில் (காற்றோட்டம் பெற) விடப்படுகின்றன. ஓரிணை இறால்கள் இனப்பெருக்கத்திற்காக தனி தொட்டியில் பராமரிக்கப்படுகின்றன. இவை, கலவிக்குப்பின் முட்டைகளை இடுகின்றன. தகுந்த காற்றோட்டத்துடன் கூடிய பல்வேறு அளவுகளில் இனப்பெருக்கத் தொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. பொரிப்புக்குளத்தில் 24°C முதல் 30°C வெப்பநிலையும் மற்றும் 7- 8 வரை pHம் இருக்குமாறு பராமரிக்க பராமரிக்க வேண்டும். முட்டைகள் பொரிந்து முதல் மற்றும் இரண்டாம் நிலை லார்வா நிலையை அடைகின்றன. செயற்கை உணவு அளிக்கப்படுகின்றது. 60 நாட்கள் வயதான 5 செ.மீ நீளமுள்ள இளம் இறால்கள் நன்னீர் அல்லது குறைந்த உப்புத்தன்மையுள்ள கழிமுக நீர்குளம் மற்றும் நெல் வயல்களில் வளர்க்கப்படுகின்றன. ஆண்டுக்கு 2 முறை இறால்களை அறுவடை செய்யலாம்.



கடல் இறால் வளர்ப்பு

இடத்தேர்வு, நீரின் தரம், மண்ணின் தரம், இறால் விதை கிடைத்தல் ஆகிய காரணிகள் கடல் இறால் வளர்ப்பின் வெற்றியை நிர்ணயிக்கின்றன


பண்ணை தயார் செய்தல்

பாசிகள் வளர்வதற்கும் அதனைத் தொடர்ந்து இறால்களை இருப்பு வைப்பதற்கும் குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி சூரிய ஒளியில் தரைப்பரப்பை உலரச் செய்து, பிறகு லேசாக உழுதலும் அவசியம். உபரி CO2 நீக்கவும் மற்றும் இறால் தோலுரிக்கத் தேவையான கால்சியத்தை அளிப்பதற்கும் விவசாயச் சுண்ணாம்பை இடுதல் வேண்டும். அரிசித்தவிடு, பறவைப்பண்ணைக் கழிவுகள், கால்நடைக்கழிவுகள் போன்ற ஊட்டப்பொருட்களைப் பயன்படுத்தி மண் வளம்கூட்டப்படுகின்றது. இறால்பிடி கருவிகள் மற்றும் கலன்களான வீச்சுவலை, பை வலை, இழுவலை மற்றும் தடுப்பு வலை ஆகியவற்றைப் பயன்படுத்தி இறால்களைப் பிடிப்பது பொதுவாக நடைபெறுகின்றது. ஓடுநீக்குதல் மற்றும் குடல் நீக்குதல் அல்லது வேகவைத்து ஓடு நீக்குதல் முறையில் இறால்கள் பதப்படுத்தப்படுகின்றன.


முத்து வளர்ப்பு

முத்து என்பது சிப்பியின் ஓட்டினுள் உள்ள மிகுந்த பளபளப்புடன் கூடிய உறுதியான கோளவடிவப் பொருள் ஆகும். முத்துச்சிப்பிகள் நகராத் தன்மையுடையனவாகும். நம் நாட்டில் முதன் முதலில் தூத்துக்குடியில் 1973 ல் முத்து வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. முத்துச் சிப்பிகள் கன்னியாகுமரியின் கடற்பகுதி மற்றும் கட்ச் வளைகுடா பகுதிகளில் காணப்படுகின்றன. பிங்டேடா (Pinctada) பேரினத்தைச் சேர்ந்த சிப்பிகள் உயர்தர முத்துக்களை உருவாக்குகின்றன. இவ்வகை சிப்பிகளை 30ppt உப்புத்தன்மையுடைய நீரில் சாரம், மிதவைகள் மற்றும் நீள் கயிற்றில் வளர்க்கலாம். நன்னீர் மட்டியான லெமல்லிடென்ஸ் (Lamellidens) செயற்கை முத்து வளர்ப்புக்கு பயன்படுகின்றன. பெரும்பாலும், முத்துச்சிப்பிகள் பாறை மடிப்புகள், இறந்த பவளப்பாறைகள் ஆகியவற்றில் வளர்ந்து பரந்த முத்துவங்கிகளாகின்றன. இவற்றால் உருவாக்கப்படும் உயர் மதிப்பு முத்துக்களுக்கு லிங்கா முத்துக்கள் (Lingha pearl) என்று பெயர்


முத்து உருவாக்கம்

ஏதாவது வெளிப்பொருட்கள் தற்செயலாக சிப்பியின் மென்தோலான ஓட்டுக்கும் மேன்டிலுக்கும் இடையே நுழைந்தால் அவை மேன்டிலில் ஒட்டிக்கொள்கின்றன. இதனால் ஏற்படும் உறுத்தலைத் தவிர்க்க மேன்டில் எபிதீலியம் வெளிப்பொருளின் மீது பைபோல் சூழ்ந்து அடர்த்தியான நேக்ரி (Nacre) எனும் பொருளை தொடர்ந்து சுரக்கின்றது. காலப்போக்கில் கால்சியம் கார்பனேட் பல அடுக்குகளாகச் சுரந்து உறுதியான பளபளப்பான முத்து உருவாக்கப்படுகின்றது. முத்து பெரிதாக வளர்ந்ததும் சிப்பி இறந்துவிடுகின்றது. பிறகு கவனமாக ஓடு நீக்கப்பட்டு முத்துக்கள் கைகளால் பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் தரம் பிரிக்கப்படுகின்றது (படம் 13.11).



முத்தின் பகுதிப்பொருட்கள்

(1) நீர் : 2 - 4%

(2) கால்சியம் கார்பனேட்: 90%

(3) கரிமப்பொருட்கள்: 3.5-5.9%

(4) கசடுகள்: 0.1 - 0.8%


முத்தின் தரம்

முத்துக்கள்பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் கிடைக்கின்றன. வெண்மை, இளமஞ்சள், வெளிர் சிவப்பு, இளம் சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ளது. வானவில் நிறத்தையுடைய கோள வடிவ முத்து அரிதாகக் காணப்படுகிறது. கடலில் இருந்து கிடைக்கும் உயர்தர முத்து லிங்கா முத்து ஆகும். நன்னீரில் இருந்து உருவாகும் முத்து கடல்நீரில் உருவாகும் முத்து போல் மதிப்புடையதல்ல (மிஷ்ரா 1961).

11th Zoology : Chapter 13 : Trends in Economic Zoology : Aquaculture in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள் : நீர்வாழ் உயிரி வளர்ப்பு (Aquaculture) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்