Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | மைய நரம்புமண்டலம் (Central Nervous System - CNS)
   Posted On :  09.01.2024 08:36 am

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

மைய நரம்புமண்டலம் (Central Nervous System - CNS)

கருவளர்ச்சியின் போது புறப்படலத்திலிருந்து தோன்றிய மைய நரம்பு மண்டலம், மூளை, தண்டுவடம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

மைய நரம்புமண்டலம் (Central Nervous System - CNS)

கருவளர்ச்சியின் போது புறப்படலத்திலிருந்து தோன்றிய மைய நரம்பு மண்டலம், மூளை, தண்டுவடம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். இம்மண்டலத்தை மண்டையோட்டு எலும்புகளும் முதுகெலும்புத்தொடர் எலும்புகளும் பாதுகாக்கின்றன.


மூளை (Brain)

கட்டுப்பாட்டு மண்டலமாகவும், செய்திகளை ஒருங்கிணைத்துக் கட்டளையிடும் பகுதியாகவும் இருப்பது மூளையாகும். இது தகவல் செயலாக்கக் களமாகும். மூளைப்பெட்டகத்துக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மூளையைச் சுற்றி மூன்று அடுக்கு மூளை சவ்வுகள் காணப்படுகின்றன. மூளைப்பெட்டகத்தின் உட்பரப்பில் பரவியுள்ள தடித்த வெளிப்புற உறை டூயூராமேட்டர் (Duramater) எனப்படும். மூளையோடு ஒட்டியுள்ள உள்உறை பயாமேட்டர் (Piamater) உறையாகும். இடையில் உள்ள மெல்லிய உறை அரக்னாய்டு படலம் (Arachnoid membrane) எனப்படும். அரக்னாய்டு படலத்திற்கும் டூயூரா மேட்டருக்கும் இடையேயுள்ள குறுகிய இடைவெளிக்கு டூயூராமேட்டர் கீழ் இடைவெளி (Subdural space) என்று பெயர். அரக்னாய்டு படலத்திற்கும் பயாமேட்டருக்கும் இடையேயுள்ள இடைவெளி அரக்னாய்டு கீழ் இடைவெளி (Subarachnoid space) என்று பெயர்.

முன்மூளை, நடுமூளை மற்றும் பின்மூளை என மூளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

முன்மூளை (Fore Brain)

பெருமூளை (Cerebrum) மற்றும் டயன்செஃபலான் (Diencephalon) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது முன்மூளையாகும். மூளையின் பெரிய பகுதியான பெருமூளை, அறிவின் அமர்விடம் (Seat of intelligence) எனப்படும்.

பெருமூளை இரு அடுக்குகளால் ஆனது. வெளிப்புறத்தில் புறணி என்னும் புறஅடுக்கும் உள்புறத்தில் வெள்ளை நிற மெடுல்லா பகுதியும், மற்றும் அடி உட்கருக்களும் (Basal nuclei) உள்ளன. பெருமூளையின் மேற்பரப்பு பெருமூளைப்புறணி (cerebral cortex) எனப்படுகிறது. பெருமூளையின் புறணியில் மயலின் உறையற்ற நரம்பு செல்கள் அதிகம் இருப்பதால் சாம்பல் நிறமாகக் காணப்படுகிறது. பெருமூளைப்புறணியில், நியூரானின் செல் உடல் டென்ட்ரைட்டுகள், கிளியல் செல்கள் மற்றும் இரத்த நாளங்கள் ஆகியவை உள்ளன. இதன் மேற்பரப்பு பல மேடு பள்ளங்களைக் கொண்ட மடிப்புகளாகக் காணப்படுகிறது. மேடுகள் கைரை (Gyri) (ஒருமை - கைரஸ்) என்றும், கைரைகளுக்கிடையே உள்ள ஆழம் குறைந்த வரிப்பள்ளங்கள் சல்சி (Sulci) (ஒருமை சல்கஸ்) என்றும், மற்றும் ஆழமான பள்ளங்கள் பிளவுகள் (Fissures) என்றும் அழைக்கப்படுகின்றன. கைரை, சல்சி ஆகியவை பெருமூளையின் புறணி பரப்பை அதிகரிக்கின்றன. பெருமூளையை, எட்டுக் கதுப்புகளாக, சல்சி தொகுப்புகள் பிரிக்கின்றன. அவை, தலா ஒரு இணைநெற்றிக்கதுப்பு (ஃபிரான்டல்), உச்சிக்கதுப்பு (பெரைட்டல்) பொட்டுக்கதுப்பு (டெம்போரல்) மற்றும் பிடரிக்கதுப்பு (ஆக்சிபிட்டல்) ஆகியவை ஆகும் (படம் 10.7 மற்றும் அட்டவணை 10.2).



