Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | மைசூர் சுல்தான்களின் எதிர்ப்பு

ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் - மைசூர் சுல்தான்களின் எதிர்ப்பு | 11th History : Chapter 18 : Early Resistance to British Rule

   Posted On :  15.03.2022 09:39 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்

மைசூர் சுல்தான்களின் எதிர்ப்பு

மைசூர், விஜயநகரப் பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக இருந்தது.

மைசூர் சுல்தான்களின் எதிர்ப்பு

 

ஹைதர் அலியின் எழுச்சி

மைசூர், விஜயநகரப் பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக இருந்தது. 1565இல் விஜயநகரப் பேரரசு வீழ்ந்ததற்குப் பிறகு உடையார் வம்சத்தினர் சுதந்திரமான ஆட்சியாளர் ஆயினர். ராஜா உடையார் 1578இல் அரியணை ஏறினார். 1610இல் தலைநகரம் மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு மாற்றப்பட்டது. அப்போதிருந்து உடையார் வம்சத்தினரின் ஆட்சி 1760 வரை தொடர்ந்தது. ஹைதர் அலி அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை உடையார்களின் ஆட்சி நீடித்தது.

ஹைதர் அலியின் தந்தை ஃபதே முகம்மது கோலார் பகுதியின் கோட்டைக் காவற்படைத் தளபதியாக (பௌஜ்தார்) இருந்தார். அவரது இறப்புக்குப் பின் ஹைதர் அலி தன் தலைமைப் பண்புகள் மூலம் படையின் உயர்பதவிகளை விரைவாக அடைந்தார். 1755க்குள் அவர் 100 குதிரைப்படை வீரர்களையும் 2000 காலாட்படை வீரர்களையும் நிர்வகிக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த பொறுப்பைப் பெற்றிருந்தார். மைசூரில் இராணுவத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கினார். மராத்தியர் ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை ஹைதர் மீட்டெடுத்தார். இதற்காக அவர் 'ஃபதே ஹைதர் பகதூர் (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்டம் பெற்றார். 1760இல் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தார். ஆனால் அவர் தனது சொந்த மண்ணில் மராத்தியரால் உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் ஹைதர் அதை வெற்றிகரமாக முறியடித்தார். அதற்குப் பிறகு அவரே நடைமுறையில் மைசூரின் தளவாயாக இருந்து உண்மையான ஆட்சியாளர் ஆனார். 1770இல் மைசூர் அரசர் நஞ்சராஜா நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார். அதில் ஹைதருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியது. இந்த நிகழ்வுக்குப் பிறகு உடையார் வம்ச அரசர்கள் பெயரளவிலான ஆட்சியாளர்களாக ஆயினர். ஹைதரே உண்மையான அரச அதிகாரத்துக்கு உரியவர் ஆனார்.



ஹைதர் அலியும் ஆங்கிலேயரும்

கிழக்கிந்தியக் கம்பெனி திவானி உரிமையைப் பெற்ற (வங்காளம், பீகார், ஒரிசா ஆகியவற்றில் முகலாய அரசுக்குப் பதிலாக வரி வசூலிக்கும் உரிமை) பிறகு, தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளைக் கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டியிருந்தது. கம்பெனி போதுமான வலிமையுடன் இல்லாததால், இந்திய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்து வந்தது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள இடைப்பட்ட நாடுகளை (buffer states) வாரன் ஹேஸ்டிங்ஸ் சுற்றுவேலிக் கொள்கை மூலம் தொடர்ந்து அனுமதித்தார். எனினும் கம்பெனி கர்நாடக அரசியல் விவகாரங்களினால் ஈர்க்கப்பட்டது. நவாப் பதவிக்காகத் தொடர்ச்சியாக நடைபெற்ற மோதல்களே இதற்குக் காரணம். ஆங்கிலேய வணிகர்கள் இதை இந்திய அரசியலில் நேரடியாகத் தலையிடுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதினார்கள். ஆனால் அவர்களின் முயற்சிக்கு ஹைதர் அலி, ஹைதராபாத் நிஜாம் ஆகிய வலிமைமிக்க சக்திகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தன.

முதலாம் மைசூர் போர் 1767 - 69

மூன்றாம் கர்நாடகப் போரில் வங்காளத்திலிருந்து படைகளை வழிநடத்திய கர்னல் ஃபோர்டே 1759இல் மசூலிப்பட்டிணத்தைக் கைப்பற்றினார். இது ஜாலாபத் ஜங் உடனான உடன்படிக்கைக்கு வழிவகுத்தது. அவர்வட சர்க்கார்கள்' என அறியப்படும் கஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசம் ஆனதை முகலாயப் பேரரசர் 1765இல் அலகாபாத் உடன்படிக்கை மூலம் அங்கீகரித்தார். ஆனால் 1766இல் ஆங்கிலேயர் இப்பகுதியைக் கையகப்படுத்திய போது பிரச்சனை தோன்றியது. இந்தப் பகுதிகளை ஆங்கிலேயர் கையகப்படுத்த நிஜாம் அலி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக அவருக்கு எதிரிகளிடமிருந்து ஆபத்து வரும்போது ஆங்கிலேயர் உதவிக்கு வருவார்கள் என்றும் ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வாக்குறுதி மூலம் ஹைதர் அலிக்கு எதிராக நிஜாம் அலிக்கு உதவத் தாங்கள் தயாராக இருப்பதை உணர்த்தினார்கள். ஆங்கிலேயர் பின்னாட்களில் பின்பற்றிய துணைப்படைத்திட்டத்துக்கு இந்நடைமுறை காரணியாக அமைந்தது. நிஜாம் அலி ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டாலும், 1767இல் அவருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டது. எனவே ஆங்கிலேயர் ஹைதருக்கு எதிரான போரை அறிவித்தார்கள். இது முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் அல்லது முதலாம் மைசூர் போர் என அறியப்படுகிறது.

பம்பாயிலிருந்து வந்த ஆங்கிலேயரின் ஒரு படை மேற்குக்கடற்கரையின் மங்களூரையும் அதைச் சுற்றியிருந்த பிற பகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் ஹைதர் இவற்றை மீட்டெடுத்தார். பெங்களூரைக் கைப்பற்ற நினைத்த ஆங்கிலேயரின் முயற்சி வெற்றி பெறவில்லை . 1768இல் ஹைதர் பாராமஹால் (சேலம் மாவட்டம்) மீது திடீர் தாக்குதல் தொடுத்து, கேப்டன் நிக்சனைத் தோற்கடித்துக் கரூரையும் ஈரோட்டையும் கைப்பற்றினார். இதற்கிடையே ஹைதரின் தளபதி ஃபசலுல்லா கான் மதுரையிலும் திருநெல்வேலியிலும் படையை எந்த எதிர்ப்புமின்றி வழிநடத்திச் சென்றார். ஹைதர் தஞ்சாவூருக்கும் அங்கிருந்து கடலூருக்கும் முன்னேறிச் சென்றார். ஆங்கிலேயர் மீதான தாக்குதலை நிறுத்த ஹைதர் விரும்பாவிட்டாலும், மராத்தியர் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சுறுத்தல் அவரை ஆங்கிலேயருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியது. அவருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட சென்னை உடன்படிக்கையில் இருந்த நிபந்தனைகள் வருமாறு: இரு தரப்பும் கைப்பற்றிய பகுதிகளை அவரவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். கரூர் மட்டும் ஹைதரின் வசம் இருக்கும். தங்களைத் தற்காத்துக்கொள்ள நடைபெறும் போர்களில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். இது மராத்தியருக்கு எதிராக ஆங்கிலேயர் உதவுவதற்கு கடமைப்பட்டவர்கள் என்பதையே குறித்தது. ஆனால் ஹைதருக்கும் மராத்தியருக்கும் எதிரான சண்டையின் போது தேவையான நேரத்தில் ஆங்கிலேயரின் உதவி கிடைக்காததால் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினார்.

இரண்டாம் மைசூர் போரும் ஹைதரும் 1780-84

அமெரிக்கச் சுதந்திரப்போருக்குப் பிறகு பிரான்ஸ் அமெரிக்காவுடன் நட்பு உடன்படிக்கை (1778) செய்துகொண்டது. எனவே பிரிட்டன் பிரான்ஸுக்கு எதிரான போரை அறிவித்தது. இதைப் போலவே ஸ்பெயினும் அமெரிக்காவுடன் நட்பு உடன்படிக்கை மேற்கொண்டு, இங்கிலாந்துக்கு எதிராகப் போரில் (1779) இறங்கியபோது இங்கிலாந்து தனிமைப்பட்டது. இந்தியாவிலும் பிரெஞ்சுப்படையின் ஆதரவுடன் நிஜாம் அலியும் மராத்தியரும் கைகோத்துச் செயல்பட்ட போக்கு ஆங்கிலேயருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது. ஹைதர் அலி இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கர்நாடகத்திற்குப் படையெடுத்தார்.

ஹெக்டர் மன்றோ தலைமையிலான படையுடன் சேர்ந்து செயல்பட வேண்டிய கர்னல் பெய்லி ஹைதரின் திடீர்த்தாக்குதலில் கடுமையாகக் காயமுற்றார். இது மன்றோவை சென்னை நோக்கிச் செல்ல வைத்தது. ஹைதர் ஆற்காட்டைக் கைப்பற்றினார் (1780) இந்நிலையில் சென்னை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வந்தவாசிப் போரில் வெற்றிபெற்ற அயர்கூட் மதராஸைக் கடல்வழியே முற்றுகையிட வங்காளத்திலிருந்து அனுப்பப்பட்டார். ஹைதருக்கு எதிராக வெற்றியை ஈட்டிய கூட் புதுச்சேரியை நோக்கி நகர்ந்தார். இதற்கிடையே ஹைதர் தஞ்சாவூர் அரசைத் தன் பிடிக்குள் கொண்டுவந்தார். கூட் பரங்கிப்பேட்டையை (Porto Novo) அடைந்து, ஹைதருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் வெற்றி பெற்றார். ஹைதர் அங்கு நடைபெற்ற மோதலில் ஆங்கிலேயரிடம் பிடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பினார். ஹைதரின் மகன் திப்பு சுல்தான் கர்னல் ப்ரெய்த்வெயிட்டை கும்பகோணம் அருகே தோற்கடித்துச் சிறைப்பிடித்தார். மைசூர் சுல்தானின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஜெனரல் மேத்யூஸ் மங்களூரை நோக்கி ஒரு படையெடுப்பை மேற்கொண்டார். இந்த நடவடிக்கை ஆங்கிலேயர் எதிர்பார்த்தபடி திப்பு சுல்தானைக் கர்நாடகத்தை விட்டு மேற்குக் கடற்கரையை நோக்கி நகர வைத்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹைதரின் மரணம் (1782), அமெரிக்கச் சுதந்திரப் போரின் முடிவில் கையெழுத்தான பாரிஸ் உடன்படிக்கை (1783), நீண்ட நாட்களுக்கு நீடித்த மங்களூர் முற்றுகை ஆகிய நிகழ்வுகள் திப்பு சுல்தானுக்கு எதிரான ஆங்கிலேயரின் நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பதாக இருந்தன. கர்னல் லேங் கரூரையும் திண்டுக்கல்லையும் கைப்பற்றினார். கர்னல் ஃபுல்லர்ட்டன் பாலக்காட்டையும் கோயம்புத்தூரையும் கைப்பற்றினார். அடுத்ததாக ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அவர் முன்னேறி வந்தபோது திப்பு சுல்தான் சமாதானத்துக்கு விருப்பம் தெரிவித்து, முற்றுகையைத் தவிர்த்தார். 1784 மார்ச் மாதத்தில் மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி, இரு தரப்பினரும் அதுவரை வென்ற பகுதிகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் போரில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மூன்றாம் மைசூர் போர் 1790 - 92

இடைப்பட்ட காலத்தில் காரன்வாலிஸ் கவர்னர் ஜெனரல் ஆகப் பொறுப்பேற்றார். அவர் திப்பு சுல்தானைப் பழிவாங்கும் விதத்தில் நடந்துகொண்டார். தெற்கில் இரு மிகப்பெரும் சக்திகளாக விளங்கிய ஹைதராபாத் நிஜாமும் மராத்தியரின் கூட்டமைப்பும் ஆங்கிலேயரின் கூட்டாளிகளாக இதில் செயல்பட்டார்கள். திப்புவுடனான போருக்குத் தேவைப்பட்ட நிதியாதாரங்களையும் கூடவே தன் படைகளையும் ஹைதராபாத் நிஜாம் ஆங்கிலேயருக்கு வழங்கினார். 1782இல் முதல் ஆங்கிலேய - மராத்தியப் போருக்குப் பின் ஆங்கிலேயருடன் சால்பை உடன்படிக்கை செய்துகொண்ட மராத்தியர் ஆங்கிலேயரை ஆதரித்தார்கள். ஆங்கிலேயரின் கை ஓங்கியது.


திப்பு கான்ஸ்டாண்டிநோபிளுக்கும் 1787இல் பாரிஸுக்கும் தூதுக்குழுவை அனுப்பினார். ஆங்கிலேயருக்கு எதிராகத் தன்னை வலுப்படுத்திக்கொள்வதற்காகத் திப்பு இந்த இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டார். பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயி தூதுக்குழுவை நட்புறவுடன் நடத்தினாலும், திப்பு எதிர்பார்த்த ஆதரவு குறித்து வெற்று வாக்குறுதியையே அளித்தார்.

பிரிட்டனுடன் நட்பு பாராட்டிய திருவிதாங்கூர் மீதான திப்புவின் தாக்குதலும் கொடுங்களூரைக் கைப்பற்றியதும் கம்பெனி அரசுடனான போருக்கான அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டன. இவ்வாறு மூன்றாம் ஆங்கிலேய - மைசூர் போர் தொடங்கியது.

கர்னல் ஹார்ட்லி திப்புவின் தளபதி ஹுசைன் அலியைக் கள்ளிக்கோட்டையில் தோற்கடித்தார். இதற்குப் பதிலடியாகத் திப்பு திருவண்ணாமலையைக் கைப்பற்றினார். புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநரின் ஆதரவைப் பெறுவதற்குத் திப்பு எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. காரன்வாலிஸ் தானே வேலூரிலிருந்து படையெடுத்து வந்து, பெங்களூரை அடைந்தார். வழியில் அவர் திப்புவை எதிர்கொள்ள நேர்ந்தது. ஸ்ரீரங்கப்பட்டணம் அருகே திப்பு தோற்கடிக்கப்பட்டார். படையெடுப்பின் போது தேவைப்படும் பொருட்களின் பற்றாக்குறையால் காரன்வாலிஸ் பின்வாங்க வேண்டியிருந்தது. இந்தத் தருணத்தில் மராத்தியர் ஆங்கிலேயருக்குத் தேவையான பொருட்களை வழங்கினார்கள். கூடுதல் வலிமை பெற்ற ஆங்கிலேயப்படை ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டது. அதன் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திப்பு அமைதி உடன்படிக்கைக்கு அழைப்பு விடுத்தார். உடன்படிக்கையில் கார்ன்வாலிஸ் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.





ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி, திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும்; போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்; அவருடைய மகன்களில் இருவரைப் பிணைக்கைதிகளாக அனுப்பி வைக்க வேண்டும். கூட்டணியாளரிடையே திப்புவிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளும் இழப்பீட்டுத்தொகையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஆங்கிலேயர் மலபார், திண்டுக்கல், பாராமஹால் ஆகிய பகுதிகளைப் பெற்றார்கள். திப்பு குடகுப் பகுதியை இழந்தார். அதன் அரசர் ஆங்கிலேயருக்குக் கீழ்ப்படிய வேண்டிய சிற்றரசர் ஆனார். திப்புவின் அதிகாரம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டது. சென்னையில் பிணைக்கைதிகளாகயிருந்த திப்புவின் மகன்கள் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு 1794 ஆம் ஆண்டு மே 29 அன்று திருப்பியனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த உடன்படிக்கை மூலம் ஏற்பட்ட அவமானத்தையும் பொருளாதார இழப்பையும் திப்புவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மைசூர் அரசர் ஒன்பதாம் சாமராஜ் 1796இல் இறந்தார். அடுத்த அரசரை நியமிக்கும் முறையான வழக்கத்தைத் திப்பு பின்பற்றவில்லை. அவர் இந்தத் தீர்மானத்துக்கு வந்த அதே நேரத்தில், பிரெஞ்சு காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மொரீஷியஸின் கவர்னர் மாலரிக் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். பிரான்ஸிடமிருந்து உதவி கிடைத்த பிறகு திப்பு ஆங்கிலேயர் மீதான போர் குறித்து அறிவிப்பார் என்பதே மாலரிக்கின் அறிவிப்பாகும். திப்பு 1798 ஜுலையில் பிரான்சு ஆட்சியை நிர்வகித்த இயக்குநரகத்துடனும் அதற்குப் பிறகு அங்கு ஆட்சியைப் பிடித்த நெப்போலியனுடனும் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள், அவர் வெல்லெஸ்லியுடனான கடிதத்தொடர்பில் காட்டிய நழுவல் ஆகியவை வெல்லெஸ்லியை மீண்டும் திப்புவுக்கு எதிரான போரை அறிவிக்கச் செய்தது.

நான்காம் மைசூர் போர் 1799

திப்பு தனது படையையும் நிதியாதாரங்களையும் வலுப்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். 1796இல் பாரிஸுக்கு மீண்டும் தூதர்களை அனுப்பினார். 1797இல் வருகை புரிந்த பிரெஞ்சுத் தூதுக்குழுவானது மொரிஷியஸிலிருந்து பிரெஞ்சு ஆதரவு கொடுக்கப்படும் என உறுதியளித்தது. பிரான்சில் இருப்பதைப் போல ஸ்ரீரங்கப்பட்டணத்திலும் ஜேக்கோபியர் கழகம் தொடங்கப்பட்டது. மைசூர் சுல்தானுக்கும் பிரெஞ்சு அரசுக்குமான நல்லுறவைத் தெரிவிக்கும் விதத்தில் பிரெஞ்சு குடியரசின் கொடி ஏற்றப்பட்டது.

பிரான்சுடன் திப்பு ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியால் கோபமுற்ற புதிய கவர்னர் ஜெனரலான வெல்லெஸ்லி துணைப்படைத்திட்டத்தின் கீழ் மைசூரில் ஆங்கிலேயப் படை ஒன்றை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். திப்பு இதை ஏற்கவில்லை. ஆங்கிலேயர் நான்காம் ஆங்கிலேய - மைசூர் போரை 1799 இல் அறிவித்தனர். ஜெனரல் டேவிட் பெயர்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்துக் கைப்பற்றினார். அமைதி உடன்படிக்கைக்கான திப்புவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இறுதி மோதலில் காயமுற்ற திப்பு ஓர் ஐரோப்பியப் படைவீரனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

திப்புவை அகற்றியதும் உடையார் வம்சத்தினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதும் தென்னிந்தியாவில் கம்பெனி ஆட்சியின் உண்மையான தொடக்கமாக அமைந்தன. திப்புவின் மகன்கள் முதலில் வேலூரில் சிறைவைக்கப்பட்டார்கள். 1806இல் வேலூர் கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார்கள். இவ்வாறு ஆங்கிலேயருக்கு எதிரான மைசூர் சுல்தான்களின் வீரம் செறிந்த மோதல்கள் முடிவுக்கு வந்தன.

Tags : Early Resistance to British Rule ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்.
11th History : Chapter 18 : Early Resistance to British Rule : Mysore Sultans and their Resistance Early Resistance to British Rule in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் : மைசூர் சுல்தான்களின் எதிர்ப்பு - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்