கணக்கு - வடிவியல் | 9th Maths : UNIT 4 : Geometry
அலகு − 4
வடிவியல்
“கவிதையைப் போலவே, வடிவியலிலும் அகத்தூண்டல் அவசியமாகிறது" – அலெக்ஸாண்டர் புஸ்கின்
தேல்ஸ் (Thales) கிரேக்க நகரமாகிய மிலிடஸில் பிறந்தார். அவர் வடிவியலில் குறிப்பாக முக்கோணங்களின் அறிமுறை மற்றும் செய்முறை புரிதலுக்காக (Theoretical
and practical understanding) நன்கு
அறியப்பட்டவர். இவர் பிரமிடுகளின் உயரத்தைக் காணவும், கடற்கரைக்கும் கப்பலுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் கணக்கிடவும் வடிவியலைப் பயன்படுத்தினார். கிரேக்க நாட்டின் ஏழு ஞானிகள் அல்லது ஏழு துறவிகளில் ஒருவராக விளங்கினார். மேற்கத்திய பண்பாட்டின் முதல் தத்துவ மேதையாக மற்றவர்களால் அவர் மதிக்கப்பட்டார்
தேல்ஸ் (கி.மு(பொ.ஆ.மு) 624 −546)
கற்றல் விளைவுகள்
• நேரிய கோணச் சோடிகள் மற்றும் குத்தெதிர்க் கோணங்களின் மீதான தேற்றங்களைப் புரிந்துகொள்ளுதல்.
• முக்கோணங்களின் கோணங்களின் கூடுதல் பண்பைப் புரிந்துகொள்ளுதல்.
• நாற்கரத்தின் பண்புகளைப் புரிந்துகொண்டு கணக்குகளைத் தீர்க்க அவற்றைப் பயன்படுத்துதல்.
• வட்டத்தின் நாண்கள் மற்றும் வட்ட விற்கள் தாங்கும் கோணங்கள் மீதான தேற்றங்களைப் புரிந்துகொள்ளுதல், விளக்குதல் மற்றும் பயன்படுத்துதல்.
• வட்ட நாற்கரத்தின் மீதான தேற்றங்களைப் புரிந்துகொள்ளுதல், விளக்குதல் மற்றும் பயன்படுத்துதல்.
• முக்கோணத்தின் நடுக்கோடுகள், செங்கோடுகள், சுற்றுவட்டம் மற்றும் உள்வட்டம் வரைந்து அவற்றின் மையங்களைக் குறித்தல்.
அறிமுகம்
வடிவியலில் நாம் வடிவங்களைப்பற்றி படிக்கின்றோம் ஆனால் அவற்றில் படிக்க என்ன இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். நாம் வடிவங்களை வரைகின்றோம், ஒப்பிடுகின்றோம் மேலும் அளக்கின்றோம். வடிவங்களில் நாம் அளப்பது எதை?
கீழ்க்காணும் வேறுபட்ட சில வடிவங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
இரண்டு வளைவரைகள் வடிவத்தை உருவாக்குகின்றது. ஒன்று ஒரு பகுதியைச் சூழ்ந்து அடைபட்ட வளைவரை, மற்றொன்று திறந்த வளைவரை. நாம் ஒரு கயிற்றைக் (அல்லது கம்பியைக்) கொண்டு திறந்த வளைவரையின் நீளத்தை அளக்கலாம். வளைவரையில் அடைபட்ட பகுதியின் எல்லையினை அளக்கலாம். இவற்றை விட நேர்க்கோடுகளை அளவுகோலினால் அளப்பது மிகவும் எளிதல்லவா? கீழ்க்காணும் இரண்டு வடிவங்களைக் கவனிக்க.
நாம் இப்பொழுது நேர்க்கோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அடைபட்ட வடிவங்களை மட்டும் கவனத்தில் கொள்வோம். இவற்றில் இருந்து பல சுவையான கருத்துகளைப் பெறப்போகிறோம். படம் 4.2 திறந்த வளைவான வடிவத்தைக் குறிக்கிறது.
நாம் இங்கு வடிவங்களை வரைதல், ஒப்பீடு செய்தல் மற்றும் அளத்தல் என்பனவற்றுடன், மேலும் பல கருத்துக்களை அறியப் போகிறோம். அதற்காக நாம் அவற்றை விளக்கவேண்டும். நாம் இந்த வடிவங்களை எவ்வாறு விளக்குவது? (படம் 4.3ஐப் பார்க்க.)
அவை நேர்க்கோடுகளால் உருவாக்கப்பட்ட மூடிய வடிவம்.