ஆற்றல் வளங்கள்
மின்சாரம்
உற்பத்தி செய்ய பயன்படும் வளங்களை எரிசக்தி வளங்கள் என்று அழைக்கின்றோம்.
மின்சாரம் நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் ஆகும். தினசரி வாழ்க்கையில்
நம்மால் மின்சார பயன்பாடு இன்றி இருக்க முடியாது. இது அனைத்து பொருளாதார
நடவடிக்கைகள் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு மூலாதாரமாக உள்ளது. ஏற்கனவே
குறிப்பிட்டுள்ளது போல் ஆற்றல் வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளம் மற்றும்
புதுப்பிக்க இயலாத வளங்கள் என வகைப்படுத்தப்படுள்ளன.
நிலக்கரி
என்பது எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரக கனிமம் ஆகும். இது
படிவுப் பாறைகளில் கிடைக்கிறது. ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்ச்சிக்கு மிக
இன்றியமையாததாக இருப்பதால் இது கருப்பு தங்கம் (Black
gold) என அழைக்கப்படுகிறது. கரிம அளவின் அடிப்படையில்
நிலக்கரி கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
ஆந்தரசைட் :
80 முதல் 90%
பிட்டுமினஸ் : 60 முதல்
80%
பழுப்பு நிலக்கரி : 40 முதல்
60%
மரக்கரி : 40 % த்திற்கும்
குறைவு.
பல்வேறு
வகையான பயன்பாடுகளின் காரணமாக நிலக்கரி இந்தியாவின் மிக முக்கியமான ஆற்றல் மூலமாக
விளங்குகிறது. இதை வாயுவாகவும், எண்ணெயாகவும் மற்றும் அனல் மின்சக்தியாகவும்
மாற்ற இயலும். மேலும் இரசாயனங்கள், சாயங்கள்,
உரங்கள்,
வர்ணப்பூசுதல்
மற்றும் வெடி மருந்துகள் போன்ற பொருள்கள் தயாரிப்பிற்கும் மூலப் பொருளாக
பயன்படுகின்றன.
இந்தியாவில்
காணப்படும் நிலக்கரி வயல்கள், கோண்டுவானா தொடர் பறைகளோடு தொடர்புடையவை. இவை
தீபகற்ப இந்தியப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. நாட்டின் மொத்த நிலக்கரி
படிவுகளில் 90 சதவிகிதத்தை ஜார்கண்ட்,
ஒடிசா,
மேற்கு
வங்காளம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்கள் கொண்டுள்ளன. (2%
நிலக்கரி
மூன்றாம் நிலையைச் சார்ந்தது. அசாம் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் இவ்வகை அதிகமாகக்
காணப்படுகிறது).
இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்திய நிலக்கரி நிறுவனம் மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது உலக அளவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.
ஜார்கண்ட்
மாநிலம் இந்தியாவில் அதிக நிலக்கரி உற்பத்தியைச் செய்கிறது. சத்தீஸ்கர்,
மேற்கு
வங்காளம், மத்தியப்பிரதேசம்,
ஆந்திரப்பிரதேசம்
மற்றும் மகராஷ்டிரா மாநிலங்கள் நிலக்கரி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தென்
மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியப் பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு,
புதுச்சேரி
மற்றும் கேரளா மாநிலங்களில் பழுப்பு நிலக்கரி படிவுகள் காணப்படுகின்றன.
இந்திய
நிலக்கரி அமைச்சகமானது, நிலக்கரி அகழாய்வு மற்றும் உற்பத்தி மேம்பாட்டு
கொள்கைகளை முடிவு செய்கிறது. இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL),
இந்திய
தேசிய பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLCIL) மற்றும் சிங்கரேனி கோலாரிஸ்
நிலக்கரி நிறுவனம் (SCCL) ஆகியன இவ்வமைச்சகத்தின்
பொதுத்துறை நிறுவனங்களாகும்.
பெட்ரோலியம்
என்ற சொல் "பெட்ரோ"
(பாறை) மற்றும் ஓலியம் (எண்ணெய்) என்ற இரு இலத்தின்
சொற்களிலிருந்து பெறப்பட்டது. எனவே பெட்ரோலியம் என்பது புவியிலுள்ள பாறைப் படிவுகளில் பெறப்படும் எண்ணெய் ஆகும்.
இது தாது எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. 90-95
சதவிகிதம்
நீரக கரிமமும், மீதமுள்ள 5-10
சதவிகிதம்
ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்,
கந்தகம்
மற்றும் கரிம உலோகங்களையும் கொண்ட எளிதில் எரியக்கூடிய ஒரு திரவமாகும்.
இந்தியா
- எண்ணெய் சுத்திகரிப்பு
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (MOP & NG) இது இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைச்சகமாகும். இவ்வமைச்சகம் ஆய்வு செய்தல், உற்பத்தி, சுத்திகரித்தல், விநியோகம், ஏற்றுமதி, இறக்குமதி, எண்ணெய் பாதுகப்பு, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய உற்பத்திப் பொருள் போன்றவற்றிற்கு பொறுப்பு ஏற்கிறது.
மேற்கு
கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள்
1.
மும்பை ஹை
எண்ணெய் வயல் (65% மிகப்பெரியது)
2.
குஜராத் கடற்கரை
( 2வது பெரியது
)
3.
பேஸ்ஸைம்
எண்ணெய் வயல் மும்பை ஹையின் தென்பகுதி
4.
அலியாபெத்-எண்ணெய்
வயல் (பவ் நகரின் தென்பகுதி)
5.
அங்கலேஸ்வர்
6.
காம்பே- லூனி
பகுதிகள்
7.
அகமதாபாத்-
கலோல் பகுதி
கிழக்கு
கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள்
1.
பிரம்மபுத்திரா
பள்ளத்தாக்கு, (திப்ருகார், சில்சாகர், மாவட்டங்கள்
அசாம்)
2.
திக்பாய்
எண்ணெய் வயல் (நாட்டின் மிகப் பழமையான எண்ணெய் வயல்)
3.
நாகர்காட்டியா
எண்ணெய் வயல் (திக்பாய்க்கு தென்மேற்கு பகுதி)
4.
மோரான் ஹக்ரிஜன்
- எண்ணெய் வயல் (நாகர்காட்டியாவின் தென்மேற்கு பகுதி)
5.
ருத்ரசாகர்-லாவா
எண்ணெய் வயல்கள் (அசாம் மாநிலத்தில் சிப்சாகர் மாவட்டம்)
6.
சர்மா பள்ளத்தாக்கு-
(பதர்பூர், மாசிம்பூர், பதாரியா)
7. அந்தமான் நிகோபாரின் உட்பகுதிகள், மன்னார் வளைகுடா, பலேஷ்வர் கடற்கரை, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம்
பெட்ரோலியமானது
எரிசக்தி உற்பத்திக்கும், வாகனங்கள்,
வானூர்திகள்,
கப்பல்கள்
மற்றும் இரயில்களுக்கு எரிபொருளாகவும் பயன்படுகிறது. மசகு எண்ணெய்,
மண்ணெண்ணெய்,
களிம்புகள்,
தார்,
சோப்பு,
டெர்லின்,
மெழுகு
ஆகியன இதன் உப உற்பத்தி பொருள்கள் ஆகும். இந்தியாவில் கச்சா எண்ணெயானது கடற்கரைப்
பகுதிகளிலும், உள்நாட்டுப் பகுதிகளிலும் கிடைக்கின்றது.
இயற்கை
எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது. இது இயற்கையாக
உருவாகும் ஒரு நீர்ம கரிம வாயுவாகும். இவற்றின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவும்
பல்வேறு அளவுகளில் உள்ள மதுக்கரியம் (alkaline) சிறிய
சதவிகிதத்திலான கார்பன் - டை - ஆக்ஸைடு, நைட்ரஜன்
மற்றும் நைட்ரஜன் சல்பைடு கலந்த கலவைகளால் ஆனது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும்
அழுத்தம் காரணமாக மட்குவதன் மூலம் உண்டாக்கூடிய ஒரு வாயு. இது
வெப்பப்படுத்தலுக்கும், சமையலுக்கும் மின் உற்பத்திக்கும் ஆதாரமாக
விளங்குகிறது. மேலும் வாகனங்களுக்கு எரிபொருளாகவும்,
நெகிழிகள்
உற்பத்தி, வியாபார முக்கியத்துவம் வாய்ந்த கரிம இரசாயனப்
பொருள்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.
கெயில்
நிறுவனம் (GAIL): இந்திய
இயற்கை எரிவாயு நிறுவனமானது மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு
நிறுவனமாகும். இது இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும்
நிறுவனங்களுள் ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில்
உள்ளது.
வட இந்தியப் பகுதிகள் அதிக அளவிலான மூன்றாம் நிலைப் பாறைகள் மற்றும் வண்டல் படிவுகளைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் ஆழம் குறைந்த, கடலுக்கு அடியில் இருந்தபடிவுப்பாறைகள், எண்ணெய் மற்றும் இயற்கை வாயுப் படிவுகளாக உருவாகின. அதிக அளவிலான இயற்கை எரிவாயு மும்பை ஹை மற்றும் பேஸ்ஸைம் எண்ணெய் வயல் பகுதிகளில் காணப்படுகிறது. குஜராத், அசாம், தமிழ்நாடு (நெய்பள்ளத்தூர் மற்றும் மங்கமடம் (தஞ்சாவூர்), திரிபுரா, இராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளது.
அழுத்தப்பட்ட
இயற்கை எரிவாயு (CNG) (அதிக அழுத்தத்துடன் அடைக்கப்பட்ட மீத்தேன்)
என்பது பெட்ரோல், டீசல் மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு
ஆகியவற்றிற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ஒரு எரிபொருளாகும். இது காற்றை விட
இலகுவானதாகவும், அதிகவேகமாக பரவும் தன்மைக் கொண்டதால் விரைவில்
மறைந்து விடுகிறது. இதனால் மற்ற எரிபொருள்களை விட ஆபத்து குறைவானதாகும். விவசாயக்
கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் உயிரிவாயு, புதுடெல்லி, அகமதாபாத், மும்பை , பூனா, கொல்கத்தா, லக்னோ , கான்பூர், வாராணாசி
போன்ற நகரங்களில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
மரபுசார்
ஆற்றல் வளங்கள்
அ) அனல் மின்சக்தி
உயிரினப்
படிமங்களான நிலக்கரி, பெட்ரோலியம்,
டீசல்
மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றிலிருந்து அனல் மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. தேசிய
அனல்மின் நிறுவனம் (NTPC)1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தற்சமயம் தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் 13 நிலக்கரி சார் அனல்மின் திட்டங்களும்
7 இயற்கை எரிவாயு திரவ எரிப்பொருள் சார்ந்த அனல்மின் திட்டங்களும் அசாம்,
பீகார்,
ஜார்கண்ட்,
சத்தீஸ்கர்,
மிசோரம்
மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. நெய்வேலி,
மேட்டூர்,
தூத்துக்குடி
மற்றும் எண்ணூர் ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய அனல் மின் நிலையங்களாகும்.
ஆ) அணுசக்தி
அணுக்கரு பிளவு அல்லது இணையும் போது வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிக்கப்படுகிறது. யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களிலிருந்து அணுசக்தி பெறப்படுகிறது. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் 1969ஆம் அண்டு மும்பைக்கு அருகில் உள்ள தாராப்பூரில் நிறுவப்பட்டது. பின்னர் இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாவிற்கு அருகில் உள்ள (100 மெகாவாட்) இரவத் பட்டா (335 மெகாவாட்) என்னுமிடத்தில் அணு மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் கல்பாக்கம் (440 மெகாவாட்) மற்றும் கூடங்குளம் (2,000 மெகாவாட்), உத்தரப்பிரதேசத்தில் நரோரா (235 மெகாவாட்), கர்நாடகாவில் கைகா (235 மெகாவாட்), குஜராத்தில் காக்கரபாரா (235 மெகாவாட்) ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்திய
அணு மின்சக்தி நிறுவனம் (NPCIL) இந்தியாவின் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது
மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அரசு
நிறுவனமாகும். இந்நிறுவனம் அணு மின்சக்தி உற்பத்திக்கான பொறுப்பை வகிக்கிறது.
புதுப்பிக்கக்கூடிய
வளங்கள்
நீர்மின்சக்தி
ஓடும் நீரிலிருந்து பெறப்படுகிறது. இம்மின் சக்தி மாசற்ற மற்றும் பொருளாதார
முக்கியத்துவம் வாய்ந்த மின் ஆற்றலாக கருதப்படுகிறது. நீர் மின்சக்தி உலக மின்
தேவையில் 7 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்கிறது.
புதுப்பிக்கக்கூடிய வளத்திலிருந்து பெறப்படுவதால் மற்ற மின்சார ஆற்றல்களோடு
ஒப்பிடுகையில் குறைந்த உற்பத்திச் செலவை உடையதாகவுள்ளது. இது தேவைக்கு ஏற்ப
உற்பத்தியை உடனடியாக அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடிய தன்மையுடையது.
இந்தியாவானது
நீர்மின்சக்தி உற்பத்தி செய்வதற்கான மிக அதிக திறனை பெற்றுள்ள ஒரு மிகச் சிறந்த
ஒரு நாடாக உள்ளது.
உங்களுக்குத்
தெரியுமா?
இந்தியாவின்
முதல் நீர்மின் நிலையம் 1897ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் நிறுவப்பட்டது.
இந்திய
தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் ஃபரிதாபாத்தில் அமைந்துள்ளது.
சூரிய
ஆற்றல் சூரிய ஒளியை நேரடியாகவோ மின் அழுத்திக் கொண்டோ அல்லது செறிவூட்டம் கொண்ட
சூரிய ஆற்றல் மூலம் மின்னாற்றலாக மற்றப்படுதலாகும். செறிவூட்டல் முறையில் பெரிய
பரப்பளவில் உண்டாகும் சூரிய ஒளிக்கற்றைகள் வில்லைகள் அல்லது கண்ணாடிகள் கொண்டு
சிறிய ஒளிக்கற்றையாக ஒரு கலத்தின் மீது குவிக்கப்படுகிறது. மின் அழுத்திகள்,
ஒளிமின்
விளைவு செயல்பாட்டின் மூலம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன.
இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனம் புதுடெல்லியை தலைமை இடமாக கொண்டு உள்ளது.
மின்விநியோகம், சந்தைப்படுத்துதல், வீடுகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல்வேறு வகையான வெப்ப ஆற்றலை வழங்குதல் போன்றவை சூரிய வெப்ப ஆற்றல் திட்டத்தின் முக்கிய பல்நோக்கங்கள் ஆகும். இதனை மரபுசாரா எரிசக்தி வள அமைச்சகம் (MNES) செயல்படுத்தி வருகிறது. சூரிய ஆற்றலானது நீர் கொதிகலன்கள், குளிர் சாதனப்பெட்டிகள், உலர்ப்பான்கள், தெருவிளக்குகள், சமையல், நீரேற்றுதல், மின்சார உற்பத்தி, மின் அழுத்திகள், அழகு நிலையங்கள் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. ஆந்திரப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
காற்று
வீச்சு அல்லது உந்துதலால் ஏற்படும் ஆற்றலை காற்று விசைச்சுற்று கலன்களின் உதவியோடு
மின்னாற்றலாக மாற்றப்பட்டு காற்றாலை மின்சாரம் பெறப்படுகிறது. இது ஒரு மலிவான
மற்றும் மாசற்ற ஆற்றல் வளமாகும். காற்றாலை மின்சாரமானது நீர் ஏற்றுவதற்கும்,
கப்பல்களை
இயக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. காற்று சக்தியானது மிக அதிகமாக
கிடைக்கக்கூடிய, புதுப்பிக்கத்தக்க,
அனைத்துப்
பகுதிகளிலும் பரவி இருக்கின்ற, சுத்தமான,
மாசற்ற
புவிமண்டலத்தை வெப்பமயமாக்கும் வாயுக்களை வெளிப்படுத்தாத ஒரு வளமாகும். காற்றாலை நிறுவுவதற்கு
குறைவான இடமே போதுமானது.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவிலேயே அதிக அளவு
காற்றாலைகளைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கன்னியாகுமரி
மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் - பெருங்குடிப்பகுதி உலகிலேயே அதிக காற்றாலைகளைக்
கொண்ட பெரிய காற்றாலை பண்ணை ஆகும்.
இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி 1986ஆம் ஆண்டு முதன் முதலில் குஜராத்தில் உள்ள கடற்கரைப்பகுதியான ஓகா, மகாராஷ்டிரா கடற்கரைப்பகுதியான இரத்தினகிரி, தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைப் பகுதியான தூத்துக்குடியில் 55 கிலோவாட் உற்பத்தி திறனுடன் நிறுவப்பட்ட காற்றாலைகள் மூலம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. கடந்த சில வருடங்களாக இதன் உற்பத்தி திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்தியா உலக அளவில் அதிக காற்றாலைத் திறன் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ளது.
தேசிய
காற்றாற்றல் நிறுவனம் (NIEW)
சென்னையிலுள்ள
இந்நிறுவனம் 1998இல் ஒரு தன்னாட்சி நிறுவனமாக புதிய மற்றும்
புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள் அமைச்சக நிர்வாகத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது.
இதன் பணிகளானது காற்று வள மதிப்பிடு ஆய்வு மற்றும் சான்றளித்தல் ஆகும்.
விலங்குகளின்
கழிவுகள், சமையல் கழிவுகள்,
ஆகாய
தாமரை கழிவுகள், வேளாண்கழிவுகள் மற்றும் நகரக் கழிவுகள் போன்ற
உயிரின கழிவுகளிலிருந்து உயிரி சக்தி பெறப்படுகிறது. இது மாசற்ற மற்றும் மலிவான
ஒரு எரிசக்தி வளமாகும். உயிரி எரிசக்தி பெரும்பாலும் வீட்டு உபயோகங்களுக்கு
பயன்படுத்தப்படுகிறது.
கடல்
ஓதங்கள் மற்றும் கடல் அலைகள் என இரண்டு வள ஆதாரங்களிலிருந்து மின் ஆற்றல்
பெறப்படுகிறது. காம்பே வளைகுடா ஓத சக்தி உற்பத்திக்கு மிக உகந்த இடமாக உள்ளது.
இவற்றிற்கு அடுத்தாற்போல் கட்ச் வளைகுடா பகுதி (1000
MW), சுந்தரவனப்பகுதி (100
MW) ஆகியன இதர குறிப்பிடதக்க திறன் பெற்ற பகுதிகளாகும்.
150 KW உற்பத்தி திறன் கொண்ட அலை சக்தி ஆலை,
திருவனந்தபுரத்திற்கு
அருகில் உள்ள விழிஞ்சம் என்ற பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு ஆலை
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.