உங்களுக்குத் தெரியுமா?

மூளை மற்றும் தண்டுவடத்தின் சில பகுதிகள் சாம்பல் நிறமாகவும், சில பகுதிகள் வெள்ளை நிறமாகவும் இருப்பதன் காரணம் என்ன?

ஒரு நீள்பள்ளம், பெருமூளையை மேலிருந்து கீழாக இரண்டு அரைக்கோளங்களாகப் பிரிக்கிறது. குறுக்காகச் செல்லும் பிளவு பெருமூளையைச் சிறுமூளையிடமிருந்து பிரிக்கிறது. இருபெருமூளை அரைக்கோளங்களையும் 'கார்ப்பஸ் கலோசம்' (Corpus callosum) என்னும் நரம்பிழைத்தொகுப்பு இணைத்துள்ளது. பெருமூளைப்புறணி மூன்று முக்கியச் செயல் பரப்புகளைக் கொண்டதாகும்

(1) உணர்ச்சிபரப்பு (Sensory area) – இது உச்சிக்கதுப்பு, பொட்டுக் கதுப்பு மற்றும் பிடரிக்கதுப்பு ஆகிய பகுதிகளின் புறணிப்பரப்பில் அமைந்துள்ளது. இவை உணர்வுத்தூண்டல்களைப் பெற்று அதற்கேற்றபடி கட்டளைகளை இடுகின்றன

(2) இயக்கு பரப்பு (Motor areas) இது இயக்குத்தசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது நெற்றிக்கதுப்பின் பின் பகுதியில் காணப்படுகிறது

(3) இணை பரப்பு — (Association area) இது நினைவாற்றல், செய்தித் தொடர்புகள், கற்றல் மற்றும் பகுத்தறிதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. புறணியின் உட்பகுதியான மெடுல்லா வெள்ளை நிறத்தினாலானது. இது புறணிக்கும் டயன்செஃபலானுக்குமிடையே செல்லும் நரம்பிழைகளை கொண்டிருக்கின்றன (படம் 10.8).


டயன்செஃபலான் இதில் மூன்று இணை அமைப்புகள் காணப்படுகின்றன.

1. எபிதலாமஸ் (Epithalamus) நரம்பற்ற திசுக்களால் ஆன இப்பகுதி டயன் செஃபலானின் கூரைப் பகுதியில் உள்ளது. இதன் முன் பகுதியில் உள்ள இரத்த நாளங்கள் பல மடிப்புகளாகிக் கோராய்டு வலைப்பின்னலாக (Choroid plexus) மாறியுள்ளது. கோராய்டு வலைப்பின்னலுக்குப் பின் எப்பிதலாமஸ் சிறு காம்பு பகுதியாக மாறுகிறது. இக்காம்பின் முனையில் உருண்டை வடிவப் பீனியல் உறுப்பு (Pineal body) காணப்படுகிறது. இது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் மெலட்டோனின் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது.

2. தலாமஸ் (Thalamus) சாம்பல் நிறப் பகுதியாக உள்ள இப்பரப்பு, மூளைத்தண்டு, முகுளம் மற்றும்பெருமூளை ஆகியவற்றுக்கிடையேயான தூண்டல்களை அடுத்தடுத்துக் கடத்தும் மையமாகச் செயல்புரிகிறது. தலாமஸினுள், செய்திகள் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்படுகிறது. மேலும் கற்றல் மற்றும் நினைவாற்றலில் தலாமஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்ச்சி மற்றும் இயக்குச் செயல்களை ஒருங்கிணைக்கும் மையமாகத் தலாமஸ் விளங்குகிறது.

3. ஹைப்போதலாமஸ் (Hypothalamus) டயன்செஃபலானின் தரைப்பகுதியில் ஹைப்போதலாமஸ் அமைந்துள்ளது. ஹைப்போதலாமஸின் கீழ்நோக்கிய நீட்சியான இன்ஃபண்டிபுலம் (Infundibulum), ஹைப்போதலாமஸையும் பிட்யூட்டரியையும் இணைக்கிறது. ஹைப்போதலாமஸில் உள்ள ஓரிணை சிறிய உருண்டையான உறுப்பிற்கு மாமில்லரி உறுப்பு (Mammillary bodies) என்று பெயர். வாசனை சார்ந்த அனிச்சைசெயல் மற்றும் அது தொடர்பான உணர்ச்சி வெளிப்பாடுகளில் இவ்வுறுப்பு பங்கேற்கிறது. உடலின் சீரான உள் சமநிலை பேணல் இதன் முதன்மைப்பணியாகும். மேலும் உடல் வெப்பம், பசி மற்றும் தாகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மையங்களும் ஹைப்போதலாமஸில் உள்ளன. ஹைப்போதலாமிக் ஹார்மோன்களைச் சுரக்கக் கூடிய நரம்புசார் சுரப்பு செல்களும் ஒரு குழுவாக உள்ளன. திருப்தி / திகட்டல் மையமாகவும் (Satiety centre) ஹைப்போதலாமஸ் செயலாற்றுகிறது.


