பொருளியல் - இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | 9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu
அலகு 2
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
கற்றல் நோக்கங்கள்
❖ இந்தியாவில் வேலைவாய்ப்பு கட்டமைப்பை அறிந்து கொள்ளல்
❖ ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளைப் பற்றி புரிந்து கொள்ளல்
❖ பொதுத்துறை மற்றும் தனியார் துறை இடையில் உள்ள வேறுபாட்டினைப் புரிந்து கொள்ளல்
❖ மாறிவரும் வேலை வாய்ப்பு முறையினைப் புரிந்து கொள்ளல்
❖ கள ஆய்வு முறைப் பற்றி அறிந்து கொள்ளல்
அறிமுகம்
உணவு உடை, இருப்பிடம் ஆகியவை ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படைத் தேவைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தற்போதைய உலகில் அந்தப்பட்டியலில் வேலைவாய்ப்பு என்ற ஒன்றையும் சேர்க்கப்பட வேண்டியது முக்கியம். இவ்வுலகில் வாழ்வதற்காக வருவாய் ஈட்ட நம் அனைவருக்கும் வேலை அவசியம். பொருளியல் செயல்பாடுகளில் மேல்நிலையில் அலுவலர்களாகவும் மற்றும் கீழ்நிலையில் தொழிலாளர்களாகவும் பங்குபெறுவோர் ஊழியர் எனப்படுவர். இந்த ஊழியர்களைப் பணியமர்த்தி அவர்களின் பணிக்கு ஏற்ப ஊதியம் தருவோர்,
பணியமர்த்துவோர் என்று குறிப்பிடப்படுவர்.
உழைப்பாளர் குழு என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர். உழைப்பாளர் குழுவைக் கணக்கிடுவதில் 15 முதல் 60 வயது வரையிலும் உள்ளவர்களை நாம் எடுத்துக் கொள்கிறோம். 15 வயதுக்குக் குறைந்தவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுகின்றனர். 60 வயதைக் கடந்தவர்கள், உற்பத்தி சார்ந்த வேலையை மேற்கொள்வதற்கு உடல் ரீதியாகத் தகுதியானவர்கள் அல்ல என்பதால் அவர்கள் உடல் உழைப்பைச் செய்ய முடியாது என விலக்கப்படுகின்றனர். மக்கள் தொகையில் பெரும்பகுதி குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் இருந்தால் உழைப்பாளர் குழுவின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும், இதனால் நாட்டு முன்னேற்றம் மெதுவாக நடைபெறும். மேலும், குறைந்த உழைப்பாளர்கள் குழுவானது உழைப்பாளர் அல்லாத பெரிய குழுக்களுக்குச் சிறிய தேசிய உற்பத்தியிலிருந்து உணவளித்துப் பராமரிக்க வேண்டியிருக்கும்.