வகைகள், வாய்ப்புகள் - நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு | 9th Science : Economic Biology
நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு
நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு (Aquoculture)
என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நீர்வாழ் உயிரிகளான மீன்கள், இறால்கள் (ப்ரான்ஸ்),
சிறிய வகை இறால்கள் அல்லது கூனி இறால்கள், நண்டுகள், பெருங்கடல் நண்டுகள் (லாப்ஸ்டர்),
உண்ணத்தகுந்த சிப்பிகள், முத்துச் சிப்பிகள் மற்றும் கடல் களைகள் போன்றவற்றை கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் குறிப்பிட்ட தகுந்த சூழலில் நவீன மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வளர்ப்பதாகும்.
தகவல் துணுக்கு
கடலிலும், உள் நன்னீ ர் இடங்களிலும் (ஏரி, குளங்கள், ஆறுகள்) மற்றும் கடலோர நீர் வாழ் உயிரிகள் வளர்ப்பு நிலைகளிலும் அதிகமான மீன் வளங்களைக் கொண்டுள்ள முன்னோடி மாநிலமாக நமது தமிழ்நாடு விளங்குகிறது. மாநிலத்தின் கடல்வாழ் மீன்களின் வளமானது 0.719 மில்லியன் டன் அளவாக (மில்லியன் டன் - 10 லட்சம் கிலோ) உள்ளது. அதைப்போலவே நன்னீர் மீன் வளர்ப்பானது 4.5 லட்சம் மெட்ரிக் டன்கள் (மெட்ரிக் டன் - 1000 கிலோகிராம்) அளவாக இருக்கிறது. கடலோர மீன் வளர்ப்பில் தமிழ்நாடானது பிற கடலோர மாநிலங்களை ஒப்பிடும் போது 6வது இடத்தில் உள்ளது.
நீர் வாழ் உயிரி வளர்ப்பானது கீழ்காணும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.
நன்னீர்வாழ் உயிரிவளர்ப்பு
2.
உவர்நீர்வாழ் உயிரிவளர்ப்பு
நன்னீர்வாழ் உயிரி வளர்ப்பு (Freshwater Aquaculture):
நன்னீரில் வாழக்கூடிய உயிரிகளை வளர்க்கும் முறையே நன்னீர் வாழ் உயிரிவளர்ப்பு எனப்படும். இவ்வகை உயிரி வளர்ப்பானது குளம், ஆறு, அணைக்கட்டு மற்றும் குளிர்ந்த நீர்நிலைகள் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. இவ்வகை நீர்நிலைகள் நிலப்பரப்பினுள் அமைந்துள்ளன. நன்னீர் மீன் இனங்களான கெண்டை மீன்கள் (கட்லா,
ரோகு, மிரிகால்) கெளுத்தி மீன்கள், சிலேபி மீன்கள் மற்றும் காற்றினை சுவாசிக்கும் மீன்கள் போன்றவை இவ்விடங்களில் வளர்க்கப்படுகின்றன.
கடல்நீர் வாழ் உயிரி வளர்ப்பு (Marine water aquaculture):
நீர்வாழ் உயிரினங்களை கடல் நீரில் வளர்த்தலையே கடல்நீர்வாழ் உயிரி வளர்த்தல் என்கிறோம். இவை மாரி வளர்ப்பு அல்லது கடல்பண்ணைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வகை வளர்ப்பானது கடலின் கரையை ஒட்டிய பகுதிகளிலும்,
ஆழ்கடல் பகுதிகளிலும் நடைபெறுகின்றது. கூனி இறால்கள் (கடல் இறால்கள்),
முத்துச் சிப்பிகள், உண்ண த்தகுந்த சிப்பிகள், சங்குகள், துடுப்புடைய மீன்களான சால்மன் மீன்கள், ட்ரௌட் மீன்கள், கொடுவாய் மீன்கள், மொறவை மீன்கள், பால் கெண்டை மீன்கள் மற்றும் மடவை மீன்கள் போன்ற உயிரினங்கள் கடல் நீரில் வளர்க்கப்படுகின்றன.
நீர்நிலை உணவு ஆதாரங்களிலிருந்து அதிகளவு உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம், வளர்ந்து வரும் மக்கள் தொகையின் உணவுத்தேவைகள் மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகளைச் சந்திக்கும் விதத்தில் விரைவாக வளர்ந்துவரும் உணவு உற்பத்தி செய்யும் துறையாக நீர்வாழ் உயிரி வளர்ப்பு காணப்படுகிறது. இது நீலப்புரட்சியை நோக்கமாகக் கொண்டதாகும். இந்த வளர்ப்பு நம் நாட்டின் ஏற்றுமதியிலும், அன்னிய செலாவாணியை ஈட்டுவதிலும் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றது. கிராமப்புறங்கள் மற்றும் வளர்ந்து வரும் இடங்களில் மீன்பண்ணை அமைத்தல் மூலம் வேலைவாய்ப்புகளையும் இது ஏற்படுத்துகிறது.