செவ்வியல் உலகம் | வரலாறு - கிழக்கு ஆசியாவில் பேரரசு உருவாக்கம் - சீனா | 9th Social Science : History: The Classical World
கிழக்கு ஆசியாவில் பேரரசு உருவாக்கம் - சீனா
வாங்செங், பரவலாக ஷிகுவாங்தி (முதல் பேரரசர் என்று பொருள்) என அறியப்பட்டவர் சீனச் சிற்றரசுகளிடையே நடைபெற்ற போர்களை முடிவுக்குக் கொண்டுவந்தார். பிராந்திய அரசுகளை அடக்கி ஒடுக்கி ஒரு வலிமையான நடுவண் அரசை நிறுவினார். இருந்தபோதிலும் ஏனைய பண்பாடுகளில் இருந்ததைப் போலல்லாமல் சீனாவில் விவசாயிகளின் எழுச்சிமிக்க போராட்டங்கள் மீண்டும் மீண்டும் நடைபெற்றன. இப்போராட்டங்களே சின் வம்சத்தின் ஆட்சியை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றன.
லீயு –
பங் என்பவரால் நிறுவப்பட்ட ஹன் அரச வம்சம் (கி.மு.
(பொ.ஆ.மு) 206 - கி.பி.
(பொ.ஆ) 220) 400 ஆண்டுகள் செழித்தோங்கியது. அவர்களின் தலைநகர் சாங்-அன் ஆகும். இம்வம்சத்தின் புகழ்பெற்ற வலிமை வாய்ந்த அரசர் வு-தை என்பவராவார். இவருடைய தளபதிகள் வடபகுதிகளில் ஹுணர்களை துரத்துவதில் வெற்றி பெற்றனர். இதன் விளைவாக ஹன் பேரரசு மீண்டும் ஒருமுறை பட்டு வணிக வழித்தடத்தை வணிகத்திற்காக திறந்துவிட்டது. பெருமளவிலான ஏற்றுமதிப் பண்டங்கள்,
முக்கியமாகப் பட்டு, ரோமப் பேரரசை சென்றடைந்தன.
பட்டு வழித்தடம் அல்லது பட்டுப்பாதை:
சீனாவிலிருந்து ஆசியா மைனர் மற்றும் இந்தியா வரையிலான வணிக வழித்தடம், பட்டுப்பாதை பட்டுச் சாலை பட்டு வழித்தடம் என்று அறியப்படுகிறது. இது சீனாவை மேலை நாடுகளோடு இணைக்கின்றது. இப்பாதைவழியாக இருபெரும் நாகரிகங்களானசீனா மற்றும் ரோம் ஆகியவற்றுக்கிடையே பண்டங்களும், கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பட்டு மேற்கு நோக்கிச் செல்ல, கம்பளி, தங்கம், வெள்ளி ஆகியன கிழக்கு நோக்கிச் சென்றன. சீனா பௌத்தத்தை இந்தியாவிலிருந்து இவ்வழியின் மூலமே பெற்றது.
வட பகுதியில் பல முரட்டுத்தனமான தங்களுக்குள் பகைமை கொண்ட ஆளும் வகுப்பினரின் கைவினைஞர்களும், கால்நடை மேய்ப்பர்களும் குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், குதிரையில் பயணிப்போர் பாதங்களை வைத்துக் கொள்வதற்கான அங்கவடி, போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல், மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றிற்கான தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தனர். கிறித்துவ சகாப்த துவக்கத்தில் இவர்களது புதிய தொழில் நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும், செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.
ஹன்வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு வருகை தந்தது. பௌத்தத்தோடு சேர்ந்து சீனாவுக்கு வந்த இந்தியக் கலைகளின் செல்வாக்கு அங்கிருந்து கொரியாவில் பரவி பின்னர் ஜப்பானிலும் பரவியது. இக்காலத்தைச் சேர்ந்த சில பௌத்தக் கலைகளில் ஹெலினிக் கலைப் பாணியின் தாக்கத்தையும் காண முடிகிறது.
மிகப்பெரும் நிலப்பிரபுக்களை கட்டுக்குள் வைத்திருப்பதே மிகப்பெரிய சிரமமான பிரச்சனை என்பதை ஹன் வம்ச அரசர்கள் உணர்ந்தனர். சீனா ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர் ஒரு சில பத்தாண்டுகள் கழிந்தவுடன் சீனாவின் வடபகுதிகளில் உள்நாட்டுப்போர் வெடித்து போட்டி அரசுகள் உருவாயின. பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் விட்டு வெளியேறி யாங்சி மற்றும் அதற்கு அப்பாலுள்ள பகுதிகளுக்குத் தப்பியோடினர். ஹன் வம்ச ஆட்சிக்குப் பிறகு நாடு முழுவதும் அரசியல் உறுதியற்ற தன்மை நிலவியது.