திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் | அரசியல் அறிவியல் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 8 : Planning and Development Politics
அருஞ்சொற்பொருள்
❖ ஐந்தாண்டு திட்டம்: விடுதலைக்குப் பின்னர் ஒருங்கிணைந்த மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவை ஐந்தாண்டுகளுக்கு திட்டமிடப்பட்டதால் ஐந்தாண்டுத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
❖ மக்கள் நல அரசு: ஒரு மக்கள் நல அரசு என்பது அனைத்து குடிமக்களின் சமூகபொருளாதார நலன்களையும் கவனம் கொள்வதாக இருக்க வேண்டும்.
❖ பொதுத்துறை: ஒரு நாட்டில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பொருளாதாரத்தின் ஒரு பகுதியை கொண்டு வரப்படுவதை பொதுத்துறை குறிக்கிறது. பொதுசேவைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இவற்றில் அடங்கும்.
❖ தனியார்துறை: இவை அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருவதில்லை. தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுவினரால் இலாப நோக்கில் நடத்தப்படும் அல்லது முதலீடு செய்யப்படும் நிறுவனங்கள் தனியார்துறை நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
❖ நிர்வாக சீர்திருத்த ஆணையம்: இந்திய பொது நிர்வாக அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்களைப் பரிந்துரை செய்வதற்காக இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆணையம்.
❖ திட்டமிட்ட பொருளாதாரம்: ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் உற்பத்தி திட்டங்களுக்கு ஏற்ப மூலதனம் மற்றும் மூலதன பொருள்கள் அளவை இலக்கிடும் பொருளாதார அமைப்பு திட்டமிட்ட பொருளாதாரம் எனப்படுகிறது.
❖ மூலதனப் பொருள்கள்: நேரடியாக நுகர்வோரால் பயன்படுத்தப்படாமல் பொருள் உற்பத்திக்கு தேவைப்படும் உற்பத்தி பொருள்கள்.
❖ தாராளமயமாக்கல்: அரசு மற்றும் தனியார் நடவடிக்கைகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விலக்கப்படுவது தாராளமயமாக்கல். பொதுவாக பொருளாதார தாராளமயமாக்கலை இது குறிக்கிறது.
❖ அந்நிய செலவாணி சட்டம் (FERA): அந்நிய செலவாணி ஒழுங்குமுறைச் சட்டம் என்பது இந்தியாவில் அந்நிய செலவாணிகள் மற்றும் கட்டடங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமாகும்.
❖ தனிநபர் வருமானம்: இந்தியாவில் தனிநபர் சராசரியாக ஈட்டும் வருமானம் தனிநபர் வருமானம் என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் மொத்த மக்கள் ஈட்டும் வருவாயை மொத்த மக்கள் எண்ணிக்கையால் வகுப்பதால் கிடைப்பதே தனிநபர் வருமானம் ஆகும்.
❖ ஜமீன்தாரர் முறை: ஜமீன்தாரிமுறை பிரித்தானிய காலனி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டதாகும். ஜமீன்தாரர்கள் குறிப்பிட்டப் பகுதி நிலத்தில் உரிமையாளர்களாக ஆக்கப்பட்டு அந்த நிலத்திலிருந்து வரி / தீர்வை / வாடகை வசூலித்து அரசுக்கு வழங்க வேண்டும்.
❖ நில உச்சவரம்பு சட்டம்: ஒரு தனிநபர் அதிகபட்சம் எவ்வளவு நிலம் உடமையாகக் கொள்ளலாம் என்பதை வரையறுக்கும் சட்டம் நில உச்சவரம்பு சட்டம் என்று கூறலாம். நகர்ப்புற மக்களுக்கான நில உச்சவரம்பு சட்டம் 1976இல் கொண்டுவரப்பட்டது.)
❖ நகர்மயமாக்கல்: கிராமப்பகுதிகளிலிருந்து நகரங்களை நோக்கி இடம் பெயர்வது நகர்மயமாக்கல் ஆகும். இதனால் நகர்ப்புறப் பகுதி மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தனிநபர் மற்றும் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
❖ கால்நடை வளர்ப்பு: மக்களின் உணவு மற்றும் இதர தேவைகளுக்காக விலங்குகள் பழக்கப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுவதாகும். இறைச்சி, இழைகள், பால், முட்டை போன்ற பொருள்கள் கால்நடை வளர்ப்பின் மூலம் சமுதாயத்திற்கு கிடைக்கிறது.
❖ கிராம-நகர்ப்புற ஏற்றத்தாழ்வு: வருவாய், விநியோகம், நுகர்வு, வாழ்க்கைத்தரம் அனைத்திலும் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களிடையே காணப்படும் பெரும் இடைவெளி கிராம நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகள் எனப்படுகிறது.
❖ உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP): பொதுவாக ஒரு ஆண்டின் ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் மொத்த உற்பத்தி பொருள்கள் மற்றும் சேவைகளின் கூட்டுமதிப்பினை அளவிடும் அலகு உள்நாட்டு மொத்த உற்பத்தி ஆகும்.