தோட்டக்கலை (Horticulture)
தோட்டக்கலை என்பது வேளாண்மையின் ஒரு பிரிவு ஆகும். இது கனிகள், காய்கறிகள் மற்றும் அழகுத் தாவரங்களை வளர்த்தலுடன் தொடர்புடையது. தோட்டம் எனப் பொருள்படும் 'ஹார்டஸ்' மற்றும் வளர்ப்பு எனப் பொருள்படும் 'கலரே' என்ற லத்தீன் வார்த்தைகளிலிருந்து இது உருவானதாகும். தோட்டக்கலை என்பது அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். மேம்படுத்தப்பட்ட வளர்ச்சி,
தரம் மற்றும் மகசூல் கொண்ட, அதே வேளையில், நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கெதிரான திறனுடைய தாவரங்களை உருவாக்குவதையும் இது உள்ளடக்கியுள்ளது. தோட்டக்கலையில் நான்கு பிரிவுகள் உள்ளன. அவையாவன: பழவியல் (Pomology), காய்கறிப் பண்ணை (Olericulture),
பூந்தோட்டப் பண்ணை (Floriculture)
மற்றும் நிலஅமைவுத் தோட்டங்கள் (Landscape
gardening)
பழவியல் எனப்பொருள்படும் போமாலஜி என்ற வார்த்தையானது,
பழம் எனப் பொருள்படும் 'போமம்', மற்றும் படிப்பு எனப் பொருள்படும் 'லாஜி' ஆகிய லத்தீன் வார்த்தைகளிலிருந்து பெறப்படுகிறது. பழங்களின் தரம்,
உற்பத்தி முறைகள் ஆகியவற்றை முன்னேற்றி மேம்படுத்துவது, உற்பத்திக் காலத்தை முறைப்படுத்துவது மற்றும் உற்பத்திச் செலவைக் குறைப்பது ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது.
காய்கறி வளர்ப்பு என்பது காய்கறித்தாவரங்களை வளர்ப்பது பற்றிய அறிவியல் ஆகும். இது கீழ்க்காணும் வகுப்புகளாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன: சமையலறை அல்லது உணவுத் தோட்டங்கள்,
வணிகத் தோட்டங்கள் மற்றும் செயற்கைக் காய்கறித் தோட்டங்கள்
சமையலறைத் தோட்டங்கள்: இவை, நமக்குத் தேவையான காய்கறிகளை வீட்டைச் சுற்றி சிறிய அளவில் வளர்ப்பதாகும். எ.கா. பீன்ஸ், முட்டைகோஸ், வெண்டைக்காய், தக்காளி, கத்திரிக்காய், கேரட், கீரைகள் மற்றும் பல.
உழவன் செயலி
தகவல் துளி
தமிழ்நாடு அரசு உழவன் செயலி என்ற கைபேசி பயன்பாட்டுச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசு வழங்கும் விவசாய மானியங்கள், விவசாய உபகரணங்கள், பயிர்க் காப்பீட்டுத் தகவல்கள் மற்றும் காலநிலை ஆகியவை பற்றிய தகவல்களைப் பெறமுடியும். மேலும் அரசு மற்றும் தனியார் நிலையங்களில் உள்ள விதை மற்றும் உரங்களின் கையிருப்பைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றது.
வணிகத் தோட்டங்கள்: இவை, சந்தைகளில் விற்பனை செய்யும் நோக்கத்தோடு பெரிய அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் முறையாகும்.
செயல்பாடு 1
விவசாயிகளுக்கான பயிர்க்காப்பீட்டின் முக்கியத் துவத்தினை வகுப்பறையில் விவாதிக்கவும்.
செயற்கைக் காய்கறித் தோட்டங்கள்: இவை கட்டடங்கள், பசுமை வீடுகள், குளிர்சாதனப் பண்ணைகள் மற்ற பிற செயற்கையான சூழ்நிலைகளில் காய்கறிகளை வளர்க்கும் முறையாகும். இது ஒரு அதிதீவிர காய்கறி வளர்ப்பு முறையாகும். எ.கா: முட்டைகோஸ், தக்காளி, கத்தரிக்காய்.
பசுமைவீடு (அ) பாலித்தீன்வீடு: இது ஒளி ஊடுருவக் பொருள்களால் அமைக்கப்பட்ட மேற்கூரையின் கீழ் பயிர்களை வளர்க்கும் முறையாகும். போதிய அளவு வளர்ச்சி மற்றும் உற்பத்தியைப் பெறுவதற்காக,
முற்றிலுமாகவோ அல்லது பகுதியளவோ கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை இங்கு காணப்படுகிறது. இது உலகம் முழுவதும் அதிகமாக பின்பற்றப்படும் விவசாய முறையாகும்.
பசுமை வீட்டின் நன்மைகள்
1. நோயில்லாத் தாவரங்களை தொடர்ச்சியாக உற்பத்தி செய்ய முடியும்.
2.
பயிர்களுக்கு மிகக் குறைந்த அளவு நீரே போதுமானதாகும்.
3.
திறந்தவெளியில் பயிரிடப்படும் பயிர்களைவிட இதன் மகசூல் அதிகமாகும்.
4.
பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு இதில் குறைவு.
5.
சாதகமற்ற சூழ்நிலைகளிலிருந்து தாவரங்களைப் பாதுகாக்கிறது.
இது மலர்களையும், அழகுத் தாவரங்களையும் மலர்ப்பண்ணையில் சாகுபடி செய்யும் முறையாகும். இது பாரம்பரிய மலர்கள்,
மொட்டு விடும் பூக்கள், தரை ஒட்டிய தாவரங்கள், சிற்றிலைகளை உடைய தொடர் தாவரங்கள், மரம், சிறு புற்கள் போன்றவற்றை வளர்ப்பதைப் பற்றியதாகும். இவை அழகிற்காகவும், வாசனை எண்ணெய்கள், மருந்துப் பொருள்கள், ஊட்டச்சத்து மருந்துப்பொருள்கள் போன்ற மதிப்புமிக்க பொருள்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. எ.கா. தோட்டச் செடிவகை மலர்கள் (பெலர்கோனியம்) புஸ்சிலிங்ஸிஸ் (இம்பெய்ஷன்ஸ்) சாமந்தி,
பெட்டூனியா.
தகவல் துணுக்கு
பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) இது இந்திய நடுவண் அரசின் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதி உதவியும், பயிர்க் காப்பீடும் வழங்குகின்றது. இது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
மலரின் பயன்பாடுகள்:
1.
அழகுப்படுத்துவதற்காக பயன்படுகின்றன.
2.
தனிப்பட்ட, மதம் சார்ந்த மற்றும் சடங்கு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
3.
தோட்டங்களுக்கு வண்ணத்தையும் அழகையும் அளிக்கின்றன.
4.
நாட்டின் பொருளாதாரத்தினை உயர்த்துகின்றன.
நில அமைவுத் தோட்டங்கள் என்பவை, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் நிலத்தோற்றங்களை திட்டமிட்டு வடிவமைப்பதைப் பற்றிய பிரிவாகும்.