மனித நரம்பு மண்டலம் (Human Neural System)
மனிதனின் நரம்பு மண்டலத்தை மைய நரம்பு மண்டலம் (Central neural system-CNS ) மற்றும் புற நரம்பு மண்டலம் (Peripheral neural system –PNS) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். நரம்பு தூண்டல்களை கடத்தும் வேலையைச் செய்கிற நியூரான்கள்தான் நரம்பு மண்டலத்தின் அடிப்படைச் செயல் மற்றும் அமைப்பு அலகாகும். நரம்பு சாரா செல்களான நியூரோகிளியல் செல்கள் நரம்புத் திசுக்களுக்கு உறுதுணையாக உள்ளன.
நியூரான்களை,அவை செய்யும் வேலைகளை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. உட்செல் நியூரான்கள் (Afferent Neurons):
உணர்வுறுப்புகள் பெறும் நரம்புத்தூண்டல்களை மைய நரம்பு மண்டலத்திற்குக் கடத்துபவை.
2. வெளிச்செல் நியூரான்கள் (Efferent Neurons):
மைய நரம்பு மண்டத்திலிருந்து இயக்கு தூண்டல்களை செயல்படு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்பவை.
3. இடை நியூரான்கள் (Interneurons) :
உட்செல் மற்றும் வெளிச்செல் நியூரான்களுக்கிடையே, மைய நரம்பு மண்டலத்தில் இணைப்பாக உள்ளவை.
மைய நரம்பு மண்டலத்தில் இணைப்புத் திசுக்கள் ஏதுமில்லை. ஆதலால் நியூரான்களுக்கு இடையேயுள்ள செல் இடைவெளிகளை நியூரோகிளியா செல்கள் நிரப்புகின்றன. சுற்றியுள்ள நியூரான்களுக்கு உணவை அளிப்பது, நினைவாற்றல் நிகழ்வில் பங்கேற்பது, செல் பிரிதல் மற்றும் இழப்பு மீட்டலின் போது சேதமடையும் செல்களைப் புதுப்பிப்பது, மூளையில் காயமேற்படும்போது தொற்றுயிராக வரும் அயல்பொருட்களை விழுங்குவது உள்ளிட்ட பல வேலைகளையும் நியூரோகிளியா செல்கள் செய்கின்றன.
குறிப்பு
மூளையில் ஏற்படும் அநேகப் புற்றுநோய்களுக்கு, கிளியால் செல்களே காரணமாக உள்ளன. ஏனெனில் நரம்பு செல்கள் செல்பகுப்புத் திறன் அற்றவை. ஆனால் கிளியால் செல்கள் தொடர்ந்து பகுப்படையும் திறனைப் பெற்றிருப்பதால் மூளையில் ஏற்படும் கட்டிகளுக்குக் காரணமாக அமைகின்றன.