இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: வேற்றுமை | 8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila
இயல் நான்கு
கற்கண்டு
வேற்றுமை
பாவை அண்ணன் பார்த்து, "அண்ணன் எனக்கு ஓர்
உதவி செய்வாயா?"
என்று கேட்டாள். "இந்த அண்ணன் செய்ய முடிந்த உதவி என்றால்
உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன். "என் அண்ணன் உள்ளம் எனக்குத் தெரியும்.
என் அண்ணன் என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.
மேலே உள்ள பகுதியைப் படித்துப் பாருங்கள். இதில் கூறப்பட்டுள்ள
செய்தியைப் புரிந்துகொள்ள இயலாதவாறு ஒரு குழப்பம் உள்ளது அல்லவா?
இதே பகுதியைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள்.
பாவை அண்ணனைப் பார்த்து, "அண்ணா எனக்கு ஓர் உதவி
செய்வாயா?" என்று கேட்டாள். 'இந்த அண்ணனால் செய்ய
முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன். "என் அண்ணனது
உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணனுக்கு என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றான்
பாவை.
இப்போது எளிதாகப் பொருள் புரிகிறது அல்லவா?
இரண்டாம் பகுதியில் அண்ணன் என்னும் பெயர்ச்சொல் அண்ணனை, அண்ணா, அண்ணனால், அண்ணனுக்கு, என்றெல்லாம் மாற்றப்பட்டிருப்பதால்
பொருள் தெளிவாக விளங்குகிறது. அண்ணன் என்னும் பெயர்ச்சொல்லுடன் ஐ. ஆல், கு, இன், அது போன்ற அசைகள் இணைந்து
அச்சொல்லின் பொருளைப் பல்வேறு வகையாக வேறுபடுத்துகின்றன. இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை
என்பர். இதற்காகப் பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை
வேற்றுமை உருபுகள் என்று கூறுவர்.
தெரிந்து தெளிவோம்
● சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே
வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.
● ஓவியர் தூரிகையால் ஓவியம் திட்டினார். இதில்
ஆல் என்பது வேற்றுமை உருபாக வந்துள்ளது.
● ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இதில்
கொண்டு என்பது சொல்லுருபாக வந்துள்ளது.
வேற்றுமையின் வகைகள்
வேற்றுமை எட்டு வகைப்படும். அவை முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை ஆகியனவாகும். முதல் வேற்றுமைக்கும் எட்டாம்
வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய உள்ள
ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு.
தெரிந்து தெளிவோம்
வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை வேற்றுமைத்
தொடர்கள் என்பர். வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து
பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.
முதல் வேற்றுமை
பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும். எழுவாயுடன் வேற்றுமை
உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை
ஆகும். முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும்
குறிப்பிடுவர்.
(எ.கா.) பாவை வந்தாள்.
இரண்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை உருபு ஐ
என்பதாகும்.
கபிலர் பரணரைப் புகழ்ந்தார்.
கபிலரைப் பரணர் புகழ்ந்தார்.
இவ்விரு தொடர்களையும் கவனியுங்கள். இரண்டாம் வேற்றுமை உருபு
( ஐ ) எந்தப் பெயருடன் இணைகிறதோ அப்பெயர் செயப்படுபொருளாக மாறிவிடுகிறது. இவ்வாறு ஒரு
பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவதால்
இரண்டாம் வேற்றுமையைச் செயப்படுபொருள் வேற்றுமை
என்றும் கூறுவர்.
இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறு வகையாள பொருள்களில் வரும்
ஆக்கல் - கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
அழித்தல் - பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்
அடைதல் - கோவலன் மதுரையை அடைந்தான்
நீத்தல் - காமராசர் பதவியைத் துறந்தார்
ஒத்தல் - தமிழ் நமக்கு உயிரைப் போன்றது
உடைமை - வள்ளுவர் பெரும் புகழை உடையவர்
மூன்றாம் வேற்றுமை
ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆகும். இவற்றுள் ஆல், ஆன் ஆகியவை கருவிப்பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும். கருவிப் பொருள் முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி - மரத்தால்
சிலை செய்தான். ஒன்றைச் செய்வதற்குத் துணையாக இருப்பது துணைக்கருவி - உளியால் சிலை
செய்தான்.
கருத்தாப்பொருள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இருவகைப்படும். பிறரைச் செய்யவைப்பது ஏவுதல் கருத்தா - கரிகாவனால்
கல்லணை கட்டப்பட்டது. தானே செய்வது இயற்றுதல் கருத்தா - சேக்கிழாரால் பெரியபுராணம்
இயற்றப்பட்டது. ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும். (எ.கா.)
புறந்தூய்மை நீரான் அமையும்.
ஓடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில்
வரும். (எ.கா.) தாயொடு குழந்தை சென்றது. அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.
நான்காம் வேற்றுமை
நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு கு
என்பதாகும். இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
கொடை - முல்லைக்குத் தேர் கொடுத்தான்.
பகை – புகை மனிதனுக்குப் பகை.
நட்பு – கபிலருக்கு நண்பர் பரணர்.
தகுதி - கவிதைக்கு அழகு கற்பனை.
அதுவாதல் - தயிருக்குப் பால் வாங்கினான்.
பொருட்டு - தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.
முறை - செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ.
எல்லை - தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல்.
தெரிந்து தெளிவோம்
நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும்
அசை சேர்ந்து வருவதும் உண்டு.
(எ.கா.) கூலிக்காக வேலை
ஐந்தாம் வேற்றுமை
இன், இல் ஆகியவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது போன்ற பொருள்களில் வரும்.
நீங்கல் - தலையின் இழிந்த மயிர்
ஒப்பு - பாம்பின் நிறம் ஒரு குட்டி.
எல்லை - தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்.
ஏது - சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்.
ஆறாம் வேற்றுமை
அது, ஆது, அ ஆகியவை ஆறாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.
இவ்வேற்றுமை, உரிமைப்
பொருளில் வரும். உரிமைப் பொருளைக்
கிழமைப் பொருள் என்றும் கூறுவர்.
(எ.கா.) இராமனது வில். நண்பனது கை.
ஆது, அ ஆகிய உருபுகளை இக்காலத்தில் பயன்படுத்துவது
இல்லை.
ஏழாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு கண்.
மேல், கீழ், கால், இல், இடம் போன்ற உருபுகளும் உண்டு.
இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும். (எ.கா.) எங்கள்
ஊரின்கண் மழை பெய்தது. இரவின்கண் மழை பெய்தது.
தெரிந்து தெளிவோம்
இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம்
வேற்றுமையிலும் உண்டு. நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும் இடப் பொருளில்
வந்தால் ஏழாம் வேற்றுமை என்னும் கொள்ள வேண்டும்.
எட்டாம் வேற்றுமை
இது விளிப்பொருளில் வரும். படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக
மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம். இவ்வேற்றுமைக்கு
என்று தனியே உருபு கிடையாது. பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு. அண்ணன் என்பதை அண்ணா
என்றும் புலவர் என்பதைப் புலவரே என்றும் மாற்றி வழங்குவது எட்டாம் வேற்றுமை ஆகும்.
வேற்றுமை உருபுகளும் அவற்றின் பொருள்களும்