இந்தியாவில் நிர்வாக அமைப்பு | அரசியல் அறிவியல் - இந்தியாவில் நிர்வாகக் கட்டமைப்பு | 12th Political Science : Chapter 6 : Administrative Machinery in India
இந்தியாவில் நிர்வாக அமைப்பு
கற்றலின் நோக்கங்கள்
* அரசுத்துறையின் நிர்வாக அமைப்பு திறம்பட செயல்படத் தேவையான அறிவு, திறன் மதிப்பீடு குறித்து அறிதல்.
* அரசுத்துறையில் நிர்வாக அமைப்பு வழங்கும் வேலை வாய்ப்புகள் குறித்தத்தகவல்களை மாணவர்களுக்கு வழங்குதல்.
* இந்தியாவின் நிர்வாக அமைப்பைப் புரிந்து கொள்ள உதவுதல்.
* மத்திய அளவில், இந்திய நிர்வாக அமைப்பின் செயல்பாடுகளையும், மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவற்றின் பொறுப்புகளையும் அறிதல்.
* மாறி வரும் அரசு, சந்தை, பொருளாதார சூழ்நிலையில் இந்திய நிர்வாகத்தில் எழும் சிக்கல்களைப் புரிதல்.
* இந்திய நிர்வாகத்தின் வரலாற்று பரிணாமம், சமூக பொருளாதார, அரசியல், கலாச்சார மற்றும் உலக சூழல் போன்ற பொருத்தப்பாடுகள் புரிதல்.
இந்தியாவில் நிர்வாகக் கட்டமைப்பு
இந்திய நிர்வாகத்தின் தற்போதைய நிலை:
இந்தியாவின் அரசமைப்பானது மையப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பையே வழங்குகிறது. அரசு வகைமைகளில் பணியாளர் இரண்டு உயர்நிலை நிர்வாகங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஒன்று மத்திய அரசு நிர்வாகம், இரண்டு மாநில நிர்வாகம் நிர்வாகப் பணிகள் அனைத்தும் மத்திய அரசின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டவைகள். தாராளமயமாக்கல் என்பதன் பொருள், அதிகாரவர்க்கம் அதிக வேலைப்பளுவில் இருந்து விடுபடும் என்பதல்ல. மாறாக, தனியார் துறை மீதான அரசுக் கட்டுப்பாடுகளைக் குறைப்பதாகும். அதேநேரத்தில் கொள்கை உருவாக்கம் மற்றும் கொள்கை அமலாக்கம் ஆகியவற்றில் அண்மைக்காலத்தில் அதிகம் மையப்படுத்தும் போக்கினை நாம் காண்கிறோம். மக்களாட்சி சமதர்மம் மற்றும் கலப்புப் பொருளாதார அமைப்புக்காக பணியாற்றிய இந்திய நிர்வாக அமைப்பின் கரங்களில் தற்போது அதிக தனியார்மயமாக்கத்துக்காகவும் மேலும் அதிக மையப்படுத்தப்பட்ட வரி அமைப்புக்காகவும் பணியாற்றும் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இப்புதிய ஏற்பாடே தற்போது புதிய அரசு மேலாண்மை (என்.பி.எம்) என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் நிர்வாக அமைப்பு மாறிவரும் பொருளாதார கட்டமைப்பிற்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியப் பொருளாதாரம் தனது உள்நாட்டு சந்தையை உள்ளூர் தனியார் நிறுவனங்களுக்கும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் திறந்துவிட வேண்டும். வணிக முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், அரசு முதலீடுகளை திரும்பப் பெறுதல், வரிவிதிப்பை மையப்படுத்துதல், மானியங்களை நீக்க நடவடிக்கை எடுக்க இந்திய நிறுவாக அமைப்பு ஈடுபட வேண்டும். தனியார்மயமாக்கலின் எதிரொளியாக சுரங்கம், துறைமுகம், பெட்ரோலியம், விமான போக்குவரத்து போன்றவை அமைப்பு ரீதியாக தனியார்மையமாக்கப்பட்டுள்ளன. அன்னிய முதலீட்டுக்காக பன்னாட்டு நிறுவனங்களையும், உள்நாட்டு தனியார் முதலீடுகளையும் எல்லாம் சேர்த்துள்ளது, மேலும் இந்திய அதிகாரவர்க்கம் சர்வதேச அமைப்புகளான உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச நிதி ஆணையம் போன்றவற்றின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டியுள்ளது.
இந்த வழிகாட்டுதலின்படியே கீழ்க்கண்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டன. அவை
1.இந்தியக் காப்பீடு மற்றும் ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (IRDA)
2. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)
3. இந்தியப் போட்டிகள் ஆணையம் (CCI)
4. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (PFRDA) 5. இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)
மேலும் புதிய ஒழுங்குமுறை ஆணையங்களை உள்கட்டமைப்பு, சுரங்கம் ஆகிய துறைகளில் தொடங்கவும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இவ்வகையான சீர்த்திருத்தங்கள் வரி நிர்வாகத்திலும் தொடர்கின்றன. உதாரணமாக, மதிப்புக் கூட்டுவரி (VAT) மற்றும் பொருள்கள் மற்றும் சேவை வரியை (GST) குறிப்பிடலாம்.