தெரிந்து தெளிவோம்

பெருமூளை, தலாமஸ், ஹைப்போதலாமஸ், பான்ஸ், சிறுமூளை மற்றும் முகுளம் ஆகியவற்றால் மனிதமூளை ஆக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியும் சில சிறப்புத் தன்மையுடைய பணிகளைச் செய்கின்றன. ஒரு மனிதன் உயிர் வாழ மூளையின் அனைத்து பகுதிகளும் அவசியம்.

கீழ்கண்ட கூற்றுகளை விவாதிக்க

) மூளையின் தொடர் ஓட்ட மையம் என தலாமஸ் அழைக்கப்படுகிறது.

)முகுளம் பாதிக்கப்படுவதால் உயிரி உயிரிழக்க நேரும்.


லிம்பிக் மண்டலம் (Limbic System)

பெருமூளையின் உட்பகுதியில் லிம்பிக் மண்டலம் உள்ளது. நுகர்ச்சி குமிழ், சிங்குலேட் கைரஸ், மாமில்லரி உறுப்பு, அமிக்தலா, ஹிப்போகாம்பஸ் மற்றும் ஹைப்போதலாமஸ் ஆகியவை லிம்பிக்மண்டல உறுப்புகள் ஆகும். இன்பம், வலி கோபம், பயம், பாலுணர்வு மற்றும் அன்பு ஆகிய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் இப்பகுதி முதன்மைப் பங்கு வகிக்கிறது. இதனால் லிம்பிக் மண்டலத்தை உணர்ச்சி மூளை (Emotional brain) என்றும் அழைப்பர். ஹிப்போகேம்பசும் அமிக்தலாவும் நினைவாற்றல் பணியில் முக்கியப் பங்காற்றுகின்றன (படம் 10.9).



மூளைத்தண்டு (Brain Stem)

தண்டு வடத்திற்கும் டயன் செஃபலானுக்குமிடையே உள்ள மூளையின் பகுதி மூளைத்தண்டு எனப்படும். இதில் நடுமூளை, பான்ஸ் வரோலி மற்றும் முகுளம் ஆகியவை அடங்கியுள்ளன (படம் 10.10).



நடுமூளை (Mid Brain)

டயன்செஃபலானுக்கும் பான்ஸுக்கும் நடுவே உள்ள பகுதியே நடுமூளையாகும். நடுமூளையின் கீழ்ப்பகுதியில் ஓரிணை நீள்வச நரம்புத்திசு கற்றைகள் உள்ளன. இதற்குப் பெருமூளைக் காம்புகள் (Cerebral peduncles) என்று பெயர். பெருமூளை, சிறுமூளை, பான்ஸ் மற்றும் மெடுல்லா பகுதிகளில் முன்னும் பின்னும் தூண்டல்களை கடத்தும் பணியைப் பெருமூளைக் காம்புகள் செய்கின்றன. நடுமூளையின் முதுகுப்புறப்பகுதியில் நான்கு உருண்டையான அமைப்புகள் உண்டு. இவற்றுக்குக் கார்ப்போரா குவாட்ரிஜெமினா (Corpora quadrigemina) என்று பெயர். இது பார்வை மற்றும் கேட்டல் ஆகியவற்றின் அனிச்சை மையமாகச் செயல்படுகிறது.


பின்மூளை (Hind Brain)

ராம்பன்செஃபலான் பகுதியே பின்மூளையாகும். இதில் சிறுமூளை, பான்ஸ் வரோலி மற்றும் முகுளம் ஆகியவை அமைந்துள்ளன. சிறுமூளை, மூளையின் இரண்டாவது பெரிய பகுதியாகும். இதில் இரண்டு அரைக்கோளங்களும் நடுவில் புழுக்கள் வடிவத்திலான வெர்மிஸ் (Vermis) பகுதியும் காணப்படுகிறது. தசைகளின் இயக்கங்களை ஒருங்கிணைத்துக்கட்டுபடுத்துதல், உடலின் சமநிலையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை சிறுமூளையின் பணிகளாகும். சிறுமூளை பாதிக்கப்பட்டால், இயக்கு தசைகளில் ஒருங்கிணைந்த இயக்கம் பாதிக்கப்படுகிறது.

