பொருளியல் - இந்தியாவில் சுற்றுச்சூழல் கொள்கைகள் | 9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability
இந்தியாவில் சுற்றுச்சூழல் கொள்கைகள்
இந்தியா தன் சுற்றுச்சூழல் கொள்கைகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது. காற்று நீர் மாசுபாடு கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைப் பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா குறைந்த வளங்களுடன் பொருளாதார மேம்பாட்டை அடைய பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நிலையற்ற காலநிலை குறைந்த வளங்கள், வெளிகாரணிகள் போன்றவற்றை எதிர்கொண்டு அணுகுமுறைகளில் மாற்றம் செய்து இந்தியாதனது பாதையில் சவால்களைச் சந்தித்து நிலையான மேம்பாட்டை அடைந்துள்ளது.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி,
நடைமுறைப்படுத்த உத்திரவிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51A
(g) காடுகள்,
ஏரிகள், ஆறுகள் மற்றும் வன உயிர்கள் மற்றும் இயற்கைச் சூழலைப் பேணவும், மேம்படுத்தவும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளனர் என்று வலியுறுத்துகிறது.
நாட்டின் பொருளாதார மேம்பாடே வாழ்க்கைத் தரத்தை நிர்ணயம் செய்கிறது. இதன் பொருள் மக்களுக்கு அதிக வருமானம், திறன் மிக்க கல்வி, சிறந்த சுகாதாரம், ஊட்டச்சத்து உணவு, வறுமையற்ற நிலை மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதாகும். இதற்கான சட்டங்களை உருவாக்குவதே இந்தியாவின் சுற்றுச் சூழல் கொள்கைகள் ஆகும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி
தமிழ்நாடு குறைந்த காலகட்டத்துக்குள் மிக விரைவான வளர்ச்சியை எட்டிய சில மாநிலங்களுள் ஒன்று ஆகும்.
வறுமை, அடிப்படை வசதி, சமத்துவமின்மை போன்ற மிக மோசமான நிலையிலிருந்து மிக வேகமாகத் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது.
தற்காலத்தில் தமிழ்நாடு துணிச்சலான சமூகநலத் திட்டங்களை முன்னெடுத்தது.
அனைத்துத் பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கும் திட்டம், சுகாதார மையங்கள், சாலை வசதிகள், பொதுப்போக்குவரத்து குடிநீர் வசதி, மின் இணைப்பு வழங்கல் போன்றப் பல திட்டங்களைக் குறிப்பிடலாம்.
பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் இன்று சிறப்பான பொதுச் சேவைகள் உள்ளது.
அந்தச் சேவைகளில் பெரும்பாலானவை பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.
வளர்ச்சிப் பாதையை பொறுத்தவரை தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களிடையே பொதுவான ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
இறுதியாக ஒரு முக்கியமான ஒன்று மனிதத் திறன்களைப் பயன்படுத்தாமல் இந்த விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட முயன்ற பெரும்பாலான இந்திய மாநிலங்களைவிட மனிதத் திறன்களை பயன்படுத்தியதமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகமாகும் வறுமைநிலையும் பெரும்பாலான மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் குறைவாகும் பொருளாதார வளர்ச்சியானது சமூகநலத் திட்டங்களை சாத்தியப்படுத்திப் பொருளாதார வளர்ச்சியும் மக்கள் ஆதரவும் ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல்படுவதே முக்கியமான காரணம் ஆகும்.
ஆதாரம்
: An Uncertain Glory : India and Its Contradictions புத்தகத்திலிருந்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென்
மீள்பார்வை
● மேம்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரின் வளர்ச்சியைக் குறிக்கிறது.
● பொருளாதார மேம்பாடு என்பது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி..
● நிகரநாட்டு உற்பத்தி, தலா வருமானம், வாங்கும் திறன் சமநிலை, மனிதவளர்ச்சிக் குறியீடு ஆகியவை பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள்.
● எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளங்கள் அவசியமாகும்.
● நிலையான பொருளாதார மேம்பாடு என்பது தற்போதுள்ள சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்றத்தைச் சேதப்படுத்தாமல் செயல்பட வேண்டும். எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
● வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம்,
1972 வன விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.)
● அனல் மின் நிலையம் சூழலை மாசுபடுத்தும் அதிக அளவு கார்பன்- டை ஆக்சைடை வெளியேற்றிச் சூழலை மாசுபடுத்துகிறது.