அறிமுகம் - செவ்வியல் உலகம் | 9th Social Science : History: The Classical World
பாடம் 5
செவ்வியல் உலகம்
கற்றல் நோக்கங்கள்
❖ கிரேக்கத்தின் பழம் பெருமை மிக்க நாகரிகம் குறித்த அறிவைப் பெறுதல்
❖ ஏதென்ஸ் நகர மக்களாட்சியையும் பெரிகிளிஸின் காலத்தையும் தெரிந்து கொள்வது
❖ சிறு நகரமான ரோம் எவ்வாறு ஒரு குடியரசாகவும், பின்னர் பேரரசாகவும் உருவானது என்பதைப் புரிந்து கொள்ளுதல்
❖ உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை அறிந்து கொள்ளுதல்
❖ செவ்வியல் கால சீனாவின் சாதனைகளைக் கற்றல்
❖ கிறித்தவ மதத்தின் தோற்றத்தையும் அது கீழை ரோமானியப் பேரரசில் பரவியதையும் கற்பது
அறிமுகம்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் உலக வரலாற்றின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியிருந்தபோது யூரேசியா என்றழைக்கப்பட்ட ஆசிய ஐரோப்பியக் கண்டங்களின் பெருநிலப்பரப்பில் பல நாகரிகங்கள் மலர்ந்தன. அவற்றில் சில விரைவில் செவ்வியல் நிலையை அடைந்து புகழ் பெற்றன. இச்செவ்வியல் காலத்தில் ரோமிலிருந்து பாரசீகம் அங்கிருந்து பெஷாவர் வரை என சங்கிலித்தொடர் போன்று பல பேரரசுகள் உருவாகத் தொடங்கின. நாகரிகங்களின் விரிவாக்கம் புவியியல் அடிப்படையிலான இடைவெளிகளை அகற்றி,
பிரதேசங்களுக்கிடையே வணிக உறவுகளும் பண்பாட்டுப் பரிமாற்றங்களும் நடைபெற வழிவகுத்தன. நாளடைவில் இவ்வுறவுகள்,
சிந்தனை, தொழில்நுட்பம் கலைகள் ஆகியவற்றின் பரிமாற்றங்களுக்கு இட்டுச் சென்றன. இப்பின்னணியில்தான் பௌத்தம் தொடங்கி,
கிறித்தவம், இஸ்லாம் வரையிலான உலகின் மிகப்பெரிய மதங்கள் பரவியதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பண்டைய கிரீஸ் மற்றும் ரோமை உள்ளடக்கியதே செவ்வியல் உலகமென்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த பண்டையகிரேக்க, ரோமானிய நாகரிகங்களை உள்ளடக்கிய காலமே செவ்வியல் காலமென்றும், கிரேக்கோ-ரோமானிய கால உலகமென்றும் அறியப்படுகின்றது.