நடுமூளைக்கும் முகுளத்திற்கும் இடையில் சிறுமூளைக்கு முன்புறத்தில் பான்ஸ் வரோலி அமைந்துள்ளது. பான்ஸ் வரோலி சிறுமூளை அரைக்கோளங்களை இணைக்கும் பாலமாகவும், முகுளத்தை மூளையின் பிற பகுதிகளோடு இணைப்பதற்கும் உதவுகிறது.

மூளையின் பின்முனைப்பகுதி முகுளமாகும். இது தண்டுவடத்தையும் மூளையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கிறது. தண்டுவடத்திலிருந்து வரும் சமிக்ஞைகளை ஒருங்கிணைத்துச் சிறுமூளை மற்றும் தலாமஸ் பகுதிகளுக்கு முகுளம் அனுப்புகிறது. சுவாசம், இரைப்பை சுரப்பிகள் மற்றும் இதயநாளங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த மையங்கள் முகுளத்தில் உள்ளன


மூளையின் வென்ட்ரிக்கிள்கள் (Ventricles of the Brain)

மூளையில், திரவம் நிரம்பிய நான்கு குழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பெருமூளை அரைக்கோளத்திலும் 'C' வடிவில் காணப்படும் இக்குழிகள் முதலாம் மற்றும் இரண்டாம் பக்க வென்ட்ரிக்கிள்கள் எனப்படுகின்றன. இவ்விரண்டையும் பெலுசிடம் சுவர் (Septum pellucidum) எனும் மெல்லிய சவ்வு பிரிக்கிறது. ஒவ்வொரு பக்க வென்ட்ரிக்கிளும், டயன்செஃபலானில் உள்ள குறுகிய மூன்றாவது வென்ட்ரிக்கிளினுள் மன்றோவின் துளை (Foramen of Monro) எனப்படும் இடை வென்ட்ரிகுலார் துளை வழியே திறக்கிறது. மூன்றாவது வென்ட்ரிக்கிள், பின்மூளையில் உள்ள நான்காவது வென்ட்ரிக்கிளுடன், சில்வியஸ் நாளத்தின் (Aqueduct of sylvius) வழியே தொடர்பு கொண்டுள்ளது. வென்ட்ரிக்கிளின் கூரையில் உள்ள இரத்த நுண் நாளங்கள் இணைந்து கோராய்டு வலைப்பின்னலை உருவாக்குகின்றன. இது இரத்தத்திலிருந்து மூளை தண்டுவடத் திரவத்தை (Cerebro spinal fluid-CSF) உற்பத்தி செய்கிறது. மைய நரம்பு மண்டலப்பகுதிகளுக்கு மிதத்தல் தன்மையை இத்திரவம் அளிக்கிறது. மூளை மற்றும் தண்டுவடத்திற்குப் பாதுகாப்பாக அதிர்ச்சி தாங்கியாகவும் இத்திரவம் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மூளை செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன், உணவு ஆகியவற்றைத் தொடர்ந்து கடத்துகிறது. அதே வேளையில் மூளையின் வளர்சிதை மாற்றக் கழிவுகளை இரத்தத்திற்கு அனுப்பும் வேலையையும், மூளை நாளங்களின் உள் அழுத்தத்தை நிலையாகப் பராமரிக்கும் வேலையையும் மூளை தண்டுவடத் திரவம் செய்கிறது.


குறிப்பு

செரட்டோனின் அல்லது நார் எபிநெஃப்ரின் அல்லது இவை இரண்டின் செயல்நிலைக்குறைபாடே மன அழுத்தம் எனப்படும். எதிர்மறை எண்ணங்கள், ஆர்வமின்மை, மகிழ்ச்சியை அனுபவிக்க இயலாமை, தற்கொலை மனப்பான்மை ஆகியவை இக்கோளாறின் பண்புகள் ஆகும். மன அழுத்த எதிர் மருந்துகள் மேற்கூறிய நரம்புணர்வு கடத்திகளின் செறிவை அதிகப்படுத்தும். எனவே, மன அழுத்தம் குணப்படுத்தக் கூடியதேஆகும்.


தண்டுவடம் (Spinal Cord)

தண்டுவடம் என்பது நீண்ட மெலிந்த உருளை போன்ற அமைப்புடைய நரம்புத்திசுவாகும். இது முதுகெலும்புத் தொடரினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மூளையைப் போலவே மூன்று உறைகளால் சூழப்பட்டுள்ளது. தண்டு வடம் மூளைத்தண்டில் தொடங்கி முதுகெலும்புத் தொடரின் கால்வாயின் வழியாக முதலாவது அல்லது இரண்டாவது இடுப்பு முள்ளெலும்பு வரை நீண்டு காணப்படுகிறது. மீதமுள்ள தண்டுவட நரம்புகளின் வேர்கள், முதுகெலும்புத் தொடரிலிருந்து வெளியேற ஏதுவாக மிகவும் நீண்டு அமைந்துள்ளன. இவ்வாறு வெளிவரும் நரம்புவேர்கள் தடித்த கற்றையாக முதுகெலும்புக் கால்வாயின் பின் பகுதியில் காணப்படுகின்றன. இது குதிரை வால்போன்று தோற்றமளிப்பதால் இவை குதிரை வால் கற்றை (Cauda equina) என்று அழைக்கப்படுகிறது.

குறுக்குவெட்டுத்தோற்றத்தில், (படம் 10.11) தண்டுவடத்தின் முன்பகுதியில் ஒரு மையப் பிளவையும் பின்பகுதியில் ஒரு சல்கஸ் எனும் சிறிய பிளவையும் கொண்டுள்ளது. சிறு சிறு வேறுபாடுகளிருப்பினும் பொதுவாகக் குறுக்குவெட்டுத்தோற்றத்தில் தண்டுவடத்தின் எல்லாப் பகுதிகளும் ஒரே தன்மையுடையது. மூளையைப் போல் இல்லாமல் தண்டு வடத்தின் உட்புறம் வண்ணத்துப் பூச்சி வடிவப் பகுதி சாம்பல் பகுதியினாலும், அதைச்சுற்றிலும் காணப்படும் வெளிப்புறம் வெள்ளை பகுதியினாலும் ஆக்கப்பட்டுள்ளது. நியூரான்களின் உடல்பகுதி, அவற்றின் டென்டிரைட்டுகள், இடைநியூரான்கள் மற்றும் கிளியால் செல்கள் ஆகியவை சாம்பல் பகுதியில் காணப்படுகின்றன. வெள்ளைப் பகுதியில், நரம்பிழை கற்றைகள் மட்டுமேயுள்ளன. சாம்பல் நிறப்பகுதியின் மையத்தில் உள்ள கால்வாய் மூளைத்தண்டுவட திரவத்தால் நிரம்பியுள்ளது. சாம்பல்பகுதியின் ஒவ்வொரு அரைப்பகுதியையும் முதுகுப்புறக் கொம்புப்பகுதி, வயிற்றுப்புறக் கொம்புப்பகுதி மற்றும் பக்கவாட்டுக் கொம்புப்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதுகுப்புற கொம்பு பகுதியில் இடைநியூரான்களின் செல் உடல் காணப்படுகிறது. இதனுடன் உட்செல் உணர்பி நரம்புகள் இணைகின்றன. வயிற்றுப்புறக்கொம்பு பகுதி எலும்புத்தசையுடன் இணையும் வெளிச்செல் இயக்கு நியூரான்களின் செல் உடலைக் கொண்டுள்ளது. இதயம், மென்தசைகள் மற்றும் நாளமுள்ள சுரப்பிகள் ஆகியவற்றுக்குச் செல்லும் தானியங்கி நரம்பிழைகளின் செல் உடல் பக்க வாட்டு கொம்புப் பகுதியில் தோன்றுகின்றன. வெள்ளைப்பகுதியில் உள்ள நரம்பிழைகள் இருவகையான கற்றைகளைத் தோற்றுவிக்கின்றன. அவை, உணர்ச்சி தூண்டல்களை மூளைக்கு எடுத்துச் செல்லும் மேல் நோக்கு கற்றைகள் மற்றும் மூளையிலிருந்து, தண்டுவடத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நரம்புகளுக்கான இயக்கத் தூண்டல்களைக் கொண்டுவரும் கீழ் நோக்கு கற்றைகள் ஆகும். தண்டுவடம், இரு இடங்களில் சற்றே அகன்று காணப்படுகிறது. ஒன்று கழுத்துப்பகுதியிலும் மற்றொன்று லம்பார்சாக்ரல் பகுதியிலும் அமைந்துள்ளன. கழுத்துப்பகுதியில் உள்ள அகன்ற பகுதி, கைகளையும் லம்பார்சாக்ரல் பகுதியில் உள்ள அகன்ற பகுதி, கால் பகுதிகளையும் கட்டுப்படுத்துகின்றன.


11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination : Central neural system (CNS) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : மைய நரம்புமண்டலம் (Central Nervous System - CNS) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு