தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு - மீட்பு நாளாகக் கடைப்பிடித்தல் | 12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics
மீட்பு நாளாகக் கடைப்பிடித்தல்
1939இல் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. இந்தியாவின்
அரச பிரதிநிதியாக இருந்த லின்லித்கோ இந்தியாவும் போரில் இருப்பதாக உடனடியாக அறிவித்தார்.
காங்கிரசைக் கலந்தாலோசிக்காமல் இம்முடிவு எடுக்கப்பட்டதால் காங்கிரஸ் மிகவும் ஆத்திரமடைந்தது.
காங்கிரஸ் செயற்குழு மாகாணங்களைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமாச்
செய்ய வேண்டுமென முடிவு செய்தது. காங்கிரஸ் அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து மாகாண
ஆளுநர்கள் சட்டமன்றங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்த பின்னர் மாகாண நிர்வாகப் பொறுப்பைத்
தாங்களே ஏற்றுக் கொண்டனர்.
காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்ததை மீட்பு நாளாக
1939 டிசம்பர் 22இல் முஸ்லிம் லீக் கொண்டாடியது. அன்று பல இடங்களில் முஸ்லிம்களுக்கு
எதிராக காங்கிரஸ் மேற்கொண்ட செயல்களுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசியவாத முஸ்லிம்களின் செயல்பாடுகள் இஸ்லாமுக்கு எதிரானதென பெயரிடப்பட்டு சிறுமைபடுத்தப்பட்டன.
இவ்வாறான சூழலில் 1940 மார்ச் 26இல் லாகூரில் முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு தனிநாடு
வேண்டுமென்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது.
பாகிஸ்தான் என்ற எண்ணவோட்டம் 1940இல் முஸ்லிம் லீக் மேடைகளிலிருந்து வெளிப்பட்டாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிஞரும் அறிஞருமான முகமது இக்பாலால் சிந்திக்கப்பட்டதாகும். 1930இல் அலகாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக்கின் ஆண்டுமாநாட்டில் இக்பால் ஒருங்கிணைக்கப்பட்ட வடமேற்கு இந்திய முஸ்லிம் அரசைத் தான் காண விரும்புவதாகக் கூறினார். இது பின்னர் கேம்பிரிட்ஜ் மாணவர்களில் ஒருவரான ரகமது அலியால் வலுவாக வெளிப்படுத்தப்பட்டது. லீக்கின் அடிப்படைக் கோரிக்கையானது இரு நாடு கொள்கை ஆகும். இதனை முதலில் சர் வாசிர் ஹசன் என்பவர்தான் 1937இல் நடைபெற்ற பம்பாய் லீக் மாநாட்டில் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார். இப்பரந்த கண்டத்தில் வாழும் இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு சமூகங்கள் அல்ல, ஆனால் பல வழிகளில் இரு நாட்டினராக கருதுதல் வேண்டும் என்றார்.
முதலில் ஜின்னாவோ , நவாப் ஜாஃபருல்லா கானோ முஸ்லிம்களுக்கு தனி நாடு உருவாக்குவது சாத்தியமாகும் என்று கருதவில்லை . இருந்தபோதிலும் 1940 மார்ச் 23இல் முஸ்லிம் லீக் பின்வருமாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தீர்மானத்தின் வாசகங்கள் பின்வருமாறு: "இது அகில இந்திய முஸ்லிம் லீக்கின், இந்த அமர்வின் ஒருங்கிணைந்த கருத்தாகும். கீழ்க்கண்ட கொள்கைகளைக் கொண்டிராத எந்தவொரு அரசியல் அமைப்புத் திட்டமும் இந்நாட்டில் செயல்பட இயலாது முஸ்லிம்களுக்கு ஏற்புடையாகவும் இருக்காது. அதாவது நிலவியல் அடிப்படையில் நிர்ணயித்து அடுத்தடுத்து அமைந்துள்ள பகுதிகள் மண்டலங்களாக அவற்றின் எல்லைகள் வரையறை செய்யப்பட வேண்டும். தேவைக்கேற்றவாறு மாற்றப்பட்ட, நிலப்பகுதிகளைக் கொண்டவைகளாக அவைகள் அமைதல் வேண்டும். முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் சுதந்திரமான தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும்". பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் நாட்டை இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான் யூனியன் என பிரிவினை செய்ய வேண்டுமென்று முஸ்லிம் லீக் தீர்மானித்தது.