மண்புழு வளர்ப்பு, மண்புழு உரமாக்கல், நன்மைகள் - மண்புழு தொழில்நுட்பம் | 9th Science : Economic Biology
மண்புழு தொழில்நுட்பம்
தரமான பயிர்களை உருவாக்க வழிவகுக்கும் வகையில், கரிமப் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நீடித்த விவசாயம் பற்றிய சிந்தனை போன்றவை விவசாயிகளின் மத்தியில் சமீப காலமாக முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. மண்ணின் வளத்தைப் பராமரித்தல் என்பது,
நீடித்த உற்பத்திக்கு மிகவும் அவசியமானதாகும். இது மண்புழு தொழில்நுட்பம் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
செயற்கையான முறையில் மண்புழுக்களை வளர்ப்பதும், இயற்கையான கரிமக் கழிவுகளிலிருந்து மண்புழு உரத்தை உருவாக்குவதும்,
அவற்றைப் பயன்படுத்துவதும் மண்புழு வளர்த்தலில் அடங்கியுள்ளது.
பல்வேறு வகையான மண்புழுக்கள் மண்ணில் வாழ்கின்றன. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டுமே மண்புழு உரம் தயாரிப்பில் பயன்படுத்தமுடியும். அவையாவன: பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ் (இந்திய நீலவண்ண மண்புழு), எஸ்செனியா பெடிடா (சிவப்பு மண்புழு) மற்றும் யூட்ரிலஸ் யூஜினியே (இரவில் ஊர்ந்து செல்லும் ஆப்பிரிக்க மண்புழு).
உயிரியல் கழிவுகளை மண்புழுக்கள் மூலம் ஊட்டச்சத்து மிக்க கரிம உரமாக மாற்றுவதே மண்புழு உரமாக்கல் எனப்படும். இது கரிம வேளாண்மையின் முக்கியப் பகுதியாகும். இவை கரிமப் பொருள்களை உண்டு, எச்சத்தை வெளியேற்றுகின்றன. இது பொதுவாக மண்புழு உரம் என்று அழைக்கப்டுகிறது.
மண்புழு உரம்
கரிமப் பொருள்களை மண்புழுக்கள் சிதைவடையச் செய்வதால் உருவாகும் மென்மையான,
துகள் போன்ற கழிவுப் பொருள்களே மண்புழு உரம் எனப்படும். மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளை இது மேம்படுத்துவதோடு, மண்ணிற்கேற்ற உரமாகவும் மாறுகின்றது.
தேவையான மூலப்பொருள்கள்
உயிரியல் முறையில் சிதைவடையக் கூடிய கரிமக் கழிவுகள் மண்புழு உரம் தயாரித்தலில் மிக முக்கியமான கரிம மூலங்களாக பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன:
● விவசாயக் கழிவுகள் (பயிர்க் கழிவுகள்,
காய்கறிக் கழிவுகள், கரும்பின் கழிவுகள்)
● பயிர்க் கழிவுகள்,
(நெல் வைக்கோல்,
தேயிலைக் கழிவு, தானிய மற்றும் பருப்பு வகைக் கழிவு, அரிசி உமி, புகையிலைக் கழிவு, நார்க் கழிவு)
● இலைக் குப்பைகள்
● பழ மற்றும் காய்கறிக் கழிவுகள்
● விலங்குக் கழிவுகள் (மாட்டுச் சாணம்,
கோழி எச்சங்கள், பன்றிக் கழிவுகள் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் கழிவுகள்)
● சாண எரிவாயுக் கழிவுகள்
தொட்டி முறையில் மண்புழு உரமாக்கல்
இது மண்புழுக்களை, தொட்டி அல்லது கொள்கலன்களில் வளர்க்கும் முறையாகும். கொள்கலனின் பாதி அளவிற்கு, வீணான அட்டைகள், இலைகள், நெல் உமி, வைக்கோல், மர உமி மற்றும் தழை உரங்கள் ஆகியவை அடுக்குகளாக நிரப்பப்படுகின்றன. சிறிதளவு மண் அல்லது மணல் சேர்க்கப்பட்டு புழுக்களுக்குத் தேவையான இடைவெளி வழங்கப்படுகிறது. புழுக்கள் எளிதாக நகரும் வகையில்,
பரப்பப்பட்ட பொருள்கள் மீது நீரைத்தெளித்து ஈரப்பத்ததை அதிகரிக்கவேண்டும். மண்புழுக்களை அவற்றின் மீது மெதுவாக பரப்பிவிட வேண்டும்.
கரிமக் கழிவுகள் (சமையறைக்கழிவுகள் மற்றும் பழக்கழிவுகள்) அதன்மீது சேர்க்கப்படுகின்றன. அவை,
மண்புழுக்களால் உண்ணப்படுகின்றன. ஈரப்பதத்தைக் காக்கவும்,
இருண்ட சூழலை வழங்கவும், பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும்,
தொட்டியானது, தென்னங்கீற்றுகளாலும், கோணிகளாலும் மூடப்படுகிறது. அறுபது நாட்களுக்குப் பிறகு இந்தக் கழிவுகள் மண்புழுக்களால் எச்சமாக வெளியிடப்பட்ட ஊட்டச்சத்து மிக்க பொருள்களாகின்றன. அவை சேகரிக்கப்பட்டு,
கரிம உரமாக பயன்படுத்தப்படுகின்றன.
மண்புழு உரத்தின் நன்மைகள்
மண்புழு உரமானது, அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும், இது நிறம் மற்றும் தோற்றத்தில் தொழு உரத்தினைப் போலவே இருக்கும்.
செயல்பாடு 4
உனது பள்ளி வளாகம் மற்றும் தோட்டத்தில் காணப்படும் கரிமக் கழிவுப் பொருள்களைக் கொண்டு, மண்புழு உரம் தயார் செய்க.
உருளை வடிவ கொள்கலன் அல்லது தொட்டிகளில் தயார் செய்து ஏற்ற ஒளி மற்றும் வெப்பநிலை உள்ள இடத்தில் வைக்கலாம்.
● இது தாவர வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து மூலமாகும். இது மண்ணை வளப்படுத்துகிறது.
● இது மண்ணின் அமைப்பு,
வடிவம், காற்றோட்டம், நீரைத் தக்கவைத்திருக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு,
மண் அரிப்பையும் தடுக்கிறது.
● தாவரங்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்குத் தேவையான முக்கிய வைட்டமின்கள்,
நொதிகள் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பொருள்களைக் கொண்டுள்ளது.
● கரிமப் பொருள்கள் மண்ணில் சிதைவடைவதை இது மேம்படுத்துகிறது.
● நோய்க்கிருமிகள் மற்றும் நச்சுத்தன்மை அற்றது.
● மண்புழு உரமானது, நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது.