இறால் வளர்ப்பு
இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஓடுடைய மீன் ஆதாரங்களுள் மிக முக்கியமானது இறால் ஆகும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சந்தைகளில் இதற்கு அதிகமான தேவை உள்ளது. இவற்றின் மிகுந்த சுவையின் காரணமாக மகிழ்ச்சியை அளிக்கும் உணவாக இவை உண்ணப்படுகின்றன. இவை மிகுந்த பிரபலமானதாகவும்,
பல நாடுகளின் சந்தைகளில் சிறந்த விற்பனைப் பொருளாகவும் இருப்பதால் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர இறால் வளர்ப்பு இந்தியாவில் அவசியமாகியுள்ளது.
பல்வேறு அளவுடைய இறால் இனங்கள் நீர் நிலைகளில் காணப்படுகின்றன. வணிக ரீதியாக நல்ல அளவுடைய, எடையுள்ள, அதிகம் கிடைக்கக் கூடிய மற்றும் சுலபமாக வளர்க்கப்படக்கூடிய இறால்களே பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டு இறால் வளர்ப்பில் ஈடுபடுத்தப்படுகின்றன.
கடல்நீர் இறால் வளர்ப்பு
கடல் நீரில் வளரும் பினேய்டு இறால்களை வளர்ப்பது கடல் இறால்கள் வளர்ப்பு அல்லது கூனி இறால் வளர்ப்பு என்றழைக்கப்படுகிறது. பினேயஸ் இண்டிகஸ்,
மற்றும் பினேயஸ் மோனோடான் கடல் நீரில் வளர்க்கப்படுகின்றன.
நன்னீர் இறால் வளர்ப்பு
நன்னீரில் வாழும் இறால்களை வளர்ப்பது நன்னீர் இறால் வளர்ப்பு எனப்படுகிறது. மேக்ரோபிராகியம் ரோசென்பெர்கி மற்றும் மேக்ரோபிராகியம் மால்கோம்சோனி ஆகிய இறால்கள் நன்னீரில் வளர்க்கப்படுகின்றன.
வழக்கத்திலுள்ள இறால் வளர்ப்பு முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அ. விதை சேகரிப்பு மற்றும் பொரிக்க வைக்கும் முறை.
ஆ. நெல் பயிரோடு இறால் சேர்த்து வளர்க்கும் முறை
அ. விதைசேகரிப்பு மற்றும் பொரிக்க வைக்கும் முறை
இயற்கை மூலங்கள் (கழிமுகம்,கயல் மற்றும் கடலினை ஒட்டிய பகுதிகள்) அல்லது பொரிக்க வைக்கும் முறை ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட லார்வாக்கள் மற்றும் இளம் உயிரிகள் வளர்க்கப்பட்டு, தேவையான ஊட்டங்களை அளிப்பதன் மூலம் பெரிய முதிர்ந்த இறால்களாக மாறுகின்றன.
ஆ. நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை
இது பொக்காலி வளர்ப்பு எனவும் அழைக்கப் படுகிறது. இது கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும். கடலோரத்தில் காணப்படும் மிகவும் தாழ்வான நெற்பயிர் விளைநிலங்கள் இந்த இறால் வளர்ப்புக்கு ஏற்றவையாகும். நெற்பயிரானது அறுவடை செய்யப்பட்டபிறகு இறால் வளர்ப்பு நடைபெறுகிறது.