அலகு - V
பாடம் - 13
வணிக விலங்கியலின்போக்குகள்
பாட உள்ளடக்கம்
13.1 விலங்கியலின் எதிர்கால வாய்ப்புகள்
13.2 மண்புழு வளர்ப்பு
13.3 பட்டுப்புழு வளர்ப்பு
13.4 தேனீ வளர்ப்பு
13.5 அரக்குப் பூச்சி வளர்ப்பு
13.6 நீர் உயிரி – பயிர் வளர்ப்பு
13.7 நீர் வாழ் உயிரி வளர்ப்பு
13.8 விலங்கு வளர்ப்பு மற்றும் மேலாண்மை
பசித்தவனுக்கு மீனைக் கொடுத்தால் அது அவனுக்கு ஒரு நாள் உணவு; மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அவனுக்கு வாழ்நாளெல்லாம் உணவு.
கற்றலின் நோக்கம்:
• பல துறைகளிலும் உள்ள சுய வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துதல்.
• மண்புழு, தேனீ, பட்டுப்புழு, அரக்குப்பூச்சி, மீன்கள், கால்நடைகள் மற்றும் பறவைகளின் பொருளாதார முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளச் செய்தல்.
• உயிரினங்களின் வளர்ப்புக்குத் தேவையான பலவகை உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல்.
• வளர்ப்பு முறைகளை மேலாண்மை செய்ய கற்றல்.
விலங்குகளைப் பற்றிப் படிக்கும் அறிவியல் விலங்கியல் ஆகும். விலங்கியலை தன் வாழ்வியல் பணியாக ஒருவன் ஏற்க விரும்பினால், அவன் எதிரே விலங்கியலின் பல வகைப் பிரிவுகள் வேலை வாய்ப்புகளுடன் காத்திருக்கின்றன. உடலின் செயல்பாடுகளைப் பற்றி படிக்கும் உடற்செயலியலாளர்கள், விலங்கினங்களுக்குப் பெயரிட்டு வகைப்படுத்தும் வகைபாட்டியலாளர்கள், விலங்குகளின் கருவளர்ச்சி நிலைகளைப் பற்றி படிக்கும் கருவியலாளர்கள் என பல வகையினர் உள்ளனர். பலவித சிறப்புப் புலங்களோடு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகளை விலங்கியல் கற்பதன் மூலம் ஒருவர் பெறலாம். இவ்வாறு ஒருவர் விலங்கியல் பிரிவுகளில் பெறும் வேலைவாய்ப்பானது விலங்குலக மேலாண்மை மட்டுமின்றி அதைப்பாதுகாக்கும் பொறுப்பிலும் இருப்பதை அவருக்கு உணர்த்தும். ஒரு விலங்கியலாளர் தனது பணி நிமித்தமாக பல இடங்களுக்கும் பயணிக்கலாம். தொலைக்காட்சி சேனல்களான நேஷனல் ஜியாகிராபிக், அனிமல் பிளானட் மற்றும் டிஸ்கவரி போன்றவற்றில், ஆராய்ச்சிக்காகவும், ஆவண உருவாக்கத்திற்காகவும் நிறைய விலங்கியலாளர்கள் தேவைப்படுகின்றனர். விலங்குக்காட்சி சாலை, வனவிலங்கு பணிகள், தாவரவியல் பூங்காக்கள், விலங்குப் பாதுகாப்பு நிறுவனங்கள், தேசிய பூங்காக்கள், இயற்கை பாதுகாப்புப் பகுதிகள், பல்கலைக் கழகங்கள், ஆய்வகங்கள், நீர்வாழ் உயிரி வளர்ப்பு, விலங்கு மருத்துவமனைகள், உண்ணத்தகுந்த மீன் வளர்ப்பு, அருங்காட்சியகங்கள், ஆய்வுப்பணிகள், மருந்தாக்கவியல் நிறுவனங்கள், கால்நடை மருத்துவமனைகள் போன்ற இடங்களில் விலங்கியலாளர்கள் பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள்.
அதே போன்று நீ ஒரு தொழில் முனைவோராக மாற விரும்பினால் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பண்ணை விலங்குகளை வளர்க்கும் முறைகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் அறிந்திருக்க வேண்டும். வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே காட்டு விலங்குகளை வீட்டு விலங்குகளாக மாற்றி, அவற்றைக் கட்டுப்படுத்தி,பல்வேறு வேலைகளுக்கு நாம் பயன்படுத்தினோம். ஒரு தொழிற்சாலையின் பொருளாதார வெற்றியானது அங்குள்ள விலங்குகள், அவற்றிலிருந்து கிடைக்கும் பொருட்கள், முறையான உற்பத்தி மற்றும் அடுத்த தலைமுறை விலங்குகளை உருவாக்குதல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.