செவ்வியல் உலகம் | வரலாறு - கிறித்தவத்தின் எழுச்சி | 9th Social Science : History: The Classical World
கிறித்தவத்தின் எழுச்சி
டேவிட் மற்றும் சாலமன் ஆகியோரின் ஆட்சியின்போது ஒரு குறுகிய கால புகழுக்குப்பின், யூத இனமக்கள் பெரும்வீழ்ச்சியை சந்தித்து உச்சகட்ட துயரங்களை அனுபவித்தனர். ரோமானியப் பேரரசின் பல பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் பரவியிருந்த அவர்கள்,
தங்களின் பழங்காலப் பெருமையை மீட்டுத்தர ஒரு மீட்பர் வருகை தருவார் என நம்பினர். தொடக்கத்தில் அவர்கள் ஏசுவின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஏசு பணம் படைத்தோரையும், நயவஞ்சகர்களையும் எதிர்த்தார். சில நடைமுறைகளையும் சடங்குகளையும் கண்டனம் செய்தார். சமய குருமார்கள் இப்போக்கை விரும்பவில்லை என்பதால் அவர்கள் ஏசுவைப் பிடித்து ரோமானிய ஆளுநர் போன்டியஸ்பிலாத்துவிடம் ஒப்படைத்தனர். ரோமானிய ஆட்சியாளர்கள் ஏசுவை ஒரு அரசியல் கிளர்ச்சியாளராய்க் கருதியதால் அவர் விசாரணை செய்யப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.
ஏசு சிலுவையிலறைந்து கொல்லப்பட்டபின் புனித பால் கிறித்தவமதக் கொள்கைகளைப் பரப்பத் தொடங்கினார். பால் தனது முயற்சியில் வெற்றி பெற்றார். கிறித்தவம் படிப்படியாகப் பரவியது. ரோமானியர்கள் கிறித்தவ மதத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் பேரரசருடைய உருவச்சிலைக்கு கிறித்தவர்கள் மரியாதை செய்ய மறுத்தது,
ஓர் அரச துரோகமாகப் பார்க்கப்பட்டது.
புனித சோபியா ஆலயம்
புனித சோபியா ஆலயம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் - இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகும். அக்கால ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான இத்தேவாலயம் அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்கு பெயர் பெற்றதாகும். கான்ஸ்டாண்டிநோபிள் நகரை உதுமானிய துருக்கியர் கைப்பற்றியபோது இத்தேவாலயம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.
இது கிறித்தவர்களை துன்புறுத்துவதற்கு வழி வகுத்தது. அவர்கள் சிங்கங்களின் முன்பாக வீசப்பட்டார்கள். இருந்தபோதிலும் ரோமானியப் பேரரசு கிறித்தவர்களை ஒடுக்குவதில் வெற்றி பெறவில்லை . பின்னர் ரோமானியப் பேரரசர்களின் ஒருவரான கான்ஸ்டன்டைன் கிறித்தவராக மாறியதால் கிறித்தவம் பேரரசின் அரசு மதமாயிற